ஹலோ With காம்கேர் -340: ‘கிடைத்தால் மகிழ்ச்சி, கிடைக்காவிட்டால் முயற்சி’

ஹலோ with காம்கேர் – 340
December 5, 2020

கேள்வி: ‘கிடைத்தால் மகிழ்ச்சி, கிடைக்காவிட்டால் முயற்சி’ என்ற பக்குவத்தைப் பெறுவது எப்படி?

நேர்மறையாக சிந்திப்பது என்பது வலுக்கட்டாயமாக நாம் சந்தோஷமாக இருப்பதைப் போல வெளிக்காட்டிக்கொண்டு ‘என்னை எதுவும் அசைக்க முடியாதுப்பா’ என வெளிவார்த்தைக்காக பெருமை பேசுவது கிடையாது. அப்படி இருப்பது உள்ளுக்குள் மேலும் மேலும் எதிர்மறை சிந்தனையை தூண்டிவிடுவதாக மட்டுமே இருக்கும். மன அழுத்தத்தை அதிகரிக்கும்.

இயல்பாக உங்களுக்கு இருக்கும் கஷ்டங்களையும் வருத்தங்களையும் வெளிப்படுத்த உங்கள் உணர்வுகள் துடிக்கும்போது அதை அடக்கி ‘சும்மா இரு…’ என அதட்டினால் அப்போதைக்கு அது உள்ளுக்குள் சுருண்டு கொள்ளலாம். ஆனால் எப்போதடா நீங்கள் அசருவீர்கள், வெளியில் வந்து ஆட்டம் போடலாம் என உள்ளுக்குள் கொட்ட கொட்ட விழித்துக்கொண்டுக் காத்திருக்கும்.

பிறகு எப்படித்தான் நேர்மறையாக சிந்திப்பது… நேர்மறை எண்ணங்களை உருவாக்கிக்கொள்வது?

நேர்மறை எண்ணங்கள் என்பது ஒரு அழகான உணர்வு. அது தானாகவே உங்களுக்குள் இருந்து பிரவாகமாக பொங்க வேண்டும்.

வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக ஏழ்மையில் வாழ்பவர்களை கவனித்துப் பாருங்கள். ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவார்கள். மழையோ வெயிலோ புயலோ அன்றன்று வேலைக்குச் சென்றால்தான் வீட்டில் உள்ளவர்கள் வயிறு நிறையும். ஆனாலும் அவர்கள் முகத்தில் எப்போதுமே மகிழ்ச்சி ததும்புவதை கவனித்திருக்கிறீர்களா? இதுவரை இல்லை என்றால் கவனித்துப் பாருங்கள். அவர்களின் இந்த மனோநிலைக்குக் காரணம், அவர்கள் தங்கள் கஷ்டங்களை இயல்பாக ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். தங்களுக்கு இருக்கும் கஷ்டங்களை தனியாகப் பிரித்து எடுத்து ‘எங்களுக்கு எவ்வளவு கஷ்டம்’ என லென்ஸ் வைத்துப் பார்ப்பதும் இல்லை, ‘எங்களுக்கென்ன குறைச்சல், எங்களைப் போல சந்தோஷமா யாரால் இருக்க முடியும்?’ என இல்லாததை இருப்பதாக பெருமை பேசுவதும் இல்லை.

அவர்கள் எதிர்கொள்வதை உள்ளது உள்ளபடி எதிர்நோக்குகிறார்கள், அதில் உள்ள கஷ்டங்களையும் வலிகளையும் அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள். ஒரு வேளை சாப்பாட்டுக்கு பதிலாக மூன்று வேளை சாப்பாடு கிடைக்கும் நாட்களையும், ஒருவேளை சாப்பாட்டுக்குகூட வழியில்லாத நாட்களையும் ஒன்றாகவே கடக்கிறார்கள். வாழ்க்கை அதன்போக்கில் செல்கிறது. நேர்மறை சிந்தனை, எதிர்மறை சிந்தனை என்ற குழப்பமெல்லாம் கிடையாது.

கிடைத்தால் மகிழ்ச்சி, கிடைக்காவிட்டால் முயற்சி இதுவே அவர்களின் வாழ்க்கை மந்திரமாக உள்ளது. அதனால்தான் அவர்கள் எந்தவிதமான விசித்திரமான மனோவியாதிகளுக்கும் ஆளாவதில்லை. ஸ்ட்ரெஸ் டிப்ரஷன் என எந்த சிக்கல்களுக்குள்ளும் மாட்டிக்கொள்வதில்லை.

இவர்களுக்குள் நேர்மறை சிந்தனை தானகவே பிரவாகமாக பொங்கி வழிவதைக் காணலாம். வாழ்க்கையை அதன்போக்கில் வாழப் பழகியவர்களுக்கே இது சாத்தியம்.

உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்வதும், பிறரிடம் நற்பெயர் வாங்குவதற்காக நம் இயல்பை மாற்றிக்கொண்டு நடிக்காமல் இருப்பதும், தேவையில்லாததற்கெல்லாம் பொய்யாய் நடித்து பொய்யான வாழ்க்கையை வாழாமால் இருப்பதும், பிறரை கீழ்த்தள்ளி அவர்கள் மேல் ஏறி நாம் முன்னேற வேண்டும் எண்ணத்தை துறப்பதும் என ஒருசில நல்ல குணாதிசயங்களை உங்கள் இயல்பாக்கிக்கொண்டால் உங்களுக்கான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பக்குவமும் தானாகவே உங்களுக்குள் உண்டாகும். பிரச்சனைகளை எதிர்கொள்வதுடன் அதில் இருந்து வெளிவருவதற்கான யுக்திகளும் யோசனைகளும் தானாகவே தோன்றி உங்களை வழிநடத்தும். இயல்பாகவே நீங்கள் நேர்மறை சிந்தனைகளுடன் வாழத்தொடங்குவீர்கள்.

நான் சொல்ல வருவதை சுருக்கமாக சொல்லிவிடுகிறேனே…

‘நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பிரச்சனைகளாகவே பாருங்கள். ‘இதெல்லாம் பிரச்சனையே இல்லை…’ என்று போலியாக சொல்லிக்கொண்டு ஏமாற வேண்டாம். அப்போதுதான் உங்கள் மனதும் பிரச்சனைகளில் இருந்து வெளிவருவதற்கான நேர்மையான வழிகளை யோசிக்கும் பக்குவத்தைப் பெறும்’

‘கிடைத்தால் மகிழ்ச்சி, கிடைக்காவிட்டால் முயற்சி’ என்ற பக்குவத்தைப் பெறுவதற்கும் இது ஒன்றுதான் வழி.

இப்படித்தான் நான் எல்லா விஷயங்களிலும் நேர்மறையாக சிந்திக்கிறேன். செயல்படுகிறேன்.

நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்,

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 45 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon