வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[17] : ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது! (நம் தோழி)

ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது!

தனித்துவமாக இருப்பது குறித்த விழிப்புணர்வே இல்லையோ என்று எண்ண வைக்கும் அளவுக்கு ஒரே அச்சில் வார்ப்பதைப்போல மனிதர்கள் பெருகிவிட்டார்கள்.

‘என்னவோ போங்க இந்த காலத்து பிள்ளைகளுக்கு…’, ‘என்னவோ போங்க இப்போதெல்லாம்…’ என்று அங்கலாய்க்கும் முந்தைய தலைமுறையினர்கூட தங்கள் இயல்பை இழந்து வருகிறார்கள். வீடும் சமுதாயமும் அவர்களையும் விட்டு வைப்பதில்லை.

ஒருவர் அனுப்பிய இமெயிலுக்கு பதில் அனுப்புவது, குடும்ப நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்தால் அதுகுறித்து சம்மந்தப்பட்டவர்களுக்கு நம் மகிழ்ச்சியை போனிலோ / வாட்ஸ் அப்பிலோ தெரிவிப்பது, நிகழ்ச்சிக்கு செல்ல முடியவில்லை என்றால் பிறகு போன் செய்து வர இயலாததுக்கு வருத்தம் தெரிவிப்பதுடன் நிகழ்ச்சி எப்படி நடந்தது என விசாரிப்பது, உடல் நிலை சரியில்லாதவர்களை நேரில் பார்க்க நேர்ந்தால் எப்படி இருக்கிறீர்கள் என நலன் விசாரிப்பது, உறவினர் பிள்ளைகளின் சாதனைகளை நினைவில் வைத்துக்கொண்டு நேரில் சந்திக்கும்போது பாராட்டுவது என்பதெல்லாம் வெகுவாக குறைந்துவிட்டது.

நம் சந்தோஷம் துக்கம் என எல்லாவற்றையும் அவ்வப்பொழுது சமூக வலைதளங்களில் வெளியிட்டு நூற்றுக்கணக்கில் ‘சம்பிரதாய’ வாழ்த்துகளையும், ‘வெர்ச்சுவல்’ ஆறுதல்களையும் பெற்றுவிடுவதால் உறவுகளின் முக்கியத்துவத்தை உணர வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.

பலருக்கும் பெரும்பான்மையினர் எப்படி இருக்கிறார்களோ அப்படியே வாழ்ந்துவிட்டுச் செல்வது சுலபமாக உருக்கிறது. பிரச்சனை ஏதும் இன்றி காலத்தைக் கடத்த வசதியாக உள்ளது. இன்னும் கொஞ்சம் ஆராய்ந்தால் அதுவே அவர்களுக்கும் அடிமனதின் விருப்பமாக இருப்பது தெரிய வரும் அல்லது காலப்போக்கில் அதுவே அவர்களிடம் ஒட்டிக்கொண்டிருக்கும்  தனித்துவத்தைப் புறந்தள்ளி அவர்களின் விருப்பமாக  மாறிவிடுகிறது / மாற்றிவிடுகிறது என்றும் சொல்லலாம்.

தனித்துவமாக இருப்பதற்கு தைரியம் வேண்டும். அசாத்திய துணிச்சல் வேண்டும்.

பொங்கல், உப்புமா என சமையல் செய்யும்போது அரிசியின் அளவு எவ்வளவு இருக்கிறது, அதில் போடும் உப்பின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை யோசியுங்கள். ஒரு டம்ளர் அரிசிக்கு ஒரு சிட்டிகை அளவுதானே உப்பு போடுகிறோம். இதில் அரிசி பெரும்பான்மையாக இருந்தாலும் நாம் கலக்கும் சிட்டிகை உப்புதானே முக்கியத்துவம் பெருகிறது. உப்பு போடாமல் சமைத்தால் யாரேனும் சாப்பிடுவார்களா?

அதுபோலதான் நம்மைச் சுற்றியுள்ள பெரும்பான்மையினர் எண்ணிக்கையில் வேண்டுமானால் அதிகமாக இருக்கலாம். அவர்கள் அரிசியைப் போல.

தனித்துவத்துடன் செயல்படுபவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம். ஆனால் அவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் அதிகம். ஏனெனில் அவர்கள் உப்பைப் போல.

வாழ்க்கையில் ஏற்றமோ இறக்கமோ சமையலில் உப்பைப் போல நாம் வாழ்வதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது.

தனித்துவம் என்பது தனியாக இருப்பதோ அல்லது செயல்படுவதோ அல்ல, பெரும்பான்மையினரிடம் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கொள்கைப் பிடிப்புடன்  முன்மாதிரியாக வாழ்வதாகும்.

ஒரு ஆய்வு. இரண்டு விதமான சூழல்கள்.

நீங்கள் தவறுகள் செய்திருக்கிறீர்களா, அப்படி செய்த தவறுகள் உங்களை உறுத்தியிருக்கிறதா, மாற முயற்சித்து உள்ளீர்களா?

இதுதான் ஆய்வின் சாராம்சம்.

ஆய்வு இரண்டு விதமான சூழல்களில் நடத்தப்பட்டது.

முதல் சூழல்.

உடலில் வலு. நல்ல வேலை அல்லது  தொழில் அல்லது பதவி. போதுமான அல்லது  அதற்கும் மிஞ்சிய வருமானம். தகுதிக்கு அதிகமான புகழ். திருமணம் குழந்தைகள் என அழகிய குடும்பம். இவை அனைத்தும் பெற்று சர்வ மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருப்பவர்களிடம் நடத்தப்பட்டது.

இரண்டாவது சூழல்.

உடலில் வலு இழந்து, பதவியும் பணமும் புகழும் ஒரு இம்மிக்குக்கூட நம் வலிகளை தாங்க உதவப் போவதில்லை, நம்முடன் வரப் போவதில்லை, அதனால் எந்த உருப்படியான பிரயோஜனமும் இல்லை என்ற பேருண்மையை உணர்ந்து வாழ்வின் கடைசி கட்டத்தில் இன்றோ நாளையோ என உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் மனிதர்களிடம் நடத்தப்பட்டது.

ஆய்வு முதலில் ஒரு மனிதவள மேம்பாட்டு நிகழ்ச்சியில் நடத்தப்பட்டது. அவர்கள் முதல் சூழலில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரிடமும் ஒரு காகிதம் கொடுக்கப்பட்டு அதில் மேலே குறிப்பிட்டுள்ள ஆய்விற்கான கேள்விகளைச் சொல்லி பதிலை எழுதச் சொன்னார்கள். உங்களைப் பற்றிய விவரங்கள் பொதுவெளியில் எங்கும் வெளிவராது. பெயர், இருப்பிடம், வேலை இந்த விவரங்கள் எதையும் குறிப்பிடத் தேவையில்லை. தைரியமாக பதிலை எழுதுங்கள் என்று வாக்குறுதியும் கொடுத்தார்கள்.

அனைவரின் பதிலும் அடிப்படையில் ஒரே மாதிரியாகவே இருந்தது.

நான் வெகுளி. என் வெகுளித்தனத்தைத்தான் பிறர் பயன்படுத்தி ஏமாற்றுகிறார்கள்.

நான் நேர்மையானவன். நேர்மையாக இருப்பதால் என்னை இளிச்சவாயன் பட்டம் கட்டுகிறார்கள்.

நான் அன்பானவன். என்னைச் சுற்றி உள்ளவர்கள் என் அன்பை புரிந்துகொள்ளவில்லை. ஏமாளிப்பட்டம் கட்டுகிறார்கள்.

நான் அப்படி, நான் இப்படி,  தான் எந்தத் தவறுமே செய்யவில்லை. பிறர்தான் தன்னைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதே அவர்களின் பதிலின் சாராம்சமாக இருந்தது.

யாராவது ஒருவராவது தான் தவறு செய்துள்ளதாகவும், அதற்காக மனம் வருந்தியதாகவும், மன்னிப்புக்கேட்டு பிராயச்சித்தம் செய்ததாகவும் சொல்லி இருக்கிறார்களா என தேடித்தேடிப் பார்த்தார்கள்.

ம்ஹூம். அதற்கு யாருமே வாய்ப்பே கொடுக்கவில்லை அந்த ஆய்வில்.

அதே ஆய்வை ஒரு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் நோயாளிகளிடம் நடத்தினார்கள். அவர்களை எழுதச் சொல்லவில்லை. பதில் சொல்ல விருப்பம் இருப்பவர்களிடம் நாசூக்காக கேள்விகளைக் கேட்டு பதிலைப் பெற்றார்கள்.

இவர்களின் பதிலில் நேர்மை இருந்தது.

தங்கள் வாழ்க்கையில் இளம் வயதில் விளையாட்டுக்கு நண்பனை ஏமாற்றியது, உடன் பிறந்த தம்பி தங்கைகளை தேவையில்லாமல் அடித்து அழ வைத்தது, பெற்றோருக்குத் தெரியாமல் சிகரெட் மது என தீய பழக்கங்களுக்கு அடிமை ஆனது, காதலித்த பெண்ணை / ஆணை திருமணம் செய்துகொள்ளாமல் அற்பக் காரணங்களுக்காக உதறித் தள்ளியது, அலுவலகத்தில் தான் ஒரு பதவியை அடைய வேண்டும் என்பதற்காக சக பணியாளரை நட்பு என்ற போர்வையில் இருந்துகொண்டே துரோகம் செய்தது, அப்பா அம்மாவை கவனிக்காமல் விட்டது, மனைவியை / கணவனை புரிந்துகொள்ளாமல் வார்த்தைகளால் கொடுமைப்படுத்தியது, தான் பெற்ற குழந்தைகளிடமே ஆண் பிள்ளைக்கு மட்டும் பாரபட்சம் காட்டியது என ஆரம்பித்து சின்னதும் பெரியதுமாக தாங்கள் செய்த தவறுகளை கொட்டினார்கள்.

இப்போது அதையெல்லாம் சரி செய்யவே முடியாத சூழல் பெரும்பாலானோருக்கு. அவர்கள் காயப்படுத்தியதாகச் சொல்லும் நண்பர்களோ, உடன் பிறந்தோரோ, பெற்றோரோ ஏன் ஒரு சிலருக்கு குழந்தைகளோ கூட உயிருடன் இல்லை.

இளமை காலத்திலேயே செய்த தவறுகளை உணர வேண்டும். அதற்கான பிராயச்சித்தம் தேடிக்கொண்டுவிட வேண்டும். இல்லை என்றால் இப்படித்தான் கடைசி காலத்தில் உடலைக்கொல்லும் வலிகளுடன், நாம் செய்த தவறுகளும் சேர்ந்துகொண்டு நம் மனதை பல மடங்குகளாகக் கொன்றெடுக்கும்.

நம் மனசாட்சி மனசாட்சியே (?!) இல்லாமல் வார்த்தைகளால் குதறித் தள்ளும். தப்பிக்கவே முடியாது. ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. உடல் வலிக்கு மருந்து சாப்பிட்டு தப்பிக்கலாம். ஆனால் மனவலிக்கு பிராயச்சித்தம் ஒன்றே மருந்து.

அதை வாழும்  ‘காலத்தே செய்துவிடுங்கள்’ என்பதையே அவர்கள் அனைவரும் ஒன்றுபோல சொன்னார்கள்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
September 24, 2020

சக்தி மசாலா குழுமத்தில் இருந்து வெளிவரும்
‘நம் தோழி’  மாத பத்திரிகையில் (செப்டம்பர் 2020)
வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும் – 17

புத்தக வடிவிலேயே படிக்க… நம் தோழி செப்டம்பர் 2020

 

(Visited 16 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon