இங்கிதம் பழகுவோம்[5] துறக்க வேண்டியதை துறப்போமே! (https://dhinasari.com)

நேற்று ஒரு இளைஞர் போன் செய்திருந்தார். தன் பெயர் ஊர் போன்றவற்றை அறிமுகம் செய்துகொண்டு நான் எழுதிய கம்ப்யூட்டர் புத்தகங்களை நிறைய படித்திருப்பதாகவும் மிகவும் எளிமையாக இருப்பதாகவும் சொல்லி பேச்சைத் தொடங்கினார்.

மேலும், தானும் கம்ப்யூட்டர் கட்டுரைகள் எழுதி வருவதாகவும் அவை சில கம்ப்யூட்டர் பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருப்பதாகவும் சொல்லிய அவர் குரலில் மெல்லிய தாழ்வு மனப்பான்மை இழையோடியது.

‘மேடம்… நீங்க எப்படி மேடம் புத்தகம் போடறீங்க…. பப்ளிஷர்களை எப்படி அணுகறீங்க…’ என்று பேச்சை திடீரென நான்காம் கியருக்கு மாற்றினார்.

ஒரு நிமிடம் சுதாகரித்துக்கொண்டு, ‘நான் நடத்துவது ஐ.டி நிறுவனம். புத்தகங்களையும் என் நிறுவனம் வாயிலாகவே வெளியிடுகிறேன். சிலவற்றை பிற பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளார்கள்…’

‘ஓ… அப்படியா மேடம், என்னுடைய புத்தகங்களையும் நீங்கள் வெளியிடுங்கள்…’ என்றார் உற்சாகத்துடன்.

திரும்பத் திரும்ப புத்தகம் குறித்தே பேசியதால் அதை மாற்ற எண்ணி, ‘நான் புத்தகம் எழுதுவதைத் தவிர என்னைப் பற்றி வேறென்ன தெரியும்…’ என கேட்டேன்.

‘அது மட்டும்தான் தெரியும்…’ என சொன்னார்.

ஒருவரின் வெற்றியின் உச்சத்தை தெரிந்துகொள்வதற்குமுன் அவர் கடந்துவந்த பாதையையும் அதற்கு உரமாகப் போட்ட உழைப்பையும்  தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படையை தெரிந்துகொள்ளாமல் தன் நோக்கத்தில் மட்டுமே குறியாக இருந்தவருக்கு கொஞ்சம் வாழ்க்கையின் நிதர்சனத்தை உணர்த்த நினைத்தேன்.

‘சரி… புத்தகம் போடுவதற்கு நான் பப்ளிஷர்களை எப்படி அணுகுகிறேன் என்று என்னிடம் கேள்வி கேட்டீர்களே… ஏன் கேட்டீர்கள்?’

‘நானும் புத்தகம் போட ஆசைப்படறேன்…’

‘அப்படியா என்ன செய்கிறீர்கள்… என்ன படித்திருக்கிறீர்கள்?’

‘பி.ஏ ஹிஸ்டரி முதலாம் ஆண்டு படிக்கிறேன்….’

‘எத்தனை கட்டுரைகள் எழுதி இருப்பீர்கள்…’

‘ஏழெட்டு கட்டுரைகள் எழுதி இருப்பேன்…’

‘அப்படியா… நீங்கள் நேரடியாக பப்ளிஷர்கள் யாரையேனும் அணுகினீர்களா?’

‘ஆமாம் மேடம்… அணுகினேன்…’ என சொல்லி பல முன்னணிப் பதிப்பகங்களின் பெயரைச் சொன்னார்.

‘அவர்கள் என்ன சொன்னார்கள்…’

‘ஒரு சிலர் இப்போ கம்ப்யூட்டர் புத்தகங்கள் பப்ளிஷ் செய்வதில்லை. ஏற்கெனவே உள்ள புத்தகங்களைத்தான் விற்றுக்கொண்டிருக்கிறோம்… என்றார்கள்.

வேறுசிலர் நீங்கள் பணம் கொடுத்தால் போட்டுத் தருகிறோம். பிறகு கொஞ்சம் புத்தகங்கள் உங்களுக்குக் கொடுத்து விடுவோம். அதைவிற்றுக் கொள்ள வேண்டியதுதான் என்கிறார்கள்…’ என்றார் சோர்வான குரலில்.

‘அப்படியா… அவர்கள் சொல்வது உண்மைதான். பொதுவாகவே இ-புத்தகங்கள், ஆடியோ / வீடியோ புத்தகங்கள் வந்தபிறகு அச்சுப் புத்தகங்கள் விற்பனை குறைவாகவே உள்ளது. அதுவும் இல்லாமல் கூகுள் ஒரு கேள்விக்கு வஞ்சனை இல்லாமல் ஒராயிரம் பதில்களைக் கொடுக்கும்போது  புத்தகம் படித்து கற்றுக் கொண்டு செய்து பார்க்கும் ஆர்வம் இப்போதெல்லாம் யாருக்கும் இருப்பதில்லை…’ என்றேன்.

‘இந்த ஃபீல்டில் எனக்கு வரவேற்பு குறைவா இருக்கு மேடம்… இவனெல்லாம் புத்தகம் போடலாமா என நினைத்து என்னை குறைவாக பார்க்கிறார்கள்…’ குரலில் சுயபச்சாதாபத்தின் உச்சம்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. குழப்பத்துடன், ‘எதனால் குறைவாக எடை போடுகிறார்கள்…’ என்றேன்.

‘நான் பி.ஏ படிக்கிறேன். கம்ப்யூட்டர் புத்தகங்கள் போட ஆசைப்படறேன்… அதான் மேடம்… இவனெல்லாம் எப்படி முன்னேறலாம் அப்படின்னு ஒதுக்கறாங்க…’

‘இங்க பாருங்க… இதெல்லாம் நீங்களாகக் கற்பனை செய்துகொள்வது… உங்களை மதிக்கவும், மதிக்க வேண்டாம் என முடிவெடுக்கவும் நீங்கள் என்ன தவறு செய்தீர்கள் அல்லது என்ன சாதனை செய்து உள்ளீர்கள் உங்களைப் பார்த்துப் பொறாமைப்பட…’

‘அப்படி இல்ல மேடம், எல்லோருக்கும் இந்தச் சின்ன பையன் எப்படி முன்னேறலாம் அப்படிங்கற எண்ணம் மேடம்…’

‘நீங்கள் வாழ்க்கையில் ஜெயிக்கணும்னா முதல்ல இந்தத் தாழ்வு மனப்பான்மையை விட்டொழிக்கணும்… எத்தனையோ பேர் படிப்பது ஒன்றாகவும் தங்கள் பணியை வேறொன்றாகவும் வைத்துக்கொண்டு தங்கள் தனித்திறமை மூலம் இந்த இரண்டுமே இல்லாத மூன்றாவது துறையில் ஜெயித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்…

ஏன் நம்ம அப்துல்கலாம் அவர்களே பைலட் ஆக ஆசைப்பட்டு அது நிறைவேறாமல் விஞ்ஞானியாக மாறி இருக்கிறார்… பின்னர் நம் நாட்டின் ஜனாதிபதியாகவும் உயர்ந்திருக்கிறார்…’

‘ஆனால் என்னை முன்னேற விட மாட்டேன் என்கிறார்கள் மேடம்…’

நான் பொறுமை இழந்து, ‘தம்பி, புத்தகம் போடுவது மட்டுமே முன்னேறுவது என பொருள் கிடையாது… முதலில் நன்றாக படியுங்கள்… உங்கள் எழுத்துத் திறமையையும் வளர்த்துக்கொண்டே வாருங்கள்… உங்கள் எழுத்து வித்தியாசமாக இருக்கும்பட்சத்தில் நிச்சயம் இந்த உலகம் உங்களைத் திரும்பிப் பார்க்கும்…

இப்போதான் படித்துக்கொண்டிருக்கிறீர்கள். இன்னும் படிக்கவும், கற்றுக்கொள்ளவும் நிறைய இருக்கு… முதலில் கட்டுரைகள் மூலம் அறிமுகமாகுங்கள்… பின்னர் அந்த அனுபவமே உங்கள் கனவுகளுக்கு வழிகாட்டும்…’

நான் சொல்வதை அந்த இளைஞர் காதில் மட்டுமே வாங்கிகொண்டு மனதுக்குள் செலுத்த முயற்சிக்கவே இல்லை…

‘மேடம் நான் என் கட்டுரைகளை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்… ஏதேனும் கொஞ்சமாவது புதுமையா இருந்தால் நீங்களே என் புத்தகங்களை வெளியிடுங்கள் மேடம்…’ என மீண்டும் தொடங்கிய புள்ளிக்கே வந்தார்.

இந்த உலகம் இவரை மட்டும் ஒதுக்குவதாகவும், குறைவாக எடை போடுவதாகவும் நினைத்து இவர் வருத்தப்படுவதை, இவருடன் பேச ஆரம்பித்தபோது இது இவருடைய ‘தாழ்வு மனப்பான்மை’ என நினைத்தேன். ஆனால் பேச்சை முடிக்கும்போது அது தாழ்வு மனப்பான்மை இல்லை… தன்னைப் பற்றி உயர்வாக நினைக்கும் ‘தற்பெருமை எண்ணத்தின் உச்சம்’ என புரிந்தது.

இந்த இரண்டுமே உடல் நலத்துக்கும் மன நலத்துக்கும் கேடு. துறக்க வேண்டிய முக்கியமான குணாதிசயங்கள்.

அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
நவம்பர் 6, 2018

தினசரி டாட் காமில்  லிங்க்…  https://wp.me/p5PAiq-fGM

தொடரும்…

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
தினசரி டாட் காம் நவம்பர் 6, 2018  

(Visited 155 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon