வேலையா… சேவையா?


(2006 ல் என்னிடம் பணியாற்றிவிட்டு இப்போது அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் ஒரு முன்னாள் ஸ்டாஃப் இன்று காலை போனில் பேசியதன் தாக்கம் இந்தப் பதிவு)

காம்கேரின் 25 வருட உழைப்பின் சார்பில், பத்திரிகை-தொலைபேசி-தொலைக்காட்சி-இணையம் உட்பட அனைத்து மீடியாக்களிலும் என் நேர்காணல்கள் வெளிவந்துள்ளன.

என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் என் மனதுக்கு மிகவும் பிடித்த கேள்வியும், நான் அளித்த பதில்களில் எனக்கு மிகவும் பிடித்த பதிலும் ஒன்றே ஒன்றுதான்.

அது நேற்றல்ல இன்றல்ல என்றைக்கும் எல்லா காலத்துக்கும் எல்லோருக்குமே பொருந்தும்…

‘உங்கள் வாழ்க்கையே சர்வீஸாக அமைந்து விட்டதே… எல்லா தயாரிப்புகளும் ஏதேனும் ஒரு சமூக அக்கறையுடன் வடிவமைக்கப்பட்டதைப் போல இருக்கிறதே…’ இந்தக் கேள்வி இல்லாத நேர்காணலே இல்லை எனலாம்.

ஒருசிலர் பரிதாபமாகக் கூட கேட்பார்கள்… ‘வாழ்க்கையை இப்படி சார்வீஸுக்காகவே அர்பணித்து விட்டீர்களே…’ என்று.

இன்னும் சிலர் இதே கேள்வியை நக்கலாகவும் கேட்டிருக்கிறார்கள், ‘இப்படி சர்வீஸுக்காக வாழ்க்கையை அர்பணிக்கும் அளவுக்கு பிசினஸ் செய்வதில் அத்தனை ஆர்வமா?’ என்று.

அவரவர்கள் பார்வையில்,  அவரவர்கள் வளர்ந்த சூழலில், அவரவர்களுக்கான களத்தில் இருந்து கேள்வியில் உள்ள வார்த்தைகள் வேண்டுமானால் மாறுபடாலாம். ஆனால் உள்ளர்த்தம் ஒன்றுதான் என்பதால் நான் அனைவருக்குமே சொல்லும் பதிலும் ஒன்றுதான்.

அது…

’நான் சேவை செய்வதற்காகவே பிறந்துள்ளேன் என்று சொல்லி என்னை உச்சானி கொம்பில் உட்கார வைக்காதீர்கள்…

உங்கள் அனைவரையும் போலவே நானும் எனக்கான கேரியரை என் 21 வயதில் தேர்ந்தெடுத்தேன்.

அதன் மூலம் நான் செய்கின்ற பணியை மனப்பூர்வமாக நேசித்து நேர்மையாகவும், உண்மையாகவும், மனசாட்சிக்கு விரோதம் இல்லாமலும், எந்த இடத்திலும் யாருக்காகவும் எதற்காகவும் என் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமலும் நேர்பட இயங்கி வருகிறேன்.

அதன் காரணமாய் நான் செயல்படுகின்ற களம் தானாகவே மற்றவர்களுக்கு ஏதேனும் ஒரு விதத்தில் பயனுள்ளதாக மாறிவிடுகிறது. எனக்குள்ளும் ஒரு அமைதியும், டிவைன் பவரும், சொல்ல முடியா தன்னம்பிக்கையும் உருவாகிறது…

இதுதான் உண்மை… சர்வீஸ் செய்வதற்காக என்று பிரயத்தனப்பட்டு எந்த செயலையும் செய்வதில்லை. செய்கின்ற பணியை நேர்மையாக செய்வதால் அது சர்வீஸாக மாறி விடுகிறது…’

எல்லா காலத்துக்கும் பொருந்தும் பதிலும், என் மனதுக்கு பிடித்த பதிலும் இதுதான்.

இதை இப்போது பதிவிடக் காரணம்…

இன்று காலை காம்கேரின் முன்னாள் ஸ்டாஃப் என்னிடம் போனில் பேசியபோது பொதுவான நலன் விசாரிப்புகளுக்குப் பின்னர், நான் மேலே குறிப்பிட்ட கேள்வியை கேட்டார், நானும் வழக்கமான அதே பதிலைச் சொன்னேன்.

நீங்களும் உங்கள் பணியை நேசித்து செய்ய ஆரம்பித்துவிட்டால் அது பணி என்கின்ற நிலையைத் தாண்டி அது ஹாபியாக மாறிவிடும். சர்வீஸாக மாறிவிடும். தெய்வீகமாக மாறிவிடும். அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப  ‘வேலை’ என்ற வார்த்தைக்கு மாற்று வார்த்தையைப் பொருத்திக்கொள்ளுங்கள்.

இதுவரை இல்லாவிட்டால் இனி முயற்சித்துப் பாருங்களேன்…

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
செப்டம்பர் 29, 2018

(Visited 38 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon