ஹலோ With காம்கேர் -177:  ‘டிகாஷன் காபி’ லாஜிக் தெரியுமா?

ஹலோ with காம்கேர் – 177
June 25, 2020

கேள்வி:  ‘டிகாஷன் காபி’ லாஜிக் தெரியுமா?

நேற்று எங்கள் உறவினர் ஒருவர் என் பெற்றோருக்கு போன் செய்திருந்தார். அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர். அவரது கணவர் தனியார் நிறுவனத்தில் பணியில் இருந்தவர். ‘கொரோனா’ விசாரிப்புகளை அடுத்து வெளிநாடுகளில் வசிக்கும் அவர்கள் பிள்ளைகள் குறித்தும், என் சகோதரன் சகோதரி நலன் குறித்தும் பேசிக்கொண்டிருந்தார். இப்படியாக கால் மணி நேர உரையாடலில் உலகையே வலம் வந்துவிட்டார்.

அவருக்கும் அவருடைய கணவருக்கும் வீட்டில் கால் தங்காது. தினந்தோறும்  வாக்கிங், ப்ரெஷ்ஷாக காய்கறி வாங்குவதற்கு மார்கெட் செல்லுதல், கோயில், சமையல், உறவினர் / நண்பர் வீட்டுக்குச் செல்லுதல், அவ்வப்பொழுது ஓட்டலுக்குச் சென்று சாப்பிடுதல் என்பதெல்லாம் அவர்களின் நித்தியப்படி செயல்பாடுகள். அதுமட்டுமில்லாமல் மாதத்தில் ஒரு வாரம் எங்கேயேனும் வெளியூர் பிரயாணம் செய்வார்கள். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வெளிநாட்டுப் பிரயாணங்களும் இருக்கும். இப்படியாக எப்போதுமே தங்களை பரபரப்பாக வைத்துக்கொண்டிருப்பார்கள்.

இவர்களைப் போன்று அதிகம் வெளியிலேயே சுற்றிக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் இந்த லாக் டவுன் காலம் கொடுமையாக இருக்கும் என்று நான் நினைத்துக்கொள்வதுண்டு.

ஆனால் அவர்கள் அப்படி எல்லாம் பெரிதாக வருத்தப்படவில்லை. வீட்டிலேயே தங்களை எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முடியுமோ அப்படி வைத்துக்கொண்டு சகஜமாகவே இருக்கிறார்கள்.

வெளியில் வாக்கிங் செல்லாமல் மொட்டை மாடியில் வாக்கிங் செல்கிறார்கள். கோயில்களுக்குச் செல்லும் நேரத்தில் டிவி சேனல்களில் ஸ்லோகங்களை ஓட விட்டு கூடவே அமர்ந்து தாங்களும் அமர்ந்து ஸ்லோகம் சொல்கிறார்கள், உறவினர் / நண்பர்கள் வீடுகளுக்குச் செல்லும் நேரத்தில் தொலைபேசி வழியே வாட்ஸ் அப் வீடியோ காலில் நேரடியாகப் பார்த்து பேசுகிறார்கள். ஓட்டலுக்குச் சென்று சாப்பிட வேண்டும் என்கின்ற எண்ணம் தோன்றும்போது யு-டியூபில் லேட்டஸ் ரெசிபி பார்த்து தங்கள் உடல் நலனுக்கு ஏற்ற உணவு வகைகளை தாங்களே தயார் செய்து சாப்பிடுகிறார்கள். இப்படியாக லாக் டவுனுக்கு முன்னர் எப்படி இருந்தார்களோ அப்படியே லாக் டவுனுக்குப் பின்னரும் தங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்கிறார்கள்.

எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் எது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நம் மனது அந்த சூழலுக்கு ஏற்றவாறு தகவமைத்துக்கொள்ளும் வகையில்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

தினமும் காலையில் எழுந்ததும் காபி சாப்பிட்டுவிட்டு மற்ற வேலைகளைத் தொடங்குவது நம்மில் பெரும்பாலானோருக்கு வழக்கமாக இருக்கும். ஒருசிலருக்கு டீ சாப்பிடும் வழக்கம்.

பால் வாங்கிவர தாமதமாகும் தினங்களில் ஒருவித நடுக்கம்கூட சிலருக்கு ஏற்படும். சிடுசிடுவென மற்றவர்களிடம் எரிந்து விழுவார்கள்.

இது இருந்தால்தான் சந்தோஷம், அது சாப்பிட்டால்தான் உற்சாகம் என்பதெல்லாம் இன்னும் சில மணி நேரங்களில் பால் வந்துவிடும். காபி கிடைத்துவிடும் என்கின்ற உத்திரவாதம் இருக்கும்வரைதான்.

பால் எப்போது கிடைக்கும் என்கின்ற உத்திரவாதமோ அல்லது பால் வரவே வராது என்கின்ற சூழலிலோ எரிச்சலோ, நடுக்கமோ, வெறுமையோ எதுவும் இருக்காது. காரணம், கிடைக்காததை மாற்று வழியில் கிடைக்கச் செய்துகொண்டுவிடும் யுக்தியை அவர்கள் கண்டுபிடித்துவிடுவதே.

அன்று பால் சப்ளையே ஊரில் கிடையாது என்று மனதுக்குத் தெரிந்துவிட்டால் பாலில் டிகாஷன் விட்டு மணமணக்கும் காபி சாப்பிடுவதற்கு பதிலாக வெந்நீரில் டிகாஷன் விட்டு ப்ளாக் காபி சாப்பிட்டு தங்களின் காபி சாப்பிடும் டெம்ப்டேஷனை போக்கிக்கொள்வார்கள்.

காபி பவுடரும் தீர்ந்துவிட்டதா, இருக்கவே இருக்கிறது இன்ஸ்டண்ட் காபி பவுடர். அதைவைத்து சமாளிப்பார்கள்.

இன்ஸ்டண்ட் காபி பவுடரும் கைவசம் ஸ்டாக் இல்லை என்ற சூழல் ஏற்பட்டால்கூட நம்மவர்கள் சமாளித்துவிடுவார்கள். சுடச் சுட வெந்நீரை காபி போல நிதானமாக ஆற்றி மெல்ல குடித்து காபிக்கு ஏங்கும் மனதை சமதானப்படுத்திக் கொள்வார்கள்.

இவ்வளவுதான் வாழ்க்கை. ‘இது’ இருந்தால்தான் என்னால் வாழ முடியும் என்கின்ற நினைப்பு எல்லாம் ‘அது’ கிடைக்கும் என்கின்ற உத்திரவாதம் இருக்கும்வரை மட்டுமே. அந்த உத்திரவாதத்துக்கு வாய்ப்பில்லை எனும்போது எப்படியும் வாழ முடியும் என்கின்ற பக்குவம் நம் எல்லோருக்குமே ஏற்பட்டுவிடும்.

அப்படித்தான் இயற்கை நம்மை கட்டமைத்திருக்கிறது. நம்முடைய டிஸைன் அப்படி.

நம் டிஸைனை நாம் அறிவோமே!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 21 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon