காம்கேர் OTP 1000 – விழா ஆல்பம்!

சில நேரங்களில் சில வாழ்த்துரைகள்!

என் பத்து வயதில் இருந்து தினமும் எழுதி என் கல்லூரி காலத்துக்குள் அவை நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளாகவும், கட்டுரைகளாகவும், கவிதைகளாகவும் பல்வேறு முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்து விருதுகள் பல பெற்றிருந்தாலும்,

கல்லூரி காலத்துக்குப் பிறகு என் நிறுவனத்தின் வாயிலாக நான் பெற்று வரும் தொழில்நுட்பம் சார்ந்த அனுபவங்களை பல முன்னணி பதிப்பகங்கள் புத்தகங்களாக வெளியிட்டு, அவை எண்ணிக்கையில் 150-க்கும் மேற்பட்டு பெருகி வந்தாலும்,

உலகெங்கும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் பாடத்திட்டமாக என் பல்வேறு புத்தகங்கள் இடம் பெற்றிருந்தாலும்,

சமூக வலைதளத்தில் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் முதல் நாளில் இருந்து இன்று வரை தொடர்ச்சியாக நாள் தவறாமல், நேரம் தவறாமல் காலை 6 மணிக்கு எழுதி பதிவிட்டு வரும் ‘ஜம்முனு வாழ காம்கேரின் OTP’ என்ற பதிவு பரவலாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றில் பல கட்டுரைத் தொகுப்புகளாகவும், கதைகளாகவும், நாவல்களாகவும், குறும்படமாகவும், ஆவணப்படமாகவும், திரைப்படத்தின்  அங்கங்களாகவும், மேடை பேச்சாளர்களின் குறிப்புகளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அத்தனையையும் முறையாக என் அனுமதி பெற்று, என் பெயருக்கும், என் நிறுவனத்துக்கும் அங்கீகாரமும் சன்மானமும் கொடுத்து கெளரவப்படுத்தியே பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் ஹைலைட்.

2-1/2 ஆண்டுகளுக்கும் மேலாக நான் எழுதி வரும் தொடர் பதிவை தொடர்ச்சியாக வாசித்து வருபவர்கள் அந்தந்த காலகட்டத்தில் பதிவிட்ட கருத்துக்களை இங்கு பகிர்ந்துள்ளேன்.

இளைஞர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பிள்ளைகள் என அனைத்துப் பிரிவினருக்கும் என் எழுத்தும், சிந்தனையும், செயல்பாடும் உத்வேகமாக உள்ளது என நினைக்கும்போதே மகிழ்ச்சியாக உள்ளது.

அனைவருக்கும் நன்றி!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

September 2021

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

1. கிருஷ்ண. வரதராஜன்!

செய்ய வேண்டியதை செய்ய வேண்டிய நேரத்தில்!

அதிகாலை எழுந்திருப்பது, தினமும் எழுதுவது, நேர்மறை மனக்காட்சிகள் என உங்களிடம் கற்பதற்கு இன்னொன்றும் இருக்கிறது. இவை எல்லாவற்றிற்கும் அடிப்படையான சுய ஒழுக்கம்.

பிடித்திருக்கிறதோ பிடிக்கவில்லையோ செய்யவேண்டிய வேலையை செய்ய வேண்டிய நேரத்தில் செய்வதே சுய ஒழுக்கம்

உங்கள் எழுத்துக்களை படிப்பவர்கள் இதை உங்களிடமிருந்து படித்தால் நிச்சயம் உயர்வார்கள், உங்களைப்போலவே!

2. பி.வி. புஷ்பவல்லி!

தைரியம்கூட ஒழுக்கமே!

தங்கள் பதிவுகள் நேர்மறை எண்ணங்களை விதைக்கிறது. எப்படி வாழ்வது என்பதைவிட எப்படி எல்லாம் வாழக் கூடாது என்பதை புரிய வைக்கிறது. இருப்பதை வைத்துக்கொண்டு வாழ்க்கையை எப்படி மெருகேற்றிக்கொள்வது என்பதை உணர்த்துகிறது.

தாங்கள் பின்பற்றும் ஆரோக்கியமான உணவு முறைகளை வெளிப்படையாக சொல்வது, எளிய நடையில் எழுதுவது, பதிவுகளில் ஓர் உற்சாகம், ஊக்கம், கடலளவு கற்றிருந்தாலும் கடுகளவும் கர்வமில்லாமல் இருப்பது… இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

ஒழுக்கம் என்றால் பொய், களவு கூடாது, நாணயத்துடன் நேர்மையாக வாழ வேண்டும் என்று நினைத்தும் நடந்தும் வந்தேன். ஆனால் அவற்றுடன் நேர்மறை எண்ணங்கள், நம் கருத்தை தைரியமாக எடுத்து சொல்வது இவையெல்லாம் கூட ஒழுக்கமான வாழ்வின் அம்சங்கள் என்பதை உங்கள் எழுத்து புரிய வைத்தது.

3. அருள்நிதி நட்டார்!

தவ வாழ்க்கை!

தங்களுடைய பதிவுகள் அனைத்தும் சமுதாயத்துக்கும் தனிமனித முன்னேற்றத்துக்கும் மிகவும் பயனுள்ளவை. ஒருவர் தன்னுடைய சுய அனுபவங்கள் மூலம் மற்றவர்களுக்கு இத்தகைய பயனுள்ள விஷயங்களைக் கொடுக்க வேண்டுமானால் அவர் தன்னுடைய வாழ்க்கையை தவ வாழ்வாக வாழ்ந்திருக்க வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தங்களைப் பெற்றெடுத்த பெற்றோர் செய்த தவமும் புண்ணியமும்தான் உலகிற்கு உங்களை அருளியது. தங்களுடைய ஒவ்வொரு பதிவும் உளவியல் சிந்தனைகளுடன் கூடியது.

நான் சார்ந்த முகநூல் குழுக்களில் தங்களுடைய பதிவுகளை அனைவரும் படித்து பயன்பெறும் வகையில் பகிர்வது வழக்கம். இதன் மூலம் நல்லதொரு செய்தியை பகிர்ந்த திருப்தி நாளும் எனக்கு ஏற்படுகிறது.

தங்களிடமிருந்து நான் நிறைய நற்பண்புகளை கற்றுக் கொண்டுள்ளேன். நன்றி. தங்களுடைய சேவை மென்மேலும் தொடரட்டும். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறேன்.

4. சரோஜா ரகுநாதன்!

‘Sooooooooper’ இதன் பின்னணி!

2020-ம் ஆண்டு இடையில் இருந்துதான் நான் காம்கேர் பதிவுகளை படிக்கத் தொடங்கினேன். காலையில் இவரது பதிவுகளை படித்ததுமே மனம் ஜிவ்வென்று ஆகாயத்தில் பறப்பதைப் போல் இருக்கும். அந்த அளவுக்கு மனதை இலகுவாக்கும் ஏதோ ஒரு சக்தி அவரது எழுத்தில் உள்ளது. எனக்கு அவர் அளவு அனுபவம் கிடையாது.  என்னை பொருத்தவரை அவருடன் தொடர்பில் இருப்பதை பெரும் பாக்கியமாக உணர்கிறேன். அவருடைய பதிவு படிக்கும் போதே சூப்பரான மனநிலை தோன்றுவதால்    தான் sooooooooper madam என்று தினமும் பின்னூட்டம் போட்டு விடுகிறேன். ஒன்றுமே தெரியாதவர்களும் கூட அவருடைய பதிவு படித்து வந்தால் நல்ல சிந்தனையும் செயலும் படிப்பவர்களை ஆக்ரமிக்கும் என்பது உறுதி.

இவரது காம்கேர் டிவியில் குழந்தைகளுக்கான அனிமேஷன்களை வெளியிட்டு வருகிறார். பெயருக்குத்தான் குழந்தைகள் நிகழ்ச்சி. ஆனால் நாங்களே அவற்றை ரசித்துப் பார்ப்போம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அதுபோல் தான் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்காக அறம் வளர்ப்போம் நிகழ்ச்சிகள், ஊக்க உரைகள் என காம்கேர் டிவியில் பார்த்து ரசித்திருக்கிறேன்.

இவர் காம்கேரின் OTP வரிசையில் தன்னம்பிக்கை நூல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அத்தனையையும் வாங்கிவிடுகிறேன். கிண்டிலில் படிக்கிறேன். தெரிந்தவர்களுக்கும் அறிமுகப்படுத்தி வருகிறேன்.

மொத்தத்தில் காம்கேரின் பதிவுகள் மட்டுமில்லாமல் அனிமேஷன், வீடியோ படைப்புகள் என அத்தனையும் உற்சாகப்படுத்துகின்றன.

5. வி. ராஜாராமன்!

காபி வித் காம்கேர்!

ஆமாம். என்னுடைய காலைப்பொழுது உங்களது முகநூல் பதிவை காபியுடன் படிப்பதிலிருந்து தொடங்குகிறது. காபி தரும் உற்சாகத்தை போல் உங்கள் பதிவுகளும் மனதிற்கு உற்சாகம்‌, மனநிறைவு மற்றும் நேர்மறை எண்ணங்களை தருகிறது. ஓரிரு நாட்கள் படிக்க விடுபட்டாலும் உங்கள் டைம்லைன் சென்று படித்து விடுவேன்.

கணினி வித்தகர்‌,தொழில் முனைவர், எழுத்தாளர், பேச்சாளர்  என உங்கள்  பல திறமைகள் என்னை வியக்க வைக்கிறது.

950-ஐ தாண்டி 1000-த்தை நெருங்கும் உங்கள் பதிவுகள் மேலும் தொடர என் வாழ்த்துக்கள்.

6. எஸ். மாலதி!

இரும்புப் பெண்மணி!

தங்களின் தினம் ஒரு தகவலை படித்து பயன் பெற்று வருகிறேன்.

உங்கள் எழுத்துக்களில் எனக்கு பிடித்ததும், இப்போது வரை கடைபிடித்து வருவதும்: சிறிய, சிறிய இலக்குகளை நிறைவேற்றினாலே பெரிய பெரிய இலக்குகள் தானாகவே நிறைவேறும் என்ற கருத்து.

தினமும் உங்கள் எழுத்துகள் மூலம் நீங்கள் சொல்லாமல் சொல்லும் ஒரு அற்புதமான கருத்து: மனிதன் தான் மாற வேண்டும் என்று நினைத்தாலே அதற்குண்டான வழிகள் புலப்படும்.

உங்களிடம் எனக்குப் பிடித்த விஷயம்: இரும்பு பெண்மணி ஜெயலலிதாவிற்கு பிறகு தங்களைத்தான் மனதில் உறுதி மிக்க பெண்மணியாகப்  பார்க்கிறேன். ஒரு செயலை முடிக்கும் வரை ஓயாமல் உழைப்பதைக் கண்டு நான் வியந்திருக்கிறேன்.

7. பிரசன்னன்!

கால் நூற்றாண்டு சாதனை!

தான் மட்டுமல்ல, தன்னைச் சார்ந்தவர்களையும், தன் நலம் நாடுபவர்களையும் ஒரு நேர்மறை காந்தப்புலத்தில் இருக்க வைக்கும் தங்கள் முயற்சிக்கு என்றும் என் ஆதரவு உண்டு.

தகவல் தொழில் நுட்பம் வளர ஆரம்பித்த காலத்திலேயே அதை சரியாக அனுமானித்து சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கி சாஃப்ட்வேர்களை உருவாக்குவதிலும், எளிதாக குழந்தைகள் புரிந்து கொள்ளும் வகையில் அனிமேஷன் படங்களை வெளியிட்டு வருவதிலும், யு-டியூப் அறிமுகம் ஆன காலகட்டத்திலே யு-டியூப் சேனல் ஆரம்பித்ததிலும், ஆவணப்படங்கள் எடுப்பதிலும் அனைவருக்கும் முன்னோடியாக இருப்பது உங்கள் திறமைக்குச் சான்று.  அனைத்தையும் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக செய்துகொண்டிருப்பது சாதனையே.

குறிப்பாக 100-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதி இருப்பது வியப்புக்குரியது.

தொழில்நுட்பத் துறையில் காம்கேர் செய்து வரும் பணிகள் அத்தனையும் கல்விப் புலத்தில் ஒரு அரசு செய்ய வேண்டியவை. அவற்றை நீங்கள் செய்வது பாராட்டப்பட வேண்டிய செயல்பாடுகள்.

உங்கள் தாய் தந்தை இருவரும் BSNL-ல் பணிபுரிந்ததால், நீங்கள்  BSNL family என்ற வகையில் எனக்குக் கூடுதல்  பெருமை.

8. கமலா முரளி!

தொழில்நுட்ப வல்லுநரா, உளவியல் நுட்ப வல்லுநரா?

வாழ்த்த நினைப்பது:

இவர் தொழில்நுட்ப வல்லுநரா அல்லது உளவியல் நுட்ப வல்லுநரா? என யோசிக்க வைக்கும் இவரது எழுத்தின் சாராம்சம். தலைப்புகள் பிரமாதமாக இருக்கும். உதாரணமாக  ‘முற்றுப்புள்ளியும் மூன்றுபுள்ளிகளும்’ என்ற தலைப்பும் அதன் கருத்தும் என் நினைவில் இருந்து நீங்கவே இல்லை. இவரது எழுத்துக்கான என் பாராட்டுக்கு நான் முற்றுப்புள்ளி வைக்க இயலாது. மூன்று புள்ளிகள் தான் வைக்க வேண்டும்.

செய்கின்ற பணியில் நேர்த்தி:

காம்கேர் புவனேஸ்வரி அவர்கள் மிக அழகாகச் சொற்களை உபயோகப் படுத்துவார். அவரது பதிவுகளில் தேவையற்ற சொற்களே இருக்காது. ஒவ்வொரு சொல்லும் பொக்கிஷமாக இருக்கும். அநாகரீக வார்த்தைகள் இருக்காது. தொய்வில்லாமல், இயல்பாக, சிறப்பாக இருக்கும். ஒரு மொழி ஆர்வலராக எனை ஈர்த்த விஷயம் இது.

‘தினமும் ஒரு பதிவு போட வேண்டுமே’ என்று எதையோ போட மாட்டார். தன்னுடைய கருத்தை, தான் மனதில் அசை போட்டதை, ஆராய்ந்து அவசியத்தை எழுதுவார். அதற்கான உதாரணங்களாக சில செய்திகள், மேற்கோள்கள் வரலாம். அவை கூட oft-repeated ஆக இருக்காது. இது படிப்பதற்கு ஒவ்வொரு முறையும் புதிதாக இருக்கும். ஒரு வாசகி என்ற முறையில் எனக்கு திரும்ப திரும்ப படிக்க வைக்கும்.

மிக முக்கியமாக நான் சொல்ல நினைப்பது: பொய் முகங்கள் தேவையில்லை, எச்சில் பட்ட ஸ்பூனால் ஒவ்வொருவராய் சுவைப்பது, ஆறுதல் கூறுவதாக அறுத்து, வறுக்க வேண்டாம்…போன்று பல விஷயங்கள்… நச்சென்றும் இருக்கும், நாசூக்காகவும் இருக்கும். சிறப்பு! எடுத்துக் கொள்ளும் தலைப்பு மற்றும் கருத்து வித்தியாசமாகவும் வித்தியாசமான கோணத்திலும்!

ஒரு சகமனிதியாக அந்த அணுகுமுறை பிடிக்கும்.

செய்த பணிக்கான Follow up:

அதிக வேலைப்பளுவிலும் சும்மா ‘லைக்’, ‘தேங்ஸ்’ இவற்றுடன் முடித்துக்கொள்ளாமல் பின்னூட்டங்களுக்கு மதிப்பு அளித்தல், விளக்கங்கள், மறுதளித்தல், தன் கருத்தை ஆணித்தரமாகக் சொல்லுதல் என 100% perfectionist! வாழ்த்துகள்!

ஒரு தொடர் வாசகியாக நான் அதிசயிக்கும் விஷயம் இது.

வாழ்கின்ற வாழ்க்கையை எழுதுவதால் உண்டான வலிமை!

முகத்திலேயே அமைதி தெரிகிறது! தெளிவு தெரிகிறது! உறுதி தெரிகிறது! புலமை தெரிகிறது! நேர்மறை ஆற்றல் தெரிகிறது! இவை அத்தனையும் பிரதிபலிக்கிறதே எழுத்துகளில்!

ஒரு அன்பான வாசகியாக என் வாழ்த்துகளுடன்…

9. ராமச்சந்திரன் சேதுரத்தினம்!

விமர்சனங்களை எதிர்நோக்கும் பக்குவம்!

தினமும் காலையில் முதலில் பார்க்க நினைப்பது, காம்கேர் OTP பதிவுகள்.   ‘இன்று என்ன தகவல் எழுதியிருக்கிறீர்கள்?’ என்று தெரிந்துகொள்வது கியூரியாசிட்டியாக இருக்கும்.

தங்களிடம் வியப்பது: சோர்வின்றி தினமும் எழுதுவது, அதற்கான தலைப்பை தேர்ந்தெடுப்பது, நேர்மறை எண்ணங்களை மற்றவர்கள் மனதில் பதியும்படி சொல்வது, அனைத்து விஷயங்களிலும் (தொழில் நுட்பம்,வாழ்வியல் முறை, வியந்தது, சினிமா, புத்தகம், அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள் இன்னும் பல) ஆழமான கண்ணோட்டம், விமர்சனங்களை எதிர்நோக்கும் விதம், பிசினஸ் பெண்மணியாக 30-வது வெற்றி ஆண்டை நோக்கியப் பயணம், பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஈடுபாடு, அனிமேஷன் தங்களுக்கு கைவந்த கலை என்பதால் தினமும் எழுதும் தலைப்பிற்கு ஏற்ற படம், தங்களது நட்பு வட்டத்தில் தொடர்ந்து இருந்து நல்ல பல வாழ்வியல் விஷயங்களை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

C-courage, O-objective, M-motivation, P-power in writing, C-care, A-attitude, R-response, E-encourage

10. பழனீஸ்வரி தினகரன்

ஆளுமையை மெருகேற்றிக்கொள்ள உதவும் எழுத்து!

காம்கேர் பதிவுகள் எனது சுய முன்னேற்றத்திற்கும், ஆளுமையை மெருகேற்றிக்கொள்ளவும், எனது பேரக் குழந்தைகளை வளர்ப்பதற்கும் உதவி செய்கின்றன. குறிப்பாக குழந்தைகளை MHA-வில் (Master of Home Administration) சேருங்கள் என்ற பதிவு, குழந்தை வளர்ப்பில் Ph.D பெறுவதற்கு ஒப்பானது. எளிமையிலும் எளிமையான நடையில், வலிமையிலும் வலிமையான கருத்துக்களை உள்ளடக்கிய மனதைத் தொடும் இவரது எழுத்தை நாள் தவறாமல் வாசித்து வருகிறேன்.

11. முருகேஷ் பாலகிருஷ்ணன்!

பல்கலைக் களஞ்சியம்!

தங்களின் பதிவுகளில், எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்னவென்றால் பதிவின் முடிவில், ஓரிரு வரிகளில் முழுப் பதிவின் சாரம்சத்தை சுருக்கமாக (ஆத்திச் சூடி | திருக்குறள் போல) எடுத்துக் கூறுவது. அப்படி எழுதுகின்ற ஆணித்தரமான சுருக்கமான வாசகங்கள் மனதின் அடி ஆழம் வரை சென்று பதிகின்றன. தங்களின் பதிவுகள் சிந்தனைக்கு விருந்து. சோம்பலுக்கு மருந்து. மேலும் தங்களின் கூரிய உளவியல் பார்வை, தனி நபர் , சமூகம் சார்ந்த விஷயங்கள் பற்றிய தாங்களின் நிபுணத்துவம் ஆச்சரியப்படுத்துகிறது.  பல்கலைகழகத்தில் படித்தால் கூட ஏதேனும் ஒரு பிரிவில் மட்டும்தான் சிறந்து விளங்குவர்.  பல கலைகளில் தாங்கள் நிபுணத்துவம் பெற்றிருப்பதால் பல்கலை களஞ்சியம் என்றே தங்களை அழைக்கலாம்.

தங்கள் பணி சிறக்க நம்( தும்)பிக்கை விநாயகர் அருள் புரிவார் .

12. இலக்கியா

எங்களுக்கு ஏன் நல்ல ஆசிரியர் கிடைக்கவில்லை?

Respected Mam,

It is really a great pleasure for me to share about COMPCARE post. It has created huge impacts on me. The posts I heard and read from My father refreshed me. Not only the posts but also the information I got to know from talking to you over phone filled me with Full of Positivity. It gave me a thought to be perfect in everything whatever I do. Especially ‘Kamali From NadukCauvery’ Post will always remain evergreen in my heart. It taught me many things. It helped me to improve my way of studying.

  1. iLakya, XI

Ramanathapuram

காம்கேரின் பதிவுகள் குறித்து என் அப்பா என்னுடனும் என் சகோதரனுடனும் அவ்வப்பொழுது பகிர்ந்துகொள்வார். அப்படித்தான் கமலி From நடுக்காவேரி சினிமாவில் வரும் ஒரு காட்சியை பற்றி நீங்கள் எழுதிய பதிவை அப்பா ப்ரிண்ட் எடுத்துக்கொடுத்து வாசிக்க சொன்னார். அது குறித்து என் மனதில் தோன்றிய ஒரு கேள்வியை உங்களிடம் போனில் கேட்டேன். ‘ஏன் ஆண்ட்டி, எங்களுக்கெல்லாம் அந்த திரைப்படத்தில் வரும் ஆசிரியர் போல் ஒரு நல்ல ஆசிரியர் கிடைப்பதில்லை…’ அதற்கு நீங்கள் சொன்ன பதில் என்றுமே என் மனதை விட்டு அகலாது. ‘செய்கின்ற எந்த வேலையாக இருந்தால் 100% Perfect ஆக செய்ய வேண்டும்’ என்ற விஷயத்தை உங்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன்.

13. கோபி சரபோஜி

வாசகனைக் கடத்திப் போகும் எழுத்து!

தினப்படி நிகழ்வுகள், செயல்பாடுகளில் நாம் செய்யும் தவறுகளை, செய்யக்கூடாதவைகளை சுவராசியம் குன்றாது, எளிய உதாரணங்களில், எதார்த்த நடையில் சுட்டியும், குட்டியும் அமைந்திருக்கும் காமகேர் புவனேஸ்வரி அவர்கள் எழுதி வரும் ‘ஜம்முனு வாழ காம்கேரின் OTP’ பதிவுகளை வாசித்துக் கடக்கையில் வாழ்க்கை எனும் அழகியலை வாழ்தல் மூலம் அனுபவிக்கும் சூட்சுமம் கூட்டுப்புழு பட்டாம்பூச்சியாய் பறக்கும் அற்புதமாய் பிடிபட்டு விடுகிறது.

இவர் பன்முக ஆளுமையாய் இயங்கிக் கொண்டிருக்கும்போதும் நாள் தவறாது, நேரம் தவறாது வந்தடையும் இவரது காம்கேரின் பதிவுகள் 1000-த்தை எட்டப் போகிறது என்பது அசாத்தியம். ஆனால், அந்த அசாத்தியத்தின் வழி   ‘நினைத்தால் எதுவும் சாத்தியம்’ என்ற தன்னம்பிக்கையை மட்டுமல்ல உள்ளார்ந்த நம்பிக்கையை சுயமாய் பெறுதலை, வாழ்ந்து காட்டுதல் மூலம் போதித்துக் கொண்டிருப்பதை புறந்தள்ளுதலை, சந்தோஷம், தனித்தன்மை, சுயம் ஆகியவைகளின் முனைகளை மழுங்கடிப்பவைகளில் இருந்து விலகி நிற்றலை எப்படியெல்லாம் தனதாக்கிக் கொள்ள முடியும் என்ற ஆலோசனைகளையும் தந்தபடியே இருக்கின்றன.

கடந்து போகும் பதிவுகளுக்கு மத்தியில் வாசிப்பவனைக் கடத்திப் போகும் பதிவுகளாக  ‘ஜம்முனு வாழ காம்கேரின் OTP’ இருக்கிறது. அவைகளை வாசிக்கும் போது எழும் புத்துணர்வு அன்றைய நாளை இனிதாக்கித் தருகிறது.

பிரச்சனைச் சிடுக்குகளில் இருந்து சிக்கலின்றி வெளியேறுவதற்கான மந்திரத்தை–தந்திரத்தை கற்றுத் தருகிறது என்றால் அது மிகையில்லை என்பேன்.

14. பத்மா சேகர்!

ஆச்சர்யமூட்டும் எழுத்துகள்!

நீங்கள் எங்களுக்கு நல்ல ஆசிரியர். தினந்தோறும் நல்ல நல்ல பதிவுகளைப் போட்டு எங்கள் வாழ்க்கையில் பல ஏற்றங்களைச் செய்துள்ளீர். உங்கள் பதிவு எங்களக்கு மனத் தெளிவையும்,புத்துணர்ச்சியையும் கொடுக்கின்றன. எங்களுக்கே ஆச்சர்யமூட்டும் வகையில் உங்கள் பதிவுகள் இருக்கும். நீங்கள் ஒரு பதிவில்,  ‘மனச்சோர்வான நேரத்தில் அமைதியாக இல்லாமல் ஏதாவது உங்களுக்குப் பிடித்த வேலையைச் செய்யவும்’ என்றீர். அதை இன்றளவும் கடைபிடித்து வருகிறேன். நீங்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும். நான் தினமும் நன்றி சொல்லிக் கொண்டே இருப்பேன். உங்கள் பதிவினை தினமும் படிப்பதற்கும்,உங்களைக் காட்டிய கடவுளுக்கும் நன்றி மேடம்.

15. ரவிகுமார் சம்பத்குமார்!

மனதை அசைக்கும் எழுத்து!

எழுத்து என்பது படிக்க ஆரம்பித்தவுடன் சிந்திக்க வைத்து அதை மனதில் வைத்து அசை போட வைக்க வேண்டும். அதுவே ஒருவரது எழுத்தின் வெற்றி. அப்படி காலை நேரத்தில் வாசிக்க வைக்கும் தங்களின் ‘காம்கேர் OTP’ தொடர் பதிவுகள் அனைத்தும் மனதில் பதிய வைக்கும் விதத்தில் சுய முன்னேற்றம், தன்னம்பிக்கை, சுய ஒழுக்கம், சமூக சீர்திருத்தம், திறனாய்வு விமர்சனம் போன்ற பல வகையில் இருப்பது உங்கள் பதிவுகளின் சிறப்பு. அது மட்டுமா பில்டர்காபியோ, கோவிட் கஷாயமோ செய்முறை விளக்கத்தில் அசத்தல். மொத்தத்தில் பன்முகத் திறமை கொண்ட ‘அஷ்டவதானி’ நீங்கள். வாழ்த்துக்கள் மேடம்.

16. சாந்தா தேவி!

பகைவனுக் கருள்வாய் – நன்னெஞ்சே!

‘நம் நண்பர்கள் மட்டுமல்ல, நம் எதிரிகளும் நன்றாக இருக்க வேண்டும்’ என்பதை காலம் காலமாக நம் முன்னோர்கள் பல்வேறுவிதமாக அறிவுறுத்தி வந்திருக்கிறார்கள். ஆனால் தாங்கள் எழுதியிருந்த ‘நம் எதிரியும் நன்றாக வாழ வேண்டும்’ என்ற பதிவில் ‘நம் எதிரியும் நன்றாக வாழ வேண்டும் என நினைப்பது பெருந்தன்மை மட்டுமல்ல, நமக்கான பாதுகாப்புக் கவசமும் கூட’ என சொல்லி இருப்பது சட்டென திரும்பிப் பார்க்க வைக்கிறது, முற்றிலும் புதிய கோணத்தில் மனதில் பதிய வைக்கிறது.

பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே!
பகைவனுக் கருள்வாய்!

மகாகவி பாரதியார் வரிகளுக்கு இதைவிட சிறந்த எளிமையான விளக்கம் யாரும் கொடுக்க முடியாது.

இப்படி வாழ்வியல் வழிகாட்டல்களை புதுமையாகவும், எளிமையாகவும், தெளிவாகவும் உங்கள் பதிவுகளில் வெளிப்படுத்துவது உங்கள் தனித்தன்மை மற்றும் தெளிந்த சிந்தனையின் வெளிப்பாடாக இருக்கிறது.

தங்கள் பதிவுகள் நிறைய தன்னம்பிக்கை மற்றும் சில நேரங்களில் எளிமையாக சற்றே மாற்றி யோசித்தல் வேண்டும் என்ற உற்சாகத்தையும் உந்துதலையும் தருகிறது. குறிப்பாக தொழில்நுட்பங்களை அன்றாட வாழ்வில் எவ்விதம் பாதுகாப்பாக பயன்படுத்துவது போன்ற நுணுக்கங்களை ஒரு நல்ல தோழமை நிறைந்த குரு போல் பதிவுகள் மூலம் வழிகாட்டுவது பாராட்டிற்குரியது.

1990-களில் கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் எடுத்திருந்த சமயத்தில், உங்கள் நேர்க்காணல்களை டிவி மற்றும் பத்திரிகைகளில் பார்த்து நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டதுடன் எங்கள் வாழ்க்கையை இன்றுவரை அப்டேட் செய்து கொண்டே இருக்க நீங்கள்தான் எப்போதும் எங்கள் ரோல் மாடல்!

17. ராம்குமார்

காம்கேரின் வாழ்க்கைப் பயிற்சி!

காம்கேரின் பதிவுகள் நேர்மறைச்சிந்தனையை உருவாக்கிறது. காலை எழுந்தவுடன் படிப்பு அல்லது காப்பி என்பதுபோல் காலை எழுந்தவுடன் தங்கள் பதிவுகளை படித்துவிட்டால் மனதில் புத்துணர்ச்சி பொங்குகிறது. இதன் மூலம் உடலும் சுறுசுறுப்பாகிறது. இதனால் நாள் முழுதும் எதையும் மனோதிடத்துடன் கையாளும் நிலை உருவாகிறது.

என்னைப் பொறுத்தவரை மூச்சுப் பயிற்சி, நடைப் பயிற்சி போல காம்கேர் பதிவுகளை படிப்பதும் ஒருவகை வாழ்க்கைப் பயிற்சியாகவே தோன்றுகிறது.

மறைந்த பிரபல நடிகர் ஒருவர். அவரை பலருக்குப் பிடித்தாலும் அவர் குறித்து சிலர் ‘அவர் நல்லவர் அல்ல. ஆனால் நல்லவரைப் போல நடிக்கிறார்’ என்பர். எதுவும் பயிற்சியால் கைகூடும். நடிப்பு என்றாலும் நல்ல செயல்களை தொடர்ந்து செய்யும்போது தானே தீய எண்ணம் குறைந்து நல்லவராக மாற வாய்ப்பு உண்டாகும். ஆம். காம்கேர் OTP பதிவுகள் நற்பயிற்சியைக் கொடுக்கும். நேர்மறை சிந்தனையுள்ள தொடர் பயிற்சியை அளிக்கும் காம்கேர் புவனேஸ்வரி அவர்களின் எழுத்து  வாழ்க்கைக்கு அவசியமான நல்லவற்றை மட்டுமே தரும். நன்றி!

18. பானு கணேசன்

மிமிக்கிரியில் மயங்கிய இரண்டரை வயதுக் குழந்தை!

காம்கேரின் OTP பதிவுகளை ஆரம்பத்திலிருந்தே படித்து வருகிறேன். காம்கேர் புவனேஸ்வரி அவர்களின் எழுத்துக்கள், ஆவணப்படங்கள், அனிமேஷன்கள், யுடியூப் வீடியோக்கள் என அனைத்துமே மிகவும் சிறப்பு. மனதைக் கவர்ந்தவை. அவரது நிறுவனத்தின் குழந்தைகளுக்கான தயாரிப்புகளை எங்கள் பேரக்குழந்தைகள் ரசிக்கும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.

குழந்தைகளுக்கான கந்தர் சஷ்டிக் கவசம், அழ. வள்ளியப்பா பாடல்கள், கதைகள் என அனைத்துமே ‘வேற லெவல்’ என்று சொல்வார்களே அந்த ரகம்.

அதிலும் முக்கியமாக, எங்கள் பக்கத்து வீட்டில் இருந்த ராஜஸ்தான் குடும்பத்துக் குழந்தை ‘தினம் ஒரு பழம்’ என்ற அனிமேஷன் வீடியோவில் வருகின்ற 30 பழங்களின் தொகுப்பை ஆர்வத்துடன் ரசித்த அழகு இப்போதுவரை நினைவில் நிற்கிறது.

அவர்கள் குடும்பம் சென்னைக்கு, வேறொரு இடத்திலிருந்து எங்கள் குடியிருப்புக்கு அருகில் வந்தபோது அந்த குழந்தைக்கு 6 மாதங்களே ஆகியிருந்தது. எங்களுடன் பழகியதில் தமிழ் கற்றாள்.

குறிப்பாக காம்கேரின் ‘தினம் ஒரு பழம்’ என்ற கார்ட்டூன் படைப்பில் பழங்கள் அனிமேஷனில் ஆடிப்பாடுகின்ற காட்சிகளை திரும்பத் திரும்பப் பார்த்து, அதில் வருகின்ற ஆடல் பாடலுடன் தானும் கூடவே குரல் கொடுத்துக்கொண்டே வருவாள். ஆடிப்பாடுவாள். இத்தனைக்கும் அப்போது அவளுக்கு இரண்டரை வயதுதான்.

தமிழே தெரியாத ஒரு குழந்தை, தமிழில் காம்கேர் வெளியிட்ட அனிமேஷன் படைப்பைப் பார்த்து தானும் கூடவே சேர்ந்து சுத்த தமிழில் உச்சரித்துப் பாடியதும், ஆடியதும் எங்களைப் பொறுத்தவரை அதிசயமே. ஆமாம். இரண்டரை வயது குழந்தை செய்த அதிசயம்.

அதைக் கண்குளிர கண்டு களித்து ஆனந்தப்பட்டது எங்கள் பாக்கியம். அவள் தினமும் எங்கள் வீட்டுக்கு வருவாள். வந்தவுடன் அந்த வீடியோவை போடச் சொல்வாள். தினமும் ஒருமுறை அதை பார்த்த பிறகே மற்ற விளையாட்டுகள், சேட்டைகள் எல்லாமே.

அதற்கும் ஒரு காரணம் உண்டு.

‘தினம் ஒரு பழம்’ என்ற அந்த அனிமேஷன் படைப்பில் காம்கேர் புவனேஸ்வரி அவர்கள் 30 பழங்களுக்கும் 30 விதமான குரல்களில் மிமிக்கிரி செய்திருந்தது அவளை மிகவும் ஈர்த்தது. அவளை மட்டுமல்ல எங்களையும்தான்.

(குழந்தை ரசித்த அந்த குறிப்பிட்ட அனிமேஷன் படைப்பு https://youtu.be/-F__fsgMhO4…)

அவர்கள் குடும்பம் மாற்றலாகி போனாலும் மறக்க இயலாத அனுபவம் அது.

19. நல்லதம்பி

வாழ்க்கையில் முன்னேற நினைப்பவர்களுக்கான OTP!

பொதுவாக முகநூலில் எழுதுபவர்கள் வாரத்தில் ஓரிரு முறையோ அல்லது அவரவர்களுக்கு நேரம் கிடைக்கும்போதோ எழுதுவார்கள். மற்றவர்கள் எழுதியதைக்கூட பகிர்வார்கள். ஆனால், நான் அறிந்தவரை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நாள் நேரம் தவறாமல் அனைவரும் படிக்கும்படியாக எழுதிக்கொண்டு இருப்பவர் காம்கேர் கே.புவனேஸ்வரி அவர்கள் மட்டுமே.

நான் நாள் தவறாமல் படித்து வருகிறேன். அவரின் எழுத்துக்கள் வாழ்வியல் நடைமுறையிலிருந்து மனோதத்துவம் தொழில்நுட்பம் ஆரோக்கியம் சமையல் குறிப்புகள் என பரந்துவிரிந்து சென்றுகொண்டே இருக்கிறது.

‘எப்படி இப்படி?’ என்று வியக்கும் அளவுக்கு உள்ளது இவரது எழுத்தின் ஆழமும், பாரம்பர்யம் மாறாத கருத்துச் செரிவும், நவீனத்துவமும். இது இன்றளவும் எனக்கு ஆச்சர்யமே.

அனைவரும் நன்றாக இருக்கவேண்டும் என்ற நல்ல உள்ளம் அவரது எழுத்தில் தெரிகிறது. வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள் அவரது எழுத்துக்களை படித்து பின்பற்றிவந்தால் போதும்.

இவரைப்பற்றி  சொல்ல வேண்டுமானால் இன்னும் நிறைய சொல்லலாம். அந்த அளவுக்கு தகுதியானவர். வாழ்த்துக்கள்.

20. கா. வசந்தகுமாரி

‘கொரோனாவுக்கு கபசுர குடிநீர், தன்னம்பிக்கைக்கு காம்கேரின் சிந்தனைகள்’!

காம்கேர் பதிவுகளை கடந்த ஆண்டு இறுதியில் இருந்து படித்து வருகிறேன். முதன்முதலாக படிக்கும்போதே ஏதோ ஒரு ஈர்ப்பு என்னை கவர்ந்து இழுத்தது. கொரானா  காலகட்டத்தில் மனம் தளர்ந்து இருந்த நேரத்தில்  காம்கேர் புவனேஸ்வரி அவர்களின் தன்னம்பிக்கை எழுத்து என்னை தலைநிமிர்ந்து உட்கார செய்தது. ‘கொரோனாவுக்கு கபசுர குடிநீர், தன்னம்பிக்கைக்கு காம்கேரின் சிந்தனைகள்’ எனும் அளவுக்கு ஆழ்ந்த நம்பிக்கையை விதைத்து.

வாழ்க்கையில் அன்றாடம்  எதிர்கொள்ளும்  நிறைய கேள்விகளுக்கு எனக்கு மிகச்சரியான நேரத்தில்  நெற்றிபொட்டில் அடித்தாற்போல் நேர்மறையான பதில் கிடைத்தது.  முற்றிலும் மாறுபட்ட புதிய கோணத்தில் தினமும் புதுப்புதுத் தகவல்களை தாங்கி வரும் காம்கேர் பதிவுகள் என்னை  உற்சாகப்படுத்தி வருகிறது.

எல்லாவற்றுக்கும் நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல சுற்றி வளைக்காமல் நேரான பதில்கள், எந்த விஷயத்தையும் தைரியமாக எடுத்துப் பேசுதல், மாற்றி யோசிக்க வைக்கும் அதே நேரம் சரியாகவும் சிந்திக்கச் சொல்லும் பாங்கு என சொல்லிக்கொண்டே போகலாம் காம்கேர் புவனேஸ்வரி அவர்களின் எழுத்தின் சிறப்பை.

காபி அனுபவங்கள், அம்மா அப்பா  பற்றி, தொழில்நுட்பம் உலகம் குறித்து, கம்ப்யூட்டர் மொபைல் குறித்து… இன்னும் நிறைய சொல்லி கொண்டே இருக்கலாம். ஆக, நான் தினமும் காம்கேரின் எழுத்தின் வழியாக, சிந்தனையின் வாயிலாகப் பயணிக்கிறேன் என்பதில் பெருமைப்படுகிறேன்.

21. குமரன் கந்தசாமி

இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே!

காம்கேரின் பதிவுகள் சமூக அக்கறை மற்றும் உளவியல் சார்ந்த கருத்துக்கள் கொண்டதாக உள்ளன.   இப்படிப்பட்ட எழுத்தின் காரணகர்த்தாவான காம்கேர் புவனேஸ்வரி அவர்களின்  சுய ஒழுக்கம், கட்டுப்பாடு அனைவருக்கும் மதிப்பளித்தல், நேரம் தவறாமை, நேர்மை இவை எல்லாம் பார்க்கும் போது நாமும் ஏன் இவ்வாறு  நேர்மறை எண்ணங்களுடன் வாழக் கூடாது என்று நம்மையும் நேர் வழியில் வாழத் தூண்டுகிறது.

மனித வாழ்வில் இவர் எழுத்துக்கள் தொடாத பக்கங்களே இல்லை எனலாம். சிறுவர் முதல் பெரியவர் வரை, படித்தவர்கள் படிக்காதவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஆன ஆகச் சிறந்த அறிவுரைகளுடன் காம்கேர் பதிவுகள் கடந்து செல்கிறது.

தங்கள் பதிவுகளில் இருந்து நிறைய அறிவுரைகளை என்னுடைய வாழ்விலும் வேலையிலும் நடைமுறைப்படுத்தி நிறைய பயன் அடைந்து இருக்கிறேன்.

யாருக்கேனும் நாம் அறிவுரை கூற வேண்டும் எனில் தங்கள் பதிவுகளை ஒரு முறை புரட்டிப் பார்த்து தாராளமாக நல்ல நேர்மறையான அறிவுரை சொல்லலாம். அந்த அளவிற்கு அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போல் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

சுருக்கமாக சொன்னால்,  மனித வாழ்க்கைக்குத் தேவையான அகராதி போலவும் கடலில் தத்தளிக்கும் கப்பலுக்கான கலங்கரை விளக்கம் போலவும் இவரது பதிவுகள் உள்ளன.

எதிர்காலத்தில் கண்டிப்பாக இவரது பதிவுகளின் தாக்கத்தால் மிக மிக நல்ல மனித சமுதாயம் உருவாகும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இவரை இந்த அளவுக்கு ஒரு புடம் போட்ட தங்கம் போல சமுதாயத்திற்கு பயனளிக்கும் வகையில் வளர்த்து ஆளாக்கிக் கொடுத்த இவரது தாய் தந்தைக்கு எனது மரியாதைக்குரிய வணக்கங்கள்.

22. மலர் டிஎஸ்பி செல்வம்!

திறந்த புத்தகமும், ஆயிரம் அதிகாலை பதிவுகளும்!

வெற்றி பெற்ற ஒருவர் தன் வாழ்க்கை அனுபவங்களைத் திறந்த புத்தகமாக அறியத் தருவது அரிது. அப்படியே தந்தாலும் தினந்தோறும் ஒரு நித்ய கடமையாக அதைச் செய்வது அதனினும் அரிது. எளிமையாக இனிமையாகத் தந்து வாசிப்பவர் மனதில் ஒரு மாற்றுச் சிந்தனையை விதைப்பது அரிதினும் அரிது. ஆயிரம் அதிகாலைப் பதிவுகள் தந்த அபூர்வ சிந்தாமணி காம்கேர் புவனேஸ்வரிக்கு வாழ்த்துகள்!

23. விவேகபாரதி ரமணன்

அசத்தும் OTP தொடர்!

வியக்க வைக்கும் தெளிவு,
உண்மை உள்ள எழுத்தும் நோக்கமும்,
முழு புரிதலுடன்  விளக்கங்கள்,
மனித நேயமுடன்  வாசகர் அணுகுமுறை,
நேர்த்தியான பல்முனை  தலைப்புகள்
அசத்தும்  OTP தொடர்!
காம்கேர் புவனேஸ்வரி அவர்களின்
உழைப்பும்  உற்சாகமும் அர்ப்பணிப்பும்
மிக மிக பாராட்டுக்குரியது.

வாழ்த்துக்களுடன் விவேகபாரதி ரமணன்!

24. கண்ணன் சரண்யா

இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா?

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் எதிர்பார்ப்பது ஒரு சிறிய அளவிலான அங்கீகாரம் / பாராட்டு. காம்கேர் புவனேஸ்வரி அவர்களின் எழுத்து எந்த அளவுக்கு நேர்மறையை கொடுக்கிறதோ அதே அளவுக்கு அவர் வாசகர்களுக்குக் கொடுக்கும் கெளரவமும் சொல்லனா நேர்மறை உணர்வை உள்செலுத்துகிறது. அந்த செயல்பாடு அவரின் எழுத்துக்கு இணையான ஊக்கத்தை அளிக்கிறது.

‘இதெல்லாம் ஒரு விஷயமா?’ என்று பலர் எண்ணும்போது, இதுவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயமே என பல நுணுக்கமான செய்திகளைத் தாங்கி நேரந்தவறாமல் சுவாரசியமாக வெளிவருகின்றது ‘ஜம்முனு வாழ காம்கேரின் OTP’ என்ற பகுதி.

இரண்டு வருடங்களுக்கு முன், ஏழாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த என் மகளுக்கு பள்ளியில், ஒவ்வொரு துறையிலும் சாதனைப் பெண்மணிகளைக் குறித்து ‘Top 10 Women Achievers in TamilNadu’ என்ற தலைப்பில் ஒரு ப்ராஜெக்ட் செய்ய வேண்டி இருந்தது. அதற்காக கணினி தொழில்நுட்பத்துறையில் பிசினஸ் பெண்மணியாக மட்டுமில்லாமல் தன் தொழில்நுட்ப அனுபவங்களை புத்தகங்களாக எழுதி அதிலும் சதம் அடித்துள்ள காம்கேர் புவனேஸ்வரி அவர்களைப் பற்றிய குறிப்புகளை இணைத்து என் மகள் ப்ராஜெக்ட் செய்திருந்தாள். அதனை மரியாதை நிமித்தமாக புவனேஸ்வரி மேடத்திடம் கூறினேன். மனமகிழ்ச்சியுடன் அதையும் தன் அதிகாலைப் பதிவுகளில் இடம் பெறச் செய்து என் மகளை கெளரவித்தார்.

எதிரில் இருப்பவர் சிறியவரோ, பெரியவரோ அனைவரையும் ஒன்றுபோல் மதிக்கும் அவரது பண்பு வியப்பதற்குரியது. அனைரும் கற்க வேண்டிய அரிய குணம்.

கண்ணன் சரண்யா அவர்களின் மகள் சந்தியா தயாரித்த ப்ராஜெக்ட்டின்  ஒரு பகுதி…

 

25. பா. சொக்கலிங்கம்!

பிரபலம் என்பதன் புது கோணம்!

காம்கேரின் OTP பதிவுகள்
நேரம் தவறாமை,
நேர்மறை சிந்தனை,
எண்ணம் சொல் செயல் மூன்றும் ஒன்றாக இருக்கவேண்டும்,
நாம் நம் நற்செயல்களால்
celebrity ஆகலாம்
போன்ற விஷயங்களைக்
கற்றுக் கொடுத்துள்ளது!

26. பவளமணி ஆனந்த முருகேசன்

புகழ்ந்தாரைப் போற்றி வாழ்’!

காம்கேரின் OTP பதிவுகள் அனைத்தும் அழகிய தமிழில் தமிழ் மூதாட்டியின் வைர வரிகளை நினைவூட்டுகின்றன.

ஊக்கமது கைவிடேல், ஞயம்பட உரை, தந்தை தாய்ப் பேண், குணமது கைவிடேல், சக்கர நெறி நில், சான்றோர் இனத்து இரு, சுளிக்கச் சொல்லேல்,

செய்வன திருந்தச் செய்… இந்த வரிசையில் ‘புகழ்ந்தாரைப் போற்றி வாழ்’ என தன் எழுத்தைப் படித்து விமர்சிக்கும் அனைவரையும் பெருமைப்படுத்தும் காம்கேர் பதிவுகளின் ஆசிரியர் காம்கேர் புவனேஸ்வரி அவர்களுக்கு நன்றி!

27. Er. செந்தில்குமார் ஆராமிர்தம்

நாங்கள் மாறிவருவதுதான் உண்மை!

காலங்கள் மாறியது,
காட்சிகளும் மாறியதுதான்.
ஆனால்
தங்களின் மீதுள்ள மதிப்பு
மாறவும் இல்லை, மறையவுமில்லை.
ஊருக்கெல்லாம் உதவும்
ஊற்று போல் ஊறிக்கொண்டே இருக்கிறது.
உதிக்கும் சூரியன் உச்சியை நோக்கி நகர்வதுபோல்
நகர்ந்து கொண்டே இருக்கிறது.
தங்களின் நற்பதிவுகளால்
நாங்கள் மாறிவருவது தான் உண்மை.
கதை, கவிதை, கட்டுரை எழுதி மாற்றத்தை
உருவாக்கும் பலரில்
மாற்றத்தை உருவாக்குவதற்காகவே
எழுதும் தங்களின் பணி தனித்தன்மை
கொண்டதாக மேன்மைமிக்கதாக இருக்கிறது.
தொடரட்டும் தங்களின் செம்பணி. வாழ்த்துக்கள்!

28. நித்தியஸ்ரீ

வழி நடத்தும் காம்கேரின் OTP!

ஆயிரம் பதிவுகளை நோக்கி செல்லும் காம்கேர் கே. புவனேஸ்வரி மேம் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நான் நித்யஸ்ரீ, எனது தந்தை உதயபாபு. அவர் மூலமாக உங்களை அறிந்தேன். ஃபேஸ்புக் அதிகம் பார்க்கவில்லை என்றாலும் உங்களை எனது தந்தை அறிமுகப்படுத்திய பின் உங்கள் பதிவை படிப்பதற்காகவே ஃபேஸ்புக் பார்ப்பது வழக்கம். ஹலோ வித் காம்கேர் என்று ஆரம்பித்து இந்த நாள் இனிய நாள் ஆகட்டும் என்று நீங்கள்  முடிக்கும் ஒவ்வொரு பதிவும் எங்கள் நாளை இனிய நாளாகவே மாற்றியது. கொரோனா காலத்தில் அனைவரும் வீட்டில் முடங்கிக் கிடந்தபோதும் உங்கள் பதிவு எங்களுக்கு உற்சாகத்தையும், நம்பிக்கையையும் கொடுத்தது. ‘பெண்கள் முயன்றால் எதையும் சாதிக்கலாம் என்ற வார்த்தைக்கு  காம்கேர் கே. புவனேஸ்வரி அவர்களே உதாரணம்’ என்று என் தந்தை என்னிடம் அடிக்கடி கூறுவார். உங்களின் ஒவ்வொரு பதிவும் சிறந்த வழிகாட்டியாக என்னை வழிநடத்தி வருகிறது. என்றும் உங்கள் வழியில் நித்தியஸ்ரீ.

29. உதயபாபு!

குடும்பமே செதுக்கப்பட்டோம்!

‘காம்கேர் ஆயிரம்’ கருத்தியல் பயணத்தில் சக வாசகராய் பயணிப்பதில் மகிழ்ச்சி. முகநூலில் இலக்கின்றி பயணித்த எனக்கு, உங்கL நட்பு வட்டத்துக்குள் இடம்! இறுகபற்றிக் கொண்டோம்! அள்ள, அள்ள குறையாத அமுதசுரபி பதிவுகளால் பாற்கடலைக் கடைந்து கிடைத்த அமுதம் உண்ட தேவர்களாய் புத்துயிர் பெற்றோம். உங்கள் பதிவுகளில் நானும் எனது மகள்களும் கற்றவை டைம் மேனேஜ்மென்ட், சூழலை எதிர்கொள்ளும் திறன், சுயம் இழக்காமல் தன்னை வெளிப்படுத்துதல். பிறரை காயப்படுத்தாத செயல்கள் என காம்கேரின் ஆயிரம் பதிவுகளில் கற்றது ஏராளம்.

‘இவன் கோபக்காரன் நிலையாக இருக்க மாட்டான்’ என்ற கூற்றை பொய்யாக்கிய எனது புதிய அணுகுமுறை கண்டு அலுவலகத்தில் வியக்கின்றனர். மனைவி, மகள் என எனது குடும்பமே செதுக்கப்பட்டோம். எங்களை போன்றே நிறைய ஏகலைவன்கள் ‘காம்கேர் மேம்’ அவர்களுக்கு குருதட்சனை தர காத்திருக்கிறோம். வாழ்த்துக்கள் மேம்.

30. ஷெண்பா பாலச்சந்திரன்

பேசும் எழுத்து!

பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக உங்களது பேட்டிகள் மற்றும் புத்தகங்கள் மூலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். உங்களது எளிமையும், ஒவ்வொரு வார்த்தைகளும் நேர்மறையான எண்ணத்தையே எங்களுக்குள் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது. எவ்வளவு வேலை பளு இருப்பினும், உங்களது எழுத்தின் மூலமாக எங்களிடம் பேசத் தவறியதே இல்லை. இதை எண்ணி நான் பல முறை வியந்திருக்கிறேன். நீங்கள், ‘என்னுடைய வழிகாட்டி’என்பதை மீண்டும் இங்கே அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன் மேம். உங்களது அளப்பரிய பணி மேலும் சிறக்கட்டும்.

31. லயன் ஜே. பாஸ்கரன்

அறிவுரைகளே சொல்லாமல் பண்படுத்தும் எழுத்து!

Very effective & useful postings daily. That too by 6 am. You are proving your integrity by posting a sorry message for delayed postings also. I personally render my thanks for giving WhatsApp sharing post which I am sharing through WhatsApp. Since all postings are practical and your personal experience it can be followed by every one.

Your magnanimity proves that in no post your are advising anybody. Each & every word you choose to write is awesome.

Thanks for accepting my friend request and being in touch.

Lion Bhaskaran J

தினமும் காலையில் 6 மணிக்கு தரமான வாழ்வியலோடு ஒட்டிய அனைவருக்கும் பயனுள்ள வகையில் வரும் தங்கள் பதிவுகள், சிறிது நேர தாமதத்துக்கும் மன்னிப்புக்கோரும் பண்பு, தற்போதய சூழ்நிலைக்கேற்ப வாட்ஸ்அப்பில் பதிய மீண்டும் அதே பதிவு, அனைத்திற்கும் மேலாக அறிவுரைகளே இல்லாத யாரையும் புண்படுத்தாத வார்த்தைத் தேர்வு போன்றவற்றால் ஈர்க்கப்பட்டு தினமும் காலை 6 மணியை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்கள் வாசகர் வட்டாரத்தில் நானும் ஒருவனாய் பெருமை கொள்கிறேன்.

லயன் பாஸ்கரன் ஜே

32. வசுதா சிவசுப்ரமணியன்

குழப்பம் தீர்க்கும் OTP!

பொதுவாக நாம் பின்பற்றக் கூடிய சில விஷயங்கள் ‘நாம் ஏன் அவற்றைப் பின்பற்றுகிறோம்?’ என்று சில நேரங்களில் யோசிக்க வைக்கும். காம்கேரின் OTP பதிவுகளில் இதுபோன்ற என் சந்தேகங்களுக்கான விளக்கங்கள் கிடைத்து வருகின்றன. நாம் மாறக்கூடாது, நாம் சரியான வேலைகளைத்தான் செய்து கொண்டிருக்கிறோம், நாம் சரியான கண்ணோட்டத்தில்தான் போய் கொண்டிருக்கிறோம், நாம் இந்த விஷயத்தில் மட்டும் கொஞ்சம் மாறலாம் என்றெல்லாம் தெளிவை கொடுத்து வருகின்றன.

உங்கள் எல்லா பதிவுகளையும் என்னால் முழுமையாக படிக்க முடியவில்லை என்றாலும் எனது குழப்பமான தருணங்களில், எனக்கு விளக்கம் தேவைப்படுகிற நேரங்களில் எப்படியாவது உங்கள் பதிவுகள் என் பேஸ்புக் பக்கத்தில் வந்துவிடும். அதை படித்தவுடன் எனக்கு தெளிவு ஏற்படும்.

நாம் சரியான வழியில் செல்கிறோம், நம் குழந்தைகளை சரியான வழியிலேயே அழைத்துச் செல்கிறோம் என்ற ஒரு நல்ல மன ஆறுதலை தரக்கூடிய பதிவுகளாகத்தான் உங்கள் பதிவுகள் எனக்கு கிடைக்கின்றன.

மேலும் இதுபோன்ற இன்னும் சிறப்பான பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். தங்கள் சேவை தொடரட்டும்!

33. மாரியப்பன்

மூன்று தலைமுறைக்கும் உதவும் படைப்புகள்!

காம்கேர் மேடமிற்கு,

இப்போது எனக்கு 67 வயதாகிறது. 2003-ம் ஆண்டு  என் மகன்கள் மூலம்தான் கம்யூட்டர்  அறிமுகமானது. அப்போது என் மகன் பி.ஈ படித்துக்கொண்டிருந்தார். நான் பணி செய்யும் துறை கணினி மயமாக்கப்பட்டதால் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

என் மகன்களே என் கணினி பயிற்சியாளர்கள். அவர்கள் கம்ப்யூட்டர் கற்றது காம்கேர் புவனேஸ்வரி அவர்களின் புத்தகங்கள் வாயிலாக. அப்போதெல்லாம் எங்கள்  மகன்களின் கைகளில் காம்கேர் மேடம் எழுதிய கம்ப்யூட்டர் புத்தகங்களே இருக்கும். இப்போது நான் இ-புத்தகங்கள் வாசித்து வருகிறேன். அச்சுப் புத்தகங்கள் போலவே இ-புத்தகங்களும் வாசிக்க சுலபமாக உள்ளது.

என் மகன்களுக்கு, அவர்கள் மூலம் எனக்கு, இப்போது என் பேரன் பேத்திகளுக்கு என என் குடும்பமே உங்கள் தொழில்நுட்பப் புத்தகங்களினாலும், அனிமேஷன்களினாலும் பயன்பெற்று உங்கள் படைப்புகளில் கட்டுண்டுவிட்டது.

மூன்று தலைமுறையினருக்கும் உங்கள்  எழுத்தும் தொழில்நுட்ப படைப்புகளும் உதவி வருவதை பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறேன். சிறக்கட்டும் உங்கள் பணி.

2018-ல் தான் முகநூலுக்கு வந்தேன். உங்கள் அறிமுகம் 2019-ல் இந்த நாள் இனிய நாள் என்ற உங்கள் அதிகாலைப் பதிவுகள் மூலமே கிடைத்தது. இப்போது அதன் எண்ணிக்கை 1000-த்தைத் தொட இருப்பது ஆச்சர்யமாக இல்லை. ஏனெனில் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக உங்கள் தொழில்நுட்ப அறிவு எனும் ஆலமர விழுதுகளின் நிழலில் இளைபாறி பயன்பெற்ற ஏராளமானவர்களுள் எங்கள் குடும்பமும் ஒன்று என்பதில் பெருமிதமே. வாழ்த்துகள்!

இப்படிக்கு
மாரியப்பன்

34. ரேணுகா தேவி!

ஆயிரம் பிறை கண்டவர் போன்று!

1000 பிறை கண்டவர் போன்று 1000 பதிவுகளைத் தந்த  தழிழ் மகளே வாழ்க, வளம் பல பெற்று இன்னும் இன்னும் நற்செயல்கள் பல செய்து வெற்றிபெற வாழ்த்துகிறேன்!

35. ரவி ரவிகுமார்!

அர்ப்பணிப்பு!

நேரந்தவறாமை, நேர்மறை எண்ணங்கள், செய்யும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வு. இவையே உங்கள் பதிவில் இருந்து நான் கற்றுக் கொண்ட பாடங்கள்!

36. ப்ரியா கிஷோர் (ப்ரியம்வதா சுப்பிரமணியன்)!

வெறும் பதிவுகள் அல்ல, வாழ்க்கைப் பாடங்கள்!

உங்கள் பதிவுகள் படித்த பிறகுதான் என் நாள் தொடங்குகிறது. பெற்றோர் மீது நீங்கள் வைத்திருக்கும் பாசம் பலருக்கும் பாடம். அவர்களைப் பற்றி நீங்கள் எழுதும் பதிவுகளை என் அம்மாவிற்கு படித்துக் காட்டுவேன். ஒவ்வொரு முறையும் அவர் உங்களை ஆசீர்வப்பார். உங்கள் பதிவுகள் மூலம் நான் கற்ற வாழ்க்கைப் பாடங்கள் ஏராளம். இன்னும் நீங்கள் பல சிறந்த பதிவுகளை வெளியிடவேண்டும், பல புத்தகங்களை வெளியிட வேண்டும் என்று வாழ்த்துகின்றேன். உங்கள் துறை சார்ந்த கனவுகள் அனைத்தும் நனவாக உங்கள் அபிமான விநாயகரிடம் வேண்டுகிறேன்.

37. வெங்கடசேஷன் சங்கர்!

ஈடுபாட்டுக்கும், சிரத்தைக்கும் கிடைத்த வெற்றி!

தங்களின் அதிகாலைப்பதிவுகளை கூடுமானவரை உடனுக்குடன் பார்த்துவிடுவேன். தங்களின் ஒவ்வொரு பதிவும் வாழ்க்கைக்குத்தேவையான ஏதாவது ஒரு நல்ல தகவலைத் தாங்கி வரும் பொக்கிஷமாகும். நல்ல முன்னேற்றத்திற்கான தகவல்களை பாசிட்டிவாக மிக அருமையாக பதிவு செய்துவருகிறீர்கள். ஆரம்ப காலம்தொட்டே தாங்கள்  சார்ந்த தொழிலில் உங்களுக்கு உள்ள ஈடுபாடும் சிரத்தையும் தங்கள் பதிவுகளில் காண்கின்றேன் அதேபோல் தங்கள் தந்தை,தாயாரின் மீது தங்களுக்குரிய மரியாதையும் அன்பும் நன்கு புலனாகின்றன. தங்களது தொழில் சார்ந்த கடும் உழைப்பும் பக்தியும் தங்களை இந்த உயர்ந்த நிலைக்கு கொண்டுவந்ததை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.நன்றிகள் அம்மா.

38. இரா. இராஜ்குமார்!

தேன் அடையில் இருந்து தேன் சொட்டுவதைப் போன்ற நுணுக்கம்!

காம்கேரின் OTP, 1000 பதிவுகளையும் கடந்து அதற்கு மேலும் எழத, உங்கள் உடல் நலமும், மனநலமும் ஆரேக்கியமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறேன்.  உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசிக்கும் சாதாரண வாசகன் நான். உங்கள் பதிவுகளில் நான் கவனித்தவகையில், ஒரு பதிவு மற்றவை போல் இல்லை, ஒரு பதிவின் தொடர்ச்சியாகவும் மற்றது இல்லை.

உங்கள் புத்தங்களில்  ‘நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்’  படித்தேன்.  விருவிருப்பான நாவல் போல் படித்து முடித்துவிட்டுதான் கீழே வைத்தேன்.  உங்கள் பதிவுகளில் ‘தேன் ஒழுக இனிக்க இனிக்க’ எழுதுகிறீர்கள்.

இதன் அர்த்தம், தேன் அடையில் இருந்து தேன் சொட்டுவதைப் போன்ற நுணுக்கத்தை உங்கள் எழுத்துகளில் காண்கிறேன். தேன் மட்டும்தான் மேலிருந்து கீழே விழும்போது ஒரே சீராக (flow),  ஒரே கனத்தில் (Thickness) விழும். நிறுத்தும்போதும் சொட்டு சொட்டாக பின்தொடர்ச்சி இருக்காது (Flow of drop). அப்படி சீராகவும் அதே சமயம் ஒருநாள் பதிவுக்கும் அடுத்த நாள் பதிவுக்கும் தொடர்பில்லாமல் வெவ்வேறு தலைப்புகளில் தொய்வில்லாமல் நேர்த்தியாக எழுதுவது மிக சிறப்பாக உள்ளது.  வாழ்த்துக்கள்.

39. கிருபா!

மனோதத்துவ அறிஞரா, தொழில்நுட்ப வல்லுநரா?

மதிப்பிற்குரிய காம்கேர் புவனேஸ்வரி அம்மாவிற்கு, வணக்கம். என் அப்பாவின் மூலமாக தங்களின் எழுத்துகளை சிறு வயதிலிருந்தே விஜயபாரதம் இதழில் படித்து வருகிறேன். அப்போது உங்களை மனோதத்துவ அறிஞர் என்றே எண்ணினேன். ஆனால் தொழில்நுட்ப வல்லுநர் என பின்னர் தான் தெரிந்து கொண்டேன்.

தினமும் காலை முகநூலில் தாங்கள் எழுதி வரும் கருத்துகள் ஆண்கள், பெண்கள், மாணவர்கள், வயதானவர்கள் என அனைவரும் படித்து பயன்பெறும் வகையில் சிறப்பாக உள்ளது. நாள்தோறும் நாம் கடந்து செல்லும் சாதாரண விஷயங்களை கூட மாறுபட்டு சிந்தித்து சமூக கருத்தோடு எழுதி, அனைவரையும் யோசிக்க வைத்து விடுகிறீர்கள்.

உங்கள் அலுவலக தொழில்நுட்ப பணிகளுக்கு இடையிலும், வெறும் பொழுதுபோக்குற்காக மட்டும் எழுதாமல் பிறருக்கு பயன்படும் வண்ணம் சீரிய சிந்தனைகளையும், நேர்மறை எண்ணங்களையும் அனைவரது மனதிலும் விதைக்கிறீர்கள்.

மேலும் உங்களின் கருத்திற்கு கமெண்ட் செய்யும் அனைவருக்கும் பொறுமையாக பதிலளித்து,  தவறாகவும், தப்பாகவும் புரிந்து கொள்பவர்களுக்கு விளக்கமும் அளிக்கும் தங்களின் குணம் அளவிட முடியாதது. இதனால் பலருக்கு எழுதும் ஆர்வத்தையும் தூண்டுகிறீர்கள்.

1000 பதிவிற்கு வாழ்த்துகள்… நன்றி!

40. பனசை நடராஜன், சிங்கப்பூர்

வாழும் படைப்புகள்!

நேர்மறை எண்ணத்தை விதைத்து, தன்னம்பிக்கை வளரும்படி எழுதும் வல்லமை பெற்றவர் சகோதரி காம்கேர் புவனேஸ்வரி. மற்றவர்களுக்கு அறிவுரையாகச் சொல்லாமல் அதன்படியே வாழ்பவர். நாள்தோறும் தவறாமல் பொறுப்புடன் எழுதுகிற அவருடைய செயல் போற்றுதலுக்குரியது. அதனாலேயே அவருடைய பதிவுகள் மனதுக்கு நெருக்கமாகிறது. கடந்து போகாமல் படிக்கவும் தூண்டுகிறது.

என்னுடைய நிறையக் குழப்பங்களுக்கு அவரது எழுத்துக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க, தெளிவான தீர்வுகளைத் தந்துள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு என் மகளுக்கு அவருடைய நூல்களை படிக்கக் கொடுத்தேன். இப்போது அவருடைய முகநூல் பதிவுகளையும் ஆர்வமாகப் படிக்கிறார்.

எளிய நடையில் எழுதுவதாலேயே இளைஞர்களையும் கவர்கிறார்.

2015ஆம் ஆண்டு சிங்கப்பூர் முஸ்தபா செண்டரில் சகோதரியின் நூல் விற்பனைக்கு இருந்ததை படம் எடுத்து அனுப்பினேன். அந்த அளவுக்கு அவரது படைப்புகள் உலகெங்கும் பரவலாக வாசிக்கப்படுகிறது.

விடாமுயற்சி, உழைப்பு, பொறுப்புணர்வு, தன்னம்பிக்கை, பெற்றோரைப் பேணுதல் இன்னும் பல இவர் பெயர் சொன்னால் நினைவில் வரும்.

மழையைப் போலத்
தரமான படைப்புகள் தொடரட்டும்.
மனங்களில் எல்லாம்
நற்சிந்தனைகள் வளரட்டும்!
வாழ்த்தி வணங்குகிறேன்.

41. மதுராம்பாள்!

தவறே சொல்ல முடியாத படைப்புகள்!

காம்கேர் புவனேஸ்வரி: இந்த பெயரை நினைத்தாலே முதலில் தோன்றுவது, மிக இளவயதில் கணினி உலகில் மிகப்பெரிய தொழிலதிபராகப் பரிமளித்து லட்சக்கணக்கானவர்களுக்கு கணினி சம்பந்தப்பட்ட அடிப்படை அறிவை தனது பலதரப்பட்ட தயாரிப்புகள் மூலம் பரப்பி ஆசானாக திகழ்ந்து வருவதே. அடுத்து அவரது எழுத்துக்களின் வலிமையான கருத்துக்கள். அதுவும் எளிய நடையில். எதைச் சொல்வது எதை விடுவது. அப்பப்பா அவ்வளவும் முத்துக்கள்.

ஐந்து விஷயங்களை மட்டும் இங்கு பகிர்கிறேன்.

முதலாவதாக சங்கு புஷ்பம் பற்றிய கட்டுரை. செடியுடன் அன்பாக பேசிக்கிட்டே பூப்பறிக்கும் போது அந்த மகிழ்ச்சியில் நிறைய பூத்து குலுங்கும் என்பது என் அனுபவத்தில் பார்த்த உண்மை.

இரண்டாவதாக ‘மீ டூ’ பிரச்னை பற்றிய செய்தியை மேலோட்டமாக எழுதாமல், அப்படிப்பட்ட சூழலில் பெண்ணின் மனப்போராட்டத்தை விளக்கிய விதம் எனக்கு பிடித்தது. பெண்கள் குறித்து எழுதும் அதே சமயம் ஆணுக்கான பிரச்சனைகளையும் சொல்லாமல் இருப்பதில்லை. இருசாரரின் நியாயங்களையும் எடுத்துரைப்பது வியக்க வைக்கும் விஷயம்.

மூன்றாவதாக பெண் துப்புரவு தொழிலாளி சுத்தமான உடை உடுத்தி சிரித்த முகத்துடன் அவரது ஆட்டோகாரை ஓட்டி வந்ததை ரசித்து எழுதிய விதம்.

நான்காவதாக, அலுவலகத்தில் பொது இடங்களில் எப்படி பழக வேண்டும் என்பதையும் ஒரு எல்லை தாண்டி சொந்த விஷயங்களை பகிர வேண்டாம் என்பதையும் இத்தனை நாசூக்காக யாராலும் எழுத முடியாது. அத்தனை சென்சிடிவான விஷயத்தை இத்தனை வலிமையாக எப்படி இவரால் எழுத முடிகிறது என்று நான் ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.

ஐந்தாவதாக, ஒருமுறை காதினாலயும் பார்க்க முடியும், வாயினாலும் கேட்க முடியும், கண்களாலும் பேச முடியும் என்று ஒரு செய்தியை அருமையாக எழுதி இருந்தார். ‘அட தவறாக எழுதி விட்டாரோ… காதினால் கேட்கணும், வாயினால் பேசணும், கண்களால் பார்க்கணும் என்றல்லவா வரவேண்டும்… அப்பாடா ஒரு தவறை இவர் எழுத்தில் கண்டுபிடிச்சுட்டோம்ல…’ என்று ஒரு சிலர் அவசரக்குடுக்கையாய் பின்னூட்டமிட்டிருந்தபோது இவர் ‘தான் எழுதியது சரியே’ என்று சொல்லி அதற்கு விளக்கமும் கொடுத்திருந்தார். தன் பக்க நியாயத்தை எடுத்துரைத்த விதம் அட்டகாசம்.

இன்னும் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவரது எழுத்தையும், அனிமேஷன், ஆவணப்படங்கள் என மற்ற படைப்புகளையும் இன்ன பிற விஷயங்களையும் இவரையும் தனியாக பிரித்துவிட முடியாது. இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. காரணம், இவர் வாழ்க்கையை எழுதுகிறார்.

என் கணவர் பதினைந்து வருடங்களுக்கும் முன்பு இவரது நிறுவனத்தின் ஆடியோ வீடியோ பிரிவில் திருக்குறள் ப்ராஜெக்ட்டை வானொலி வழி ‘தினம் ஒரு திருக்குறள்’ என்ற நிகழ்ச்சியாக கொண்டு வந்தபோது ஒரு சில திருக்குறள்களை பாடி, பொருள் சொல்லி, நிகழ்கால உதாரணங்களுடன் விளக்கிய நிகழ்ச்சியில் பணி புரிந்திருப்பதாலும், என் கணவர் சொல்லி  காம்கேர் புவனேஸ்வரி அவர்களின் ஆளுமையும் செயல்திறனையும் நான் அறிந்திருப்பதாலும், அவற்றை எல்லாம் சொல்லாமல் இவரது எழுத்தை மட்டும் எனக்கு விமர்சிக்கத் தெரியவில்லை.

அதனால் காம்கேர் படைப்புகள் குறித்த என் விமர்சனம் நீண்டு விட்டது. அனைவருக்கும் நன்றி!

42. மு. கோபிகா!

ஓவியார்ப்பணத்துக்கு அன்பார்ப்பணம்!

1000-த்தை நெருங்க உள்ள ‘ஜம்முனு வாழ காம்கேரின் OTP’ பதிவிற்கு தன் அழகான ஓவியத்தின் வாயிலாக ஓவியார்ப்பணம் செய்துள்ள கோபிகாவுக்கு என் அன்பு நன்றிகள்.  காகிதத்தில் பென்சில் ஸ்கெட்ச்  செய்துள்ளார். அதுதான் ஹைலைட்.

இரண்டு தினங்களுக்கு முன்னர் இவரது சகோதரி கிருபா வாழ்த்து தெரிவித்து கருத்திட்டிருந்தார். மூன்று வயது மகனுடன் குடும்பப் பொறுப்புகளுக்கு இடையேயும் கதைகள் எழுத ஆரம்பித்துள்ளார். அதற்கு உந்துதல் என் பதிவுகள் என சொல்லி இருந்தார்.

இவர்கள் இருவரின் தந்தை முருகேஷ் பால கிருஷ்ணன் அவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் வாழ்த்தி கருத்திட்டிருந்தார்.

இப்படி குடும்பமாக  கொண்டாடி மகிழும் அளவுக்கு என்  சிந்தனை அமைந்திருப்பது இறை செயலே அன்றி வேறென்னவாக இருக்க முடியும்?

இந்த குடும்பத்துக்கு என் மனமார்ந்த அன்பார்ப்பணம்!

இப்படிக்கு

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

43. S.ரெஜினா மேரி

உற்சாக டானிக்!

அன்புள்ள காம்கேர் மேம்,

நீங்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக சிறப்பான சிந்தனை செய்து, அந்த சிந்தனையை மற்றவர்களுக்குடன் பகிர்ந்து கொள்வதில் உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே. பல கருத்துக்கள் பலரால் ஏற்றுக் கொள்ளப்படும். சில கருத்துக்கள் சிலரால் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு நிராகரிக்கப்படும். அதைப்பற்றி எல்லாம் நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் தினமும் வித விதமாக சிந்தனை செய்து ‘இப்படியும் நாம் வாழ முடியும்’ என்று நீங்கள் கூறும் கருத்துகள் மிகவும் சிறப்பானது.

நான் பணிபுரியும் காவல்துறை பணியில் கடினமான நேரத்தில் படிக்க இயலாமல் இருக்கலாம். எனினும் மேலோட்டமாக நான் கமெண்ட்ஸ் செய்வது இல்லை. முழுமையாக படித்த பின்னரே நான் தங்களது பதிவிற்கு பின்னூட்டம் இடுவேன்.

உங்களது சிந்தனைகள் சமுதாயத்திற்கு இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் அத்தியாவசியமானது. அனைவரும் தனித்தனியாக வாழும் வாழ்க்கையையே பலரும் தற்போது தேர்ந்தெடுத்து கொண்டு சுயநலமாக வாழ்கிறார்கள். அது எவ்வளவு பெரிய அபத்தம் என்று பலருக்கு தெரிவதில்லை. அதனை நீங்கள் ஆணி அடித்தது போல் அவ்வபொழுது வெவ்வேறு விதமாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள்.

மேலும் ஒரு வீட்டிற்கு வயதான தாத்தா பாட்டி இருப்பது ஒரு சிறந்த நூலகம் இருப்பது போன்றதாகும். அதைப்போல பெற்றோர்களை நாம் மதிக்க வேண்டும் மற்றும் நம் உடன் பிறந்தவர்களுடன் நாம் எப்படி வாழ வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை நீங்கள் பதிவு செய்து உள்ளீர்கள்.

மேலும் இன்றைய கணினி உலகத்தில் யாரும் யாரிடமும் நின்று பதில் சொல்வதற்கு கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம்.  மனிதர்களிடம் உள்ள நேர்மை இரக்கம் கொடை போன்ற நற்பண்புகள் குறைந்துகொண்டே வருகிறது. இதையெல்லாம் அறிந்துதான் கடவுளாக பார்த்து மனிதர்களை திருந்த வைக்க அனுப்பி உள்ள தூதனாகவே கொரோனா எனும் பெருந்தொற்றை நான் எண்ணுகிறேன்.

உங்களுடைய பதிவுகள் தினமும் படிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.  உங்களுடைய இந்த பணி மேலும் சிறக்கட்டும். தூங்கிக்கொண்டிருக்கும் பலரது மூளைகளையும் இதயங்களையும் உங்களது இந்த எழுத்தும் சிந்தனையும் தட்டி எழுப்பி வருகின்றன என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

சின்ன விஷயமாக இருந்தாலும் நீங்கள் சிந்திக்கும் கோணமே வித்தியாசமானது. வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் என்பதில் நான் முழுமையாக என்னை ஈடுபடுத்தி கொள்கிறேன். எனது குடும்பம் மற்றும் எனது வேலை இரண்டிலுமே எனது பங்கினை சரியான முறையில் நான் வெளிப்படுத்தி வருகிறேன்.

இந்த சமுதாயத்திற்கு நீங்கள் சமூக வலைதளம் மூலமாக பதிவிடும் கருத்துக்கள் மிகவும் போற்றுதற்குரியது. நான் வெறுமனே புகழ்வதாக நினைக்க வேண்டாம். இது நிதர்சனமான கருத்து. எனக்குத் தோன்றியதை நான் தங்களிடம் பகிர்ந்து கொண்டேன்.

மேலும் உங்களது இந்த சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் அதிக அளவில் வெளிவர எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் வாசகர் வாசகிககளில் நானும் ஒருவர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

‘நாம் உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, அடுத்தவர்களுக்கு உபத்திரவம் செய்யாமல் வாழலாமே. நம் பெற்றோர்களுக்கு மற்றும் நம் உற்றார் உறவினர்களுக்கு, இல்லாதவர்களுக்கு இயலாதவர்களுக்கு நம்மால் முடிந்ததை செய்து வாழ முயற்சி செய்யலாமே…’ என்பது போன்ற கருத்துக்களை நீங்கள் பதிவு செய்து உள்ளீர்கள்.

அதுபோல நம் சமுதாயத்தில் எதற்கு எதைச் செய்கிறோம் என்பது போன்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் காலம் காலமாக செய்து வரும் பல விஷயங்களை நீங்கள் தெளிவுபடுத்தி வருகிறீர்கள்.

‘என்ன வாழ்க்கை இது’ என்று சலிப்பாக உள்ள போது உங்களது கருத்துக்கள் வாழ்க்கைக்கு டானிக் போன்று இருக்கும். உங்களது கருத்துக்கள் பலராலும் பல நேரங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பயனடைவது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று.

உங்களைப் பற்றி எழுதிக் கொண்டே செல்லலாம். ஏனென்றால்,
தன்னம்பிக்கையாக வாழ்வது,
சிறந்த கருத்துக்கள் சொல்வது,
சிறப்பாக வேலை செய்வது,
மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவது,
பெற்றோரையும், உடன்பிறந்தோரையும் நேசிப்பது
என நீங்கள் பின்பற்றி வாழும் வாழ்க்கைமுறை இக்காலத்துக்கு அவசியமான ஒன்று.

இது போன்ற விஷயங்களை இயல்பாகவே நான் செயல்படுத்தி வருகிறேன் என்பதை இங்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்களுடைய இந்த சமுதாயப் சீர்திருத்த பணி தொடர எனது வாழ்த்துக்கள்.

நன்றி மேடம்.

44. முனைவர் சௌந்தர மகாதேவன்

எழுத்துச் சித்திரம்!

சுருக்கென்று தைக்குமாறு நறுக்கென்று சொல்வது காம்கேர் கே.புவனேஸ்வரி அவர்களின் எடுத்துரைப்பு உத்தி. மனமே மருந்து என்றொரு பதிவில் வெள்ளைக் குப்பியும், வெள்ளை சிறு உருண்டைகளும் அதில் ஊற்றி மருந்தாக்கும் காட்சிகளும் மனத்தில் சித்திரமாய் படர்ந்தது. சில நேரங்களில் மருந்தைப் போன்று மனமும் செயல்படுகிறது. மனம் வரைவது விசித்திர சித்திரம். இப்படி எழுத்தை வாசகர்கள் மனதில் சித்திரமாக பதிய வைக்கும் அவரது எழுத்தின் நடையை நினைத்து ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.

அழகாக எழுதுவது கரமே,
அவரால் முடிவதும் வரமே!
ஆயிரம் எழுத வெற்றிப் பாயிரம் பாட
புவனேஸ்வரி அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்.

முனைவர் சௌந்தர மகாதேவன்,
தமிழ்த் துறைத் தலைவர்
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

45. சுரேஷ்பாபு கிருபா

கல்கண்டு பதிவுகளாய் பாடங்கள்!

காம்கேர் புவனேஸ்வரி அவர்களின் பதிவுகளைப் படிக்கும் போது விடையறியா வினாக்களுக்கு விடை கிடைக்கிறது. ஒரு சூழ்நிலையை , செயலை, சவாலை சந்திக்க தாங்கள் எதிர்கொண்ட அனுபவங்களைப் பகிரும் போது அவை பாடமாகிறது. சிறு வயதில் கல்கண்டில் இதுபோன்ற பதிவுகளைப் படித்துப் பயன்பெற்றிருக்கின்றேன். தற்போது காம்கேர் பதிவுகள் வாயிலாக பயன் பெறுகிறேன். பயன் பெற்றவனாய் நன்றியும், வாழ்த்துகளும் மேடம்.

46. அ. வனிதா!

வைராக்கிய வைரச் சிந்தனைகள்!

மதிப்பிற்குரிய காம்கேர் மேம்!

உங்கள் எழுத்தைப் பற்றி சுருக்கமாக ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால், தானும் உயர்ந்து தான் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்தி அழகு பார்க்கும் அற்புத தேவதையின் பொக்கிஷப் படைப்புகள் காம்கேர் OTP.

உங்கள் படைப்புகளைப் படிக்க ஆரம்பித்த பிறகுதான் ஃபேஸ்புக் அதிகம் பயன்படுத்துகிறேன். ஒருமுறை ‘தேவையில்லாத விஷயங்களுக்கு என் காதுகள் கூட மூடிக்கொள்ளும், கண்களும் செவிடாகிவிடும், வாய் குருடாகிவிடும். என் பெற்றோர் கற்றுக்கொடுத்தப் பாடம் இது!’ என எழுதி இருந்தீர்கள். அதை நான் தவறாக எழுதி விட்டீர்களோ என நினைத்து தனித்தகவலில் சுட்டிக் காட்டினேன்.

அதற்கு நீங்கள் ‘காதுகள் தானாக மூடாது, கண்களுக்கு செவிடாகும் தன்மை கிடையாது. அதுபோல வாய்க்கு குருடாகும் இயல்பும் கிடையாது. ஆனால் தேவையில்லாத விஷயங்களில் அந்தந்த உடற்பாகங்களின் இயல்பு தன்மை கூட தானாகவே மாறிவிடும் அளவுக்கு உங்களுக்கு வைராக்கியம் உண்டு என்பதை குறிப்பிடவே அவ்வாறு எழுதினேன் என பின்னூட்டமிட்டீர்கள்.

அற்புதம். தங்கள் சிந்தனையின் ஆழத்துக்கு இந்த சான்று பொன்று போதுமே.

வாழ்த்துகள் மேடம்!

47. வசுமதி சிவானந்தம்

ஆச்சர்யப் பதிவுகள்!

காலைப் பொழுதை இனிமையாக துவக்கி வைக்கும் காம்கேர் பதிவுகள் ஒவ்வொரு பதிவும் ஏதாவது ஒரு நல்ல விஷயம் கற்றுக் கொள்ள வைக்கிறது. புதிய கணினி அறிவியல் தொடர்பான விவரங்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது சிறப்பாகும். தாங்கள் சந்திக்கும் அனைவரிடமும் உள்ள நல்ல விஷயம் கவனித்து அதை அப்போதே பாராட்டி சந்தோஷப்படுத்தும் தங்கள் பண்புகள் மிகவும் சிறப்பு.‌ பெற்றோர் பற்றிய அன்பான தங்கள் பதிவுகளை மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்து ஆச்சர்யப்பட வைக்கிறது. நாமும் அனைவரிடமும் இப்படி அன்பாக இருக்க வேண்டும் என நினைக்க வைக்கும் வகையில் ஊக்கமாக உள்ளது.

தங்கள் பதிவுகள் மூலம் மேம்பட்ட ஒரு வாசகி என்பதும் என் தோழிகள் அனைவருக்கும் அவற்றை பகிர்ந்து சந்தோஷம் அடைகிறேன் என்பதை இத்தருணத்தில் தெரிவிக்க விரும்புகிறேன். வாழ்க வளமுடன்.

—***—

(Visited 1,003 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon