வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[12] : சொர்க்கத்தையும் நரகத்தையும் உணர்த்துவோம்! (நம் தோழி)

சொர்க்கத்தையும் நரகத்தையும் உணர்த்துவோம்!

எங்கள் அலுவலகத்தில் சிறிய மரவேலை. வந்திருந்த கார்ப்பென்டர் எனக்கு ஏற்கெனவே அறிமுகம்.

சென்ற வருடம் எங்கள் நிறுவனத்தில் சில மாற்றங்கள் செய்து சீரமைத்தோம். அப்போது மரவேலை முழுவதையும் அவர்தான் செய்துகொடுத்திருந்தார்.

அப்போது அவருடைய மகன் ப்ளஸ் டூ முடித்திருந்தார். அவர் மகனை எந்த குரூப்பில் சேர்க்கலாம் என என்னிடம் ஆலோசனை கேட்டு ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்த்தார்.

அதன்பிறகு இப்போதுதான் பார்க்கிறேன். அவர் மகன் எப்படி படிக்கிறார் என்று கேட்டபோது சிரித்துக்கொண்டே ‘இரண்டு சப்ஜெக்ட்டில் அரியஸ்’ என்றார்.

‘ஏன் சரியா படிக்க மாட்டேங்கிறாரா?’ என்றேன்.

‘ஆமாம் மேடம். ராத்திரி 1 மணிவரை செல்போனை நோண்டிக்கொண்டிருந்தால் படிப்பில் இப்படி கோட்டை விட வேண்டியதுதான்…’ என்று சொல்லிக்கொண்டே தன் வேலையிலும் கவனமாக இருந்தார்.

‘காலேஜில் பேரண்ட்ஸ்-டீச்சர்ஸ் மீட்டிங் கண்டிப்பா அப்பா அம்மாவை போயாகணும். அதுவும் பரிட்சை மார்க் ஷீட் கொடுக்கும்போது அப்பா அம்மாவையும் அழைத்துவரச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்…’

‘ஓ… அப்படியா… என்ன பேசுவார்கள் அந்த மீட்டிங்கில்…’ என்றேன்.

‘என்னத்த சொல்ல மேடம். திட்டுதான்…’

‘யாருக்கு உங்கள் மகனுக்கா…’ என்றேன்.

‘இல்ல மேடம். அப்பா  அம்மாக்குத்தான்… பசங்களை செல்ஃபோன் பயன்படுத்தச் சொல்லாதீங்க… வீட்டுக்கு இரவு 8 மணிக்குள் வரச்சொல்லுங்க… அப்படி இப்படின்னு எங்களுக்கு அட்வைஸ்… யார் சொன்னா கேட்கிறாங்க…’

மெளனமாக அவர் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தேன்.

‘இவ்வளவு குறைவா மார்க் வாங்குறான் உங்கள் மகன்…. இனிமே இவனை படிக்க வைக்க வேண்டாம்…  ஏதாவது எடுபுடி வேலைக்கு  அனுப்புங்க…’ என்று ஒரே திட்டுதான்.

‘ஐயையோ… மனசு உடைஞ்சு போய் வருத்தமடைஞ்சுடுவாங்களே இந்த பசங்க…’ என்றேன் பதட்டமாக.

‘அட நீங்க வேற மேடம்… அதெல்லாம் நம்ம காலத்தோட போயாச்சு… புரொஃபசர் பேசப் பேச அவரை இவன் மொறைக்காத குறைதான்… வெளியில் வந்து ஏம்பா இப்படி நீயும் திட்டு வாங்கி, எங்களுக்கும் திட்டு வாங்கி வைக்கிறாய்…’ என்று நானும் என் மனைவியும் சொன்னால், ‘அப்பா… இதையெல்லாம் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுடணும்… அவங்க என்னை மட்டுமா திட்டறாங்க… எல்லா மாணவர்களையும்தானே திட்டறாங்க…’.

இந்த காலத்து இளைஞர்களை நினைத்து ஒரே ஆச்சர்யம்தான்.

ஒன்று எதற்குமே கவலைப்படாமல் எல்லாவற்றையும் துடைத்தெறிந்துவிட்டு இப்படி விட்டேற்றியாக இருக்கிறார்கள். இல்லையெனில் முணுக்கென்றால் ரோஷம், கோபம், கொந்தளிப்பு, தற்கொலை என சென்றுவிடுகிறார்கள்.

யாராக இருந்தாலும் சமநிலை மனப்பக்குவம் அவசியம். அது இல்லையென்றால், நமக்குள் உண்டாகும் அழுத்தத்துக்கு ஏற்ப நம் மனம் எப்படி வேண்டுமானாலும் முடிவெடுக்கும்.

விட்டேற்றியான மனநிலைக்கும் கொந்தளிக்கும் மனநிலைக்குமான மையப்புள்ளிக்கு இடைவெளி மிகக்குறைவுதான்.

நம் மனம் ஒரு ரோபோ மாதிரி. நாம் என்ன கற்றுக்கொடுக்கிறோமோ அப்படி செயல்படும் அற்புத ஆற்றல் கொண்டது. நம் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே மனதை இயக்கும் ஆற்றலை கற்றுக்கொடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

அதற்கு முன் பெரியவர்களுக்கு மனத்தெளிவு வேண்டும். பழகுவோம். பழக்குவோம்.

முன்பெல்லாம் ‘நல்லது செய்தால் சொர்க்கத்துக்குப் போகலாம், தப்பு செய்தால் நரகத்துக்குத்தான் போகணும்’ என்று சொல்லி சொல்லி வளர்த்தார்கள்.

இப்படிச் சொன்னவர்கள் சொர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்துவிட்டா வந்து சொன்னார்கள்.

ஆனாலும் நம் மக்கள் இதையெல்லாம் நம்பினார்கள். ஓரளவுக்கு தங்கள் மனசாட்சிக்கு உட்பட்டு நல்லவிதமாகவே நடந்துகொண்டார்கள்.

சொர்க்கம் என்பதை பாலும் தேனும் ஓடுகின்ற இடமாகவும், பூக்கள் பூத்துக்குலுங்கும் நந்தவனமாகவும், கேட்டதெல்லாம் கிடைக்கும் பூங்காவனமாகவும் கற்பனையில் கோட்டை கட்டி வாழ்ந்து வந்தோம்.

நரகத்துக்குச் சென்றால் கொதிக்கும் எண்ணையில் முக்கி எடுப்பார்கள், பொசுக்கும் தீயில் தள்ளிவிடுவார்கள் போன்ற பயங்கரமான காட்சிகளை நினைத்துப் பார்த்து கொஞ்சமாவது நியாயமாக நடந்துகொண்டோம்.

சொர்க்கம் என்றால் நல்வழியில் சென்றால் கிடைக்கும் நன்மைகள். நரகம் என்றால் தீவழியில் செல்வதால் கிடைக்கும் கொடுமையான வெகுமதிகள்.

நாகரிகம் வளர வளர, அறிவியல் தெரிய தெரிய மனிதன் எதற்கெடுத்தாலும் விதண்டாவாதம் செய்ய கற்றுக்கொண்டான்.

விளைவு. குழந்தைகளைக்கூட குழந்தைகளாகப் பார்க்கத் தெரியாமல் வெறும் சதைப் பிண்டங்களாய் பார்க்கும் மனோபாவம் பெருகிவிட்டது. வயதான பாட்டிகள், மனவளர்ச்சியில்லாமல் தெருவில் பிச்சை எடுக்கும் பெண்கள், தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுமிகள் என சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில் எல்லாம் தன் சுயலாபத்துக்குக் கணக்குப் பார்க்கும் கொடூரர்கள் பெருகிவிட்டார்கள்.

சமீபத்தில் ‘புதிய தலைமுறை’ பத்திரிகையில் தூக்கு தண்டனை எப்படி கொடுக்கப்படுகிறது என்பது குறித்து விரிவாக ஒரு கட்டுரை எழுதப்பட்டிருந்தது.

‘தூக்கிலிடப்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக மருத்துவ அதிகாரி ஒருவர் தூக்கு தண்டனை கைதியின் உயரம், எடை, தூக்குக்கயிற்றின் நீளம், உடல் தொங்கவிடப்படும் உயரம், கைதியின் கழுத்தின் சுற்றளவு இவற்றை அளப்பார்கள்.

கைதியின் கடைசி ஆசை, எதிர்பார்ப்புகள் குறித்து கேட்டு அவை சட்டப்படி ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தால் அவற்றை  நிறைவேற்றுவார்கள்.

தண்டனை நாளன்று கைதியின் கையைப் பின்னால் கட்டி, முகமூடியால் முகத்தை மூடி காவலர்கள் கைதியை தூக்கு மேடைக்கு அழைத்து வருவார்கள். தூக்கு மேடையில் கைதி முரண்டு செய்து அடம்பிடித்தால்  அவர்களின் இரு கால்களையும் சேர்த்துக் கட்டுவார்கள். பிறகு தண்டனையை நிறைவேற்றுபவர் லிவரை பிடித்து இழுக்க மேடை தரைதளம் இறங்கும்…’

இப்படியாக அந்தக் கட்டுரை எழுதப்பட்டிருந்தது.

ஒரு மனிதனுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், அயல்நாட்டுப் பிரயாணம் இவற்றுக்கான முன்னேற்பாடுகள் அனைத்துமே சுகமான அனுபவங்கள். ஆனால் மரணத்துக்கான முன்னேற்பாடுகளை ஒரு மனிதன் எதிர்கொள்வது எத்தனை கொடியது.

இப்படியெல்லாம் நடக்கும் என தெரிந்திருந்தால், மரணத்தின் வாசலுக்குச் செல்வது இத்தனை வேதனையான அனுபவமாக இருக்கும் என முன்பே அறிந்திருந்தால் ஒரு வேளை தவறு செய்வதற்கு முன் யோசித்திருப்பார்களோ என அவர்கள் மீது சின்ன கழிவிரக்கம் தோன்றியது.

நன்றாக படித்தால் நல்ல வேலைக்குப் போகலாம், கார், பங்களா என வாழலாம் என சொர்க்கத்தைக் கற்பனை செய்யக் கற்றுக்கொடுக்கும் இந்த சமூகம் தவறு செய்தால் என்ன தண்டனை கிடைக்கும் அது எத்தனை கொடூரமாக இருக்கும் என்பதையும் சொல்லிக்கொடுக்க தவறுவதாலும் குற்றங்கள் பெருகுகின்றன.

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நல்லவிதமாக வாழ அறிவுரை சொல்வதுடன், நல்ல குணநலன்கள் இல்லாவிட்டால் என்ன மாதிரியான தண்டனைகள் கிடைக்கும் என்பதற்கு இதுபோன்ற சிறை கைதிகளின் தண்டனைகள் குறித்து எடுத்துச் சொல்லி விவாதிக்கலாம்.

நேர்மறையான தகவல்களைப் பேசி நல்ல விஷயங்களை கற்றுக்கொடுப்பது ஒரு வழி. எதிர்மறையான தகவல்களை(யும்) எடுத்துச் சொல்வதன் மூலம் நல்ல விஷயங்களை இன்னும் ஆழமாக குழந்தைகள் மனதில் பதியச் செய்வது மற்றொரு வழி.

முன்னதைவிட பின்னது சீக்கிரம் கற்றுக்கொடுக்கும்.

சொர்க்கத்தை காட்டி வளர்ப்பது முக்கியம். நரகம் எப்படி இருக்கும் என்பதையும் சொல்லி வளர்ப்பது அதைவிட முக்கியம்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
March  14, 2020

சக்தி மசாலா குழுமத்தில் இருந்து வெளிவரும்
‘நம் தோழி’  மாத பத்திரிகையில் (மார்ச் 2020)
வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும் – 12

புத்தக வடிவிலேயே படிக்க…நம் தோழி மார்ச் 2020

(Visited 50 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon