#கவிதை: தமிழ் மவுனம்!

நானெல்லாம்
பேசினாலும்
எழுதினாலும்
தமிழில்தான் எழுதுவேன்
தேவைப்படும் இடங்களில்
மட்டுமே ஆங்கிலம்
என பெருமைப்படுபவரா நீங்கள்?

இதிலென்ன இருக்கிறது ஆச்சர்யம்?

நானெல்லாம்
மவுனத்தில் கூட
தமிழ் மவுனம்தான்!

என்னது தமிழ் மவுனமா?

ஆமாம். உண்மையில்!

மவுனம் என்பது
பேசாமல் இருப்பதா?
சிந்திக்காமல் இருப்பதா?
வருந்தாமல் இருப்பதா?
அழாமல் இருப்பதா?
சிரிக்காமல் இருப்பதா?

சிந்திக்காமல் இருந்தால் மட்டுமே
வருந்தாமலும், அழாமலும், சிரிக்காமலும்
இருக்க முடியும்!

ஆகவேதான் சொல்கிறேன்
நான் மவுனமாக இருந்தாலும்
சிந்திக்கிறேன்!

அதனால்தான் சொல்கிறேன்
என் சிந்தனையும் தமிழில்தான்!

ஆதலால்தான் உறுதியாக சொல்கிறேன்
சிந்திக்கும் என் மவுனத்தின் மொழி
தமிழ் மொழியே!

இன்று உலகத் தாய்மொழி தினம்!

காம்கேர் கே. புவனேஸ்வரி
பிப்ரவரி 21, 2021

#காம்கேர்_கவிதை #COMPCARE_Kavithai

(Visited 71 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon