Big Data[4] -நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே!

திருட்டு, கொலை, கொல்லை இன்னபிற வன்முறைகள் நடப்பதற்கு முன்பே அவை இனம் கண்டுகொள்ளப்பட்டு அவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுத்து நிறுத்தப்படும் வகையில் ஏராளமான, பலவிதமான நம்பகத்தன்மையுள்ள தகவல்களை அதிவேகமாக ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி பதிவு செய்து வைத்துக்கொண்டு தேவையானதை தேவையானபோது அலசி ஆராய்ந்து நொடிப் பொழுதில் துல்லியமான பதிலைக்கொடுக்கும் சக்தி வாய்ந்ததாக உள்ளது ‘பிக் டேட்டா’.

உதாரணத்துக்கு ஒரு சம்பவம்.  அயல்நாட்டில் வசிக்கும் ஒருவர் இந்தியாவில் வசிக்கும் தன் பெற்றோருக்கு தன் கிரெடிட் கார்டில் ‘ஆட் ஆன் கார்ட்’ வாங்கிக்கொடுத்திருந்தார். ஆனால் அவர்கள் அந்த கார்டைப் பயன்படுத்தவே இல்லை.

ஒருநாள் திடீரென அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வர மருத்துவமனைக்கு உடனடியாக ஒரு இலட்சம் கட்டணம் செலுத்த வேண்டிய அவசர நிர்பந்தம். அப்பா அந்த கிரெடிட் கார்ட் மூலம் கட்டணம் செலித்தியிருக்கிறார். கார்டு ஸ்வைப்பாகிய அடுத்த நொடி கிரெடிட் கார்டு கம்பெனியின்  சர்வரில் இயங்கும் அனலிடிக்ஸ் சாப்ட்வேர்   ‘அட! இந்த ஆட் ஆன் கிரெடிட் கார்ட் இந்தியாவில் ஒருமுறைகூட பயன்படுத்தப்பட்டதே இல்லையே என்று  சந்தேகப்பட்டு கார்ட் ஸ்வைப்  செய்யப்பட்ட மருத்துவமனைக்கு ‘எதற்கும் கிரெடிட் கார்ட் கொண்டு வந்தவரை யார் என்ன என விசாரித்து ஏதேனும் ஓர் அடையாள அட்டை பெற்றுக்கொண்டு, கையொப்பமும் வாங்கிக் கொள்ளுங்கள்’  என்று ஒரு அலர்ட்  போன் கால் வருகிறது. மகனுடைய கார்டைப் பயன்படுத்திய அப்பாவிடமே அடையாள விவரங்களை கையொப்பமுடன் பெற்றுக்கொண்ட பின்னரே பணம் மருத்துவமனை அக்கவுண்ட்டுக்கு கிரெடிட் செய்யப்பட்டது.

இதில் இரண்டு விஷயங்கள் அடங்கியுள்ளன. ஒன்று கிரெடிட் கார்ட் மூலம் கொடுக்கப்பட்ட தொகையின் மதிப்பு அதிகம். இரண்டாவது ஆட் ஆன் கார்ட் 10 வருடங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்ததால் சாஃப்ட்வேர்  இந்த இரண்டு பாயிண்ட்டுகளை வைத்து அலசி ஆராய்ந்து கிரெடிட் கார்ட் தேய்க்கப்பட்ட இடத்துக்கு அவசர எச்சரிக்கை செய்தியை அனுப்பி வைக்கிறது.

பெற்ற மகன் வாங்கிகொடுத்த ஆட் ஆன் கிரெடிட் கார்டைப் பயன்படுத்த தந்தையே அடையாள புரூஃப் காண்பிக்க வேண்டுமா என உங்களில் யாரேனும் யோசிக்கிறீர்களா? சாஃப்ட்வேருக்கு பெற்ற தந்தையும் ஒன்றுதான், திருடனும் ஒன்றுதான். ஒருகணம் யோசியுங்கள். நம் கிரெடிட் கார்ட் தொலைந்துவிடுகிறது. அதை எடுத்தவர்கள் அதைப் பயன்படுத்தி கடையில் பெரிய தொகைக் கொடுத்து பொருட்கள் வாங்க முற்படும்போது, ‘அட இந்தக் கார்ட் இதுநாள் வரை இத்தனை பெரிய தொகை மூலம் எந்தப் பொருளையும் வாங்கியதில்லையே’ என கிரெடிட் கார்ட் நிறுவனத்தின் அனலிடிக்ஸ் சாஃப்ட்வேர்  அலர்ட் ஆகி அந்த கார்ட் தேய்க்கப்பட்ட இடத்தைத் தொடர்புகொண்டு செய்தி சொல்லும். அவர்கள் கார்டை தேய்ப்பவர்களிடம் புரூஃப் வாங்கி ஒப்பிடும்போது அவர்கள் பிடிபடுகிறார்கள்.

இதுதான் ‘பிக் டேட்டா’ கான்செப்ட். வெறும் டேட்டாவை சேமித்து வைத்துக்கொள்வது மட்டும் அதன் பணி அல்ல. உதாரணத்துக்கு நாம் எடுத்துக்கொண்ட கிரெடிட் கார்ட் விஷயத்தில் கவனியுங்கள். கிரெடிட் கார்ட் நிறுவனம் வாடிக்கையாளர் பெயர், முகவரி, அடையாள விவரங்கள், அவர்கள் பணி தொடர்பான தகவல்களை மட்டும் சேமித்து வைத்திருப்பதில்லை. அவை எப்போதெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன. எங்கு, எந்த மாதியான கடை ஓட்டல் தியேட்டர் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன என்பதுபோன்ற நுணுக்கமான விஷயங்களையும் சேமித்து அதனடிப்படையில் அந்த கார்ட் தவறாக பயன்படுத்தப்படும்போது கண்காணித்து தவறு ஏதும் நடக்காமல் தடுக்கிறது.

மாதம் இருமுறை சரவண பவனில் சாப்பிட்டு கிரெடிட் கார்ட் தேய்க்கும் வழக்கமுள்ளவர் திடீரென் ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் 10 நபர்களுடன் சாப்பிட்டு கார்டை தேய்த்தால் ‘பிக் டேட்டா’ விழித்துக்கொள்ளும். அனலிடிக்ஸ் சாஃப்ட்வேர்  அலர்ட் ஆகி கார்டை பயன்படுத்துபவர் சரியான நபராகவே இருந்தாலும் சரி பார்க்கக் கிளம்பிவிடும். நல்லதுதானே. ‘நெற்றிக் கண் திறந்தாலும் குற்றம் குற்றமே’ என்ற நேர்மையான அணுகுமுறையை நாம் ஆதரித்தால்தான் குற்றங்கள் குறையும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software private Limited

மார்ச் 25, 2019

(குங்குமம் – வார இதழில் 2017-ம் ஆண்டு நான் எழுதிய கட்டுரைத் தொடரில் இருந்து…)

(Visited 93 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon