யுவஸ்ரீ பெண்களுக்கான சிறப்புரை (2011)

யுவஸ்ரீ பெண்களுக்கான உரை

13 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கும்,
அவர்களது பெற்றோர்களுக்கும் காம்கேர் புவனேஸ்வரி ஆற்றிய உரை

நிகழ்ச்சி ஏற்பாடு: யுவஸ்ரீ அமைப்பு

இடம்: சுகாசினி திருமண மண்டபம், கிழக்கு தாம்பரம், சென்னை

நாள்: 01-05-2011, ஞாயிறு

நேரம்: காலை 10.00 மணி – 11.00 மணி

ஐ.டி-யில் ஐடியல் பெண்கள்

[தகவல் தொழில்நுட்பத்தில் இலட்சியப் பெண்கள்]

ஐ.டியில் ஐடியல் பெண்கள் – அருமையான விஷயம். இன்றைக்கு மிகவும் தேவையான…அவசியமான விஷயம்…

தகவல் தொழில்நுட்பம்

    முதலில் ஐ.டி என்றால் என்ன என்று பார்ப்போம். Information Technology என்பது தான் சுருக்கமாக IT என்று அழைக்கப்படுகிறது. இதனை தமிழில் தகவல் தொழில்நுட்பம் என்று சொல்லலாம்.

தகவலும், தகவல் பரிமாற்றமும்…

    தகவல் என்பது செய்தி என்பதாகும். தகவலை ஓருடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பரிமாற்றம் செய்வதை தகவல் பரிமாற்றம் என்று சொல்லலாம். ஆதிகாலத்தில் இருந்து இன்று வரை தகவல் பரிமாற்றம் எப்படி நடந்து வருகிறது என்பதை இப்போது பார்க்கலாம்.

சைகை மொழியில்…

    கல் தோன்றி மண் தோன்றாத, ஆரம்ப காலங்களில் மனிதர்கள் சைகை மொழியில் ஒருவருக்கொருவர் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

தங்களுக்குத் தெரிந்த மொழியில்…

    பேசக் கற்றுக் கொண்ட பிறகு, மனிதர்கள் தங்களுக்குத் தெரிந்த மொழிகளில் எண்ணங்களைத் தெரிவிக்கத் தொடங்கினர்.

கடிதங்கள் மூலம்…

    பேச்சுக்குப் பிறகு எழுதக் கற்றுக் கொண்ட மனிதர்கள், தங்களுக்குத் தேவையானதை எழுதி, புறாவின் காலில்  கட்டி தூது அனுப்பத் தொடங்கினர்.

    அதன்பின் கடிதம் மூலம் கருத்துப் பரிமாற்றம் செய்யத் தொடங்கினார்கள் மனிதர்கள்.

இயந்திரங்கள் மூலம்…

    கைகளால் எழுதி கடிதம் -மூலம் கருத்துப் பரிமாற்றம் செய்து வந்த மனிதனுக்கு, இயந்திரம் மூலம் எழுத ஆசை பிறந்தது. விளைவு டைப்ரைட்டிங் இயந்திரம்.

தொலைபேசி மூலம்…

    தூரத்தில் இருக்கும் மனிதர்களோடு பேச தொலைபேசியைக் கண்டுபிடித்து, அதன்மூலம் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளத் தொடங்கினர்.

    இப்படியாக ஒரு கருத்தை மற்றொருவருக்குத் தெரிவிக்க, சைகை மொழி-பேச்சு மொழி-கடிதம்-தொலைபேசி போன்றவைகள் உதவியாக இருந்து வந்தன.

தண்டோராவும், மைக்கும்…

    இருப்பினும், ஒரு கருத்தை ஒரே நேரத்தில் பலருக்குத் தெரிவிக்க என்ன செய்யலாம் என்று மனிதர்கள் யோசிக்கத் தொடங்கினார்கள். விளைவு தண்டோரா. இதன் மூலம் செய்திகளைப் பரப்பக் கற்றுக் கொண்டனர். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, மைக் மூலம் செய்திகளை வெளிப்படுத்தும் முறையை கண்டுபிடித்தனர்.

    தண்டோரா போடும் முறை, மைக் போன்றவைகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அல்லது ஊரில் இருக்கும் மக்களுக்கு மட்டுமே செய்திகளை வெளிப்படுத்த உதவியது.

செய்தித் தாளில் அச்சடித்து…

    ஒரு ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகளை வேறொரு ஊருக்குத் தெரிவிக்க என்ன செய்யலாம் என்று மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கியதன் விளைவே, அச்சுத் தொழில் கண்டுபிடிப்பு. செய்திகளை அச்சடித்து செய்தித்தாள் மூலமாக பரப்ப ஆரம்பித்தனர்.

வானொலி  மூலம்…

காகிதங்களில் வெளிவரும் தகவல்களையும், நிகழ்ச்சிகளையும்  காதால் கேட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்ததின் எதிரொலியே வானொலி கண்டுபிடிப்பு.

தொலைக்காட்சி மூலம்…

ஓரிடத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை, மற்றோர் இடத்தில் நேரடியாகப் பார்க்க, மனிதர்கள் ஆசைப்பட்டதன் தொடக்கமே தொலைக்காட்சி கண்டுபிடிப்பு.

கம்ப்யூட்டர் மூலம்…

கைகளால் எழுதியும், டைப்ரைட்டிங் இயந்திரம் மூலம் அச்சடித்தும், காகிதங்களில் தகவல்களை சேகரித்து கருத்துப் பரிமாற்றம் செய்து வந்த மனிதனுக்கு இயந்திரங்களிலேயே தகவல்களை சேகரிக்கும் ஆவல் ஏற்பட்டது. விளைவு கம்ப்யூட்டர் கண்டுபிடிப்பு.

நீண்ட கால தேவைகளுக்காக தகவல்களை சேகரித்து வைக்கும் இயந்திரமாகவும், கணக்குப் போடும் பெரிய சைஸ் கால்குலேட்டர் போலவும், டைப் ரைட்டருக்கு மாற்றாகவும் ஆரம்ப காலத்தில் கருதப்பட்டு வந்த கம்ப்யூட்டரின் நிலை இன்றில்லை. அவனின்றி ஓரணும் அசையாது என்பதைப் போல கம்ப்யூட்டர் இன்றி இன்று எதுவுமே இயங்காது என்ற ஒரு உயரிய நிலை உருவாகி உள்ளது.

சைகை மொழி முதல் இண்டர்நெட் வரை…

ஆம். இப்படி மனிதர்கள் யோசிக்கத் தொடங்கியதாலும், கற்பனை செய்யக் கற்றுக் கொண்டதாலும், சைகை மொழியில் ஆரம்பித்த மனிதர்களின் தகவல் பரிமாற்றம் செய்தித்தாள், தொலைபேசி, ரேடியோ, டி.வி, கம்ப்யூட்டர்…என வளர்ந்து இன்று இண்டர்நெட் வரை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

தகவல் தொழில்நுட்பம்…

கணிப்பொறித் தொழில்நுட்பமும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பமும் இணைந்து ‘தகவல் தொழில்நுட்பம்’ (Information Technology – IT) உருவாகியுள்ளது. ஆம். இன்று, கம்ப்யூட்டரும், இண்டர்நெட்டும் இணைந்து, தகவல் தொழில் நுட்பத்தை உலகளாவிய அளவில் பிரமாண்டமாக உயரிய நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.

    தகவல் தொழில்நுட்பத்தின் தாக்கத்தை கல்வி நிறுவனங்கள், வங்கிகள், மருத்துவமனைகள், ஆராய்சி நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள்… என்று அனைத்துத் துறைகளிலும் காண முடிகிறது.

ஒவ்வொரு துறைக்கும் பிரத்யேகமான சாஃப்ட்வேர்களை உருவாக்கும் பணியை தகவல்தொழில்நுட்பத் துறையின் பிரதானமான செயல்பாடாகச் சொல்லலாம்.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், ஒரு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் விவரங்கள், டாக்டர்களின் விவரங்களை சேகரித்து அந்த மருத்துவமனையின் முழுமையான செயல்பாடுகளுக்காக ஒரு சாஃப்ட்வேரை உருவாக்குவது தகவல் தொழில்நுட்பத் துறையின் பணியாகும்.

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள்

தகவல் தொழில்நுட்பத்தைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் பெருமளவு வளர்ச்சி பெற்றுள்ளன.  தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளுக்கு IT Enabled Services – ITES என்று பெயர்.

ஒரு பெரிய நிறுவனம் தன்னுடைய அன்றாட நடவடிக்கைகள் அனைத்தையும்,தன்னுடைய நேரடி மேற்பார்வையில், தனது அலுவலகக் கட்டிடத்தில், தன்னுடைய பணியாளர்களைக் கொண்டே நிறைவேற்றிக் கொள்ள,  தொழில்நுட்பத் தேவைகளுக்காகவும், அலுவலகப் பணியாளர்களுக்காகவும், அலுவலக கட்டிடத்துக்காகவும் அதிகமாகச் செலவிட வேண்டியிருக்கும்.  எனவே நிறுவனப் பணிகள் சிலவற்றை அப்பணிகளில் அனுபவம் மிக்க வேறுநிறுவனங்கள் மூலமாக நிறைவேற்றிக் கொள்கின்றன.

கால் செண்டர்கள், பி.பீ.ஓ போன்ற சேவைகளை, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளுக்கு உதாரணமாகச் சொல்லலாம்.

தலைநிமிர்ந்த இந்தியப் பொருளாதாரம்

கடின உழைப்பும், நன்றாக ஆங்கிலம் பேசக்கூடிய திறமையும் உள்ள நம் இந்திய நாட்டு இளைஞர்களைக் குறி வைத்து அமெரிக்கா போன்ற அயல்நாடுகள் தங்கள் பணிகளை நம் இந்திய உழைப்பைக் கொண்டு முடிக்க எண்ணியதன் விளைவாகத் தான், அயல்நாட்டு நிறுவனங்களுக்கான கால்செண்டர்களும், பி.பீ.ஓ-க்களும் ஏராளமாக நம் நாட்டில் உருவாக ஆரம்பித்தன.

ஒரு காலத்தில் நம் நாட்டு இளைஞர்கள் கூட்டம் கூட்டமாய் அயல்நாடுகளுக்கு வேலைக்குச் சென்ற நிலை இன்றில்லை. அயல்நாடுகளே தங்கள் பணிகளை நம் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அனுப்பி வைக்க இங்கே கால்செண்டர்களாகவும், பி.பீ.ஓ-க்களாகவும் நிறுவனங்களை காலூன்றிக் கொண்டுள்ளன. தங்களின் பகல் நேரத்தில், அதாவது, நிம்மதியாக உறங்க வேண்டிய நம் இரவு நேரத்தில், நம் இளைஞர்களை வேலை செய்ய வைத்து, தங்கள் வேலைகளை முடித்துக் கொள்கின்றன.

இதன் காரணமாய், அயல்நாட்டு வருமானம் நம்நாட்டில் பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளது. நம் நாட்டுப் பொருளாதாரம் மிக உயரிய அளவில் வளர ஆரம்பித்து பல காலமாகிறது. இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்கா போன்ற வளர்ந்த அயல்நாடுகளுக்கு மிகப்பெரிய பங்குள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

இலட்சியப் பெண்கள்

பொதுவாகவே பெண்களை பூமிக்கும், காற்றுக்கும், ஆற்றுக்கும், கடலுக்கும், புயலுக்கும், நெருப்புக்கும் ஒப்பிட்டு அவர்களை தெய்வீகத் தன்மை வாய்ந்தவர்களாகவே உருவகப்படுத்தி வந்த நம் இந்தியத் திருநாட்டில் இன்று பெண்களின் நிலை எப்படி இருக்கிறது என்று இப்போது பார்ப்போம்.

மேலோட்டமாகப் பார்த்தால், நம் நாட்டில் பெண்களுக்கு என்றுமே மிக உயரிய இடம் தான். ஆம். நான் ஏற்கனவே சொன்னதைப் போல, பெண்களை இயற்கைக்கு ஒப்பிட்டு, பெண்களும் உயிரும், உணர்வும் உள்ள ஒரு மனுஷிகள் தான் என்பதை மறக்க வைத்து,  அவர்கள் தங்கள் உணர்வுகளை அடக்கியே வாழப் பழகி விட்ட உயிருள்ள சிலைகள் தான் நம் இந்திய நாட்டுப் பெண்கள்.

அன்றையப் பெண்கள்

பொதுவாகவே அந்த காலங்களில் பெண் குழந்தைகளுக்கு, ஆண் குழந்தைகளோடு ஒப்பிடும் போது சற்று மவுசு குறைவாகவே இருந்தது.

கருவில் இருப்பது பெண் குழந்தை என்று தெரிந்தாலே, அதை அழித்துவிடத் துடிக்கும் பெற்றோர்கள் இருந்து வந்தனர். அதனால் தான் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று தெரிந்து கொள்ளும் பரிசோதனைக்கு அனுமதி மறுக்கப்பட்ட சட்டம் கொண்டுவரப்பட்டது.

கருவில் அழிவிலிருந்து இருந்து தப்பிப் பிறந்து விட்டாலோ, பிறந்த அந்தப் பச்சிளம் பெண் குழந்தைகளுக்கு  கல்லிப்பால் கொடுத்து சாகடிக்கும் அளவுக்கு கொடூரம் தாண்டவமாடிக் கொண்டிருந்ததை  நாம் அனைவரும் அறிவோம்.

கருவிலிருக்கும் காலகட்டத்திலிருந்தே, பிரச்சனைகளைச் சுமந்து, பிறந்த பெண் குழந்தைகளுக்கு எல்லாவிதங்களிலும் பிரச்சனைகள் தொடர்ந்து வந்தது.

ஆண் குழந்தைகளுக்கு இணையாக சரிவிகித ஊட்டச்சத்து அளிக்க மறுக்கப்பட்டது.

எதெற்கெடுத்தாலும் கட்டுப்பாடு. சிரிக்கக் கூடாது, வேகமாக நடக்கக்  கூடாது, நிமிர்ந்துப் பார்க்கக்  கூடாது என்று ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்.

பள்ளிப் படிப்பு முடிக்கும் முன் திருமணம். ஆகவே முழுமையான அடிப்படைப் படிப்புக்குத் தடை.

மேற்படிப்பு கனவில் மட்டுமே சாத்தியம் என்ற நிலை.

சிறு வயதிலேயே ஏராளமாய் வரதட்சணைக் கொடுத்து கல்யாணம்.

அடுத்தடுத்து வரிசையாய் இடைவெளி இல்லாமல் குழந்தைகள்.

மாமனார், மாமியார், நாத்தனார் என்று குருவி தலையில் பனங்காயை வைத்ததைப் போல பெரும் பாரமாய் குடும்பச் சூழல்.

எல்லா சுமைகளையும், துயரங்களையும் சிரித்த முகத்துடன் ஏற்றுக் கொண்டு வளைய வரும் சூழலில் பெண்கள்.

அன்றைய பெண்களின் அவல நிலையை எடுத்துரைக்க, இது போன்று காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இது போன்ற பல்வேறு காரணங்களினால், தங்கள் படிப்பு, அறிவு மற்றும் திறமை சார்ந்த விஷயங்களை குழி தோண்டி புதைத்து விட்டு, பெண்கள் தியாகச் செம்மலாய் வாழ்ந்து வந்தனர்.

என்றுமே பெண்கள் இலட்சியவாதிகள் தான்

இப்படிப்பட்டச் சூழலிலும் பெண்கள் இலட்சியவாதிகளாகவே வாழ்ந்து வந்தனர் என்றே சொல்ல வேண்டும்.

இலட்சியம் என்றால் என்ன? தங்களுக்கென்று ஒரு கொள்கை, தங்களுக்கென்று ஒரு நேர்மையான பாதை, தங்களுக்கென்று ஒரு நேர்வழி. இவைகளை அனைத்தையும் ஒருங்கே பெற்ற பெண்களை இலட்சியப் பெண்கள் என்று சொல்லலாம்.

கணவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் அவனுடன் சண்டைப் போட்டுக் கொண்டு இறுதி வரை அவனைத் திருத்த போராடியப் இலட்சியப் பெண்களின் உண்மைக் கதைகள் ஏராளமாக உள்ளன…

கைக் குழந்தையோடு, கைவிட்டுச் சென்ற அல்லது இறந்து விட்ட கணவனாக இருந்தாலும், மறுமணம் செய்து கொள்ளாமல், குழந்தைக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்பணித்து விட்டு வாழ்ந்த இலட்சியப் பெண்களின் கண்ணீர் கதைகள் ஆயிரம் உள்ளன…

அ..னா, ஆ..வன்னா பள்ளிப் படிப்புக்கூட வழியில்லாத கிராமப் பெண்கள், தங்கள் கணவனோடு இணைந்து விடியற்காலையிலேயே வயல்வெளிக்குச் சென்று வயல்வெளியில் மழையிலும், வெயிலிலும் நாள் முழுவதும் வேலை செய்து குடும்பச் சுமையைப் பகிர்ந்து கொண்டு வாழ்ந்து வந்த இலட்சியப் பெண்களின் நிஜக்கதைகள் ஆயிரம் ஆயிரம் உள்ளன…

இன்றையப் பெண்கள்

கொஞ்சம் கொஞ்சமாக பெண்களுக்குக் கல்வி அனுமதிக்கப்பட ஆரம்பித்தது. அடிப்படைக் கல்வி மட்டுமில்லாமல், பட்டப் படிப்பும், பட்ட மேற்படிப்பும்  சாத்தியமாக ஆரம்பித்தன. இதன் காரணமாய் டாக்டர், இன்ஜினியர் என்று பெண்கள் படிக்க ஆரம்பித்தனர்.

பெண்களின் உரிமைகளுக்காக மகளிர் அமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. வரதட்சனைக் கொடுமை முதல் தெருவோர ரோமியோக்களின் ‘ஈவ் டீஸிங்’ பிரச்சனை வரை தீர்த்து வைக்க மகளிர் காவல்நிலையங்கள் தொடங்கப்பட்டன.

மெதுவாக பெண்களுக்கான உரிமைகள் சட்டமாக்கப்பட்டன. படிப்பு, வேலை, திருமணம் என்று வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துமே, இன்றையப் பெண்களின் விருப்பத்துக்கு ஏற்ப என்ற நிலை உருவாகியுள்ளன.

ஏற்கனவே இலட்சியப் பெண்களாக இருந்து வந்த பெண்களுக்கு அவர்களின் அறிவார்ந்த படிப்பும், கை நிறைய சம்பளமும் சொல்லனா தன்னம்பிக்கையைக் கொடுக்க ஆரம்பித்துள்ளது. பெண்கள் தங்கள் படிப்பு, திறமை ஆகியவற்றை  வெளிப்படுத்த அருமையான சூழலும், வாய்ப்பும் உருவாகியுள்ளது.

ஒரு பெண் என்று தன்னந்தனியாக இரவு 12 மணிக்கு நடந்து வரும் சூழல் ஏற்படுகிறதோ, அன்று தான் நம் நாடு உண்மையான சுதந்திரம் அடைந்துள்ளது என்று பொருள்படும் என்று மகாத்மா காந்தி சொல்லி விட்டுச் சென்றார். அந்த நிலையை விட சற்று உயரிய நிலை இன்று சாத்தியமாகியுள்ளது என்றே சொல்ல வேண்டும். ஆம். இன்றைய பெண்கள் இரவில் வேலைக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஐ.டி மற்றும் அதன் துறை சார்ந்த பணிகளுக்கு இரவு நேர வேலையும் இருப்பதால், நிறுவனங்கள் கார் அனுப்பி பெண்களை பத்திரமாக வேலைக்கு அழைத்துச் செல்கிறது. இந்தச் சூழல், காந்திஜி கண்ட கனவை விட உயர்ந்த நிலை தானே.

ஆண்களுக்குப் பெண் சரிநிகர் சமானம் என்ற நிலை மாறி, பெண்களுக்கு ஆண்கள் சரிநிகர் சமானம் என்ற நிலை உருவாகி வருகிறது.

வரதட்சணைக் கொடுத்து திருமணம் செய்து வந்த பெண்கள், இன்று வரதட்சணைப் பெற்றுக் கொண்டு திருமணம் செய்து கொள்ளும் நிலை வந்துள்ளது.

ஐ.டி-யில் ஐடியல் பெண்கள்

ஐ.டி-யில் ஐடியல் பெண்கள் என்ற தலைப்பில் விவாதம் இன்று ஏன் அவசியமாகிப் போனது?

ஒரு பக்கம் அதிகரித்து வரும் பெண்களின்  கல்வியறிவு.

 மறுபக்கம் அயல்நாட்டு நிறுவனங்களின் தயவில் பெருக்கெடுத்த வேலை வாய்ப்புகள்.

இதற்கிடையில்படித்து முடிக்கும் முன்பே கல்லூரிகளுக்குச் சென்று படிக்கின்ற மாணவ மாணவிகளில் 80 சதவிகிதமானவர்களைக் கொத்திச் சென்று அனுபவமில்லாதவர்களுக்கு, ஆரம்பத்திலேயே குறைந்தபட்சமாக 20 ஆயிரம் சம்பளம் கொடுக்கத் தயாராக இருக்கும் ஐ.டி. நிறுவனங்கள்.

 இதன் காரணமாய் சமுதாயத்தில் பெண்களின்  நிலையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. படித்த பெண்கள்…வேலைக்குச் செல்லும் பெண்கள் இவர்களின் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது.

அட்டகாசமான அலுவலகம்…

அதிக சம்பளம், அழைத்துச் சென்று வர வாகனம்…

ஆசைக்கு ஒரு வீடு, ஆஸ்திக்கு ஒரு வீடு என ஒன்றுக்கும் மேற்பட்ட  வீடுகள்…

வாரத்தில் 5 நாட்கள் வேலை…

வார இறுதியில் விடுமுறைக் கொண்டாட்டம்…

மன அழுத்தத்தையும், சோர்வையும் போக்க அவ்வப்போது சினிமா, விருந்து, விழா,கூடிக் கொண்டாடுதல்…

என்று நம் நாட்டின் பாமரன் ஒருவனுக்கு கற்பனையிலும் காண முடியாத குளுகுளு வாழ்க்கை. இது தான் பொதுவாக ஐ.டி துறையினரைப் பற்றிய பொதுவான கருத்து. இதில் உள்ள உண்மையை நாம் யாருமே மறுக்க முடியாது.

    நம் நாட்டுப் பொருளாதார வளர்ச்சியில் அதிகம் பங்கெடுத்து வரும்  நம் நாட்டு இளைஞர்கள் இழந்து வருவது…

இரவு நேர உழைப்பினால் தூக்கமின்மை…

வேலை செய்யும் பகல் நேரத்தில் உறக்கம்…

நேரம் கெட்ட நேரத்தில் சாப்பாடு…

ஊட்டச் சத்தில்லாத உணவால் ஜீரணக் கோளாறு…

உணவு-உறக்கம்-ஓய்வு. இவைகள்  நேரத்தில் ஒரு ஒழுங்கோடு  இல்லாவிட்டால்,40 வயதுக்குப் பிறகு உயிர் வாழ்வதே பிரச்னையாகி விடும் அவலம்…

எப்போதும் ஏ.ஸி-யில் இருப்பதால், வியர்வை வெளியேறுவது குறைகிறது. இதன் தொடர்பாய் தாகம் எடுப்பதும் குறைகிறது. இரண்டுமே சரியல்ல…

உட்கார்ந்தே இருப்பதால் எடை கூடி,  சர்க்கரை அதிகரித்து,  கொலஸ்ட்ராலும்எகிறும்…

உடல் உழைப்பே இல்லாமல், மூளைக்கு மட்டுமே வேலை என்பதால் ரத்தஅழுத்தமும் அதிகரிக்கும்…

உறக்கமின்மையால் மன அழுத்தம்…

நண்பர்கள்-உறவினர்களுடன் நேரம் செலவழிக்க முடியாமல் சமூகக் கட்டமைப்பில் இருந்தே ஒதுங்கிப் போகும் அவலம்…

அதிகரித்து வரும் விவாகரத்துகள்…

பெருகி வரும் முதியோர் இல்லங்கள்…

உணர்வுப் பூர்வமான தொடர்பை வேலை செய்யும் நிறுவனங்களோடு வைத்துக் கொள்ளத் தேவையில்லை என்பது தான் அயல் நாட்டு நிறுவனங்களின் தாரக மந்திரமாக உள்ளது. இதன் காரணமாய் 12 மணிநேரம் அலுவலகத்திலேயே கழிக்கும் ஐ.டி. துறை வல்லுநர்களுக்கு வேலை முடிந்து வீட்டிற்கு வந்தும் அதே மனநிலை தான் தொடர்கிறது. குடும்ப உறவுகள், பந்தம், பாசம் இவைகளில் நாட்டமில்லாமல் போகிறது. இதன் காரணமாய் அதிகரித்து வரும் விவாகரத்துகளை தவிர்க்க முடிவதில்லை.

அயல்நாட்டுப் பணத்தினால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படலாம். ஆனால் அயல்நாட்டுப் பண்பாட்டினால் நம் நாட்டுப் பண்பாடு சீர்குலையலாமா?

பெண்களுக்கான பொற்காலம்

குறிப்பாக பெண்களுக்கு இந்த காலகட்டம் பொற்காலம் ஆகும். இந்த காலகட்டத்தில் தான் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். வீக்கர் செக்ஸ் என்று பெண்களை முடக்கிப் போட்டக் காலத்தில் இருந்து பலர் போராடி பெற்ற இந்த சுதந்திரக் காற்றை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

சுதந்திரம் என்பது

மனம் போன போக்கில் வாழ்வது என்று பொருளல்ல…

யார் எப்படிப் போனால் என்ன என்று நமக்குத் தோன்றுவதையெல்லாம் செய்வது என்று அர்த்தம் இல்லை…

பணம் ஒன்று மட்டுமே சுதந்திர வாழ்க்கையல்ல…

உறவுகள் தேவையே இல்லை என்ற எண்ணம் சுதந்திர வாழ்க்கை அல்ல…

யாருடன் வேண்டுமானாலும் நேரம் கெட்ட நேரத்தில் போனிலும், நேரிலும் அரட்டை அடிப்பது…ஆணுக்கு இணையாக மது அருந்துவது, புகை பிடிப்பது, உடல் அங்கங்களை ஷோகேஸ் செய்வதை போல  உடை அணிவது இவைகள் எதுவுமே சுதந்திரம் கிடையாது.


ஒரு பெண் தன்னுடைய திறமைகளால் மட்டுமே அடையாளம் காணப்பெற வேண்டும். உடலாளோ, அலங்காரத்தினாலோ அடையாளம் கண்டு கொள்ளப்படக் கூடாது. எந்த ஒரு பெண், இந்த மனோநிலையை எப்போது அடைந்து மனதளவில் முதிர்ச்சி அடைகிறாளோ அவளே மிகவும் சுதந்திரமான பெண் என்பது என் ஆழமான அனுபவமான கருத்து.

          எதிர்காலத்தில் பெண்கள்

ஐ.டி துறை மிகப் பெரிய அளவில் வளர்ந்து விட்டது. பெண்கள் அனைவரும் சுந்திரமாய் கை நிறைய சம்பாதிக்க ஆரம்பித்து விட்டனர் என்று பொதுவாக அனைவரும் சொல்லி வரும் கருத்து. ஆனால், பொருளாதார சுதந்திரம் பெற்றுள்ள பெண்களில் பலர், சம்பளத்துக்காக மட்டுமே ஐ.டியில் பணி புரிகிறார்கள். ஐ.டியில் சாதனை புரிய வேண்டும் என்ற இலட்சியத்தோடு பணிபுரிபவர்களின் சதவிகிதம் மிகமிகக் குறைவு என்று சர்வேக்கள் கூறுகிறது. மேலும் சாஃப்ட்வேர் துறையில் மிக  உயரிய பதவியில் இருக்கும் பெண்களின் சதவிகிதமும் மிகக் குறைவே.

கம்ப்யூட்டரின் தந்தை என்று அழைக்கப்படுகின்ற சார்லஸ் பாபேஜ் கம்ப்யூட்டரை வடிவமைக்க வழிகாட்டியாக இருந்தார் என்பது எல்லோருக்குமே தெரிந்த உண்மை. அடா பைரான் கிங் [Ada Byron King] என்ற பெண்மணி தான் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இது போன்ற முன்னோடிகள் வெளிச்சத்துக்கு வந்தால் தான் பெண்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும்.

வெறும் பணத்துக்காக சாஃப்ட்வேர் துறையில் வேலைசெய்யும் மனப்பாங்கு குறைந்து ஏதேனும் புதிதாகக் கண்டுபிடிக்க வேண்டும், உருவாக்க வேண்டும் என்கின்ற இலட்சிய மனப்பாங்கு பெண்களிடையே அதிகரிக்கும்.

எதிர்காலத்தில் ஐ.டி துறை

அயல்நாட்டு தயவினால் நம் நாட்டுப் பொருளாதாரம் உயர்ந்து வருவதில் எந்த தவறும் இல்லை. அதில் நாம் சந்தோஷப்படுவதிலும் எந்தப் பிழையும் இல்லை.

நம் நாட்டு இளைஞர்களின் உடல் மற்றும் மன உழைப்பில் உருவாகும் எத்தனையோ கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்கள் இன்று உலகளாவிய முறையில் பெரிய வெற்றி பெற்று வளர்ந்து வருகிறது. ஆனால் நம் நாட்டில் இதுபோல சாஃப்ட்வேர்களை தயாரிக்கும்(உருவாக்கும்) நிறுவனங்கள் இல்லாதது  மிகப் பெரிய குறையே ஆகும்.

இதற்கு மிக முக்கியக் காரணம், நம் இளைஞர்களுக்கும், இங்குள்ள நிறுவனங்களுக்கும் ஆராய்ச்சி மனோபாவம் மிகக் குறைவாக இருப்பது தான்.

எதிர்காலத்தில் ஆராய்ச்சி நிறுவனங்கள் அதிகரித்து, ஆராய்ச்சி செய்ய பணியாளர்களும் அதிகரித்தால், ஒரு மைக்ரோசாஃப்ட் போல, ஒரு ஆரகிள் கார்பொரேஷன் போல, ஒரு சன் ஜாவா போல நம் இந்திய நிறுவனம் உருவாகி, அதன் சாஃப்ட்வேர்கள் உலகளாவிய அளவில் விற்பனை செய்யப்பட்டு நிரந்தர வருமானத்துக்கு வழிவகுக்கும்.

கருத்தும், எழுத்தும் : காம்கேர் கே. புவனேஸ்வரி

 

(Visited 362 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon