#கவிதை: நினைத்ததை கேட்கும் காதுகள்!

நினைத்ததை கேட்கும் காதுகள்!

சிவன் கோயிலின்
நந்தியின் காதில்
நான்கைந்து வயதிருக்கும்
குட்டி தேவதையை
தூக்கிக் காண்பித்த
ஒரு பாட்டியும்
உடன் நின்றிருந்த
அம்மாவும்
‘பெயரோடும் புகழோடும்
இருக்கணும்னு வேண்டிக்கோ செல்லம்’
என்றார்கள்!

நான் தன்னிச்சையாக
மனதுக்குள்
‘குணத்துடனும்,
நல்ல உடல் நலனுடனும்
இருக்கணும்னு சேர்த்து
வேண்டிக்கோ கண்ணம்மா!’
என்றேன்!

நான் மனதுக்குள் நினைத்தது
அந்தக் குழந்தைக்கும்
அதன் அம்மாவுக்கும் பாட்டிக்கும்
என்ன புரிந்ததோ தெரியவில்லை
என்னவோ நான்
வாயால் சொன்னதை
அவர்கள் காதால் கேட்டு
புரிந்துகொண்டதைப் போல
என்னைப் பார்த்து
சிரித்துக்கொண்டே நகர்ந்தார்கள்!

ஆத்மார்த்தமாக மனதில்
நல்லதை நினைத்தால்
அது எதிராளியின்
காதுகளுக்கு கேட்கும்
என்ற உண்மையை
திரும்பத் திரும்ப
வாழ்க்கை
நிரூபித்துக் கொண்டே இருக்கிறது.

இன்றும் அப்படியே!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜூலை 2, 2022 | சனிக்கிழமை

#காம்கேர்_கவிதை #compcare_kavithai

(Visited 930 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon