பஞ்சு மிட்டாய் டாட் காமில்… கோகுலம் சொல்லும் செய்தி! (செப் 24, 2018)

கோகுலம் – சிறுவர் இதழ் அக்டோபர் 2018 இதழுடன் நிறுத்தி வைக்கப்படுகிறது என்ற செய்தியை கேள்விப்பட்டதில் இருந்து மனதுக்குள் இனம்புரியாத வலி. என் எழுத்துக்கும், நம்பிக்கைக்கும், திறமைக்கும் விதை போட்டதே கோகுலம் இதழ்தான்.

1982 – ஆம் ஆண்டு கோகுலத்தில் வெளியான நான் எழுதிய  ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற சிறுகதையே பிரசுரத்துக்கு ஏற்றதாக தேர்ந்தெடுக்கப்பட்ட என் முதல் கதை. அப்போது என் வயது 12.

அப்போது கோகுலத்தின் விலை ரூபாய் 2.  ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?

இந்தக் கதைதான் என் கற்பனைத்திறனுக்கும், என் கிரியேட்டிவிடிக்கும் அடித்தளம்போட்டு என் திறமை மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தியது.

தந்தையை இழந்த ஒரு சிறுவனின் அம்மா மருத்துவமனையில் நர்ஸ் வேலை பார்த்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறார். அந்தச் சிறுவனுக்கு அம்மா நர்ஸ் வேலை பார்ப்பது பிடிக்கவில்லை. தினம் தினம் அவனோடு போராட்டம்தான் அந்தத் தாய்க்கு. ஒருநாள் அவனை வலுகட்டாயமாக தன்னுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். ஒவ்வொரு நோயாளிக்கும் அவர் பணிவிடை செய்து முடித்தவுடன், அவர்கள் நன்றியுடனும், பாசத்துடனும் அம்மாவிடம் பேசுவதை பார்த்துக்கொண்டே இருக்கிறான் அந்தச் சிறுவன். பணி முடிந்தவுடன் பீச்சுக்கு அழைத்துச் சென்று எந்த வேலையும் இழிவானதல்ல, அதிலும் குறிப்பாக பிறருக்கு பணி செய்யும் நர்ஸ் வேலை எவ்வளவு உயர்வானது என்பதை அழகாக எடுத்துச் சொல்லும்போது அந்தச் சிறுவன் புரிந்துகொள்வதாக அந்தக் கதையை முடித்திருப்பேன்.

என் பெற்றோர் சிறுவயதில் கற்றுக்கொடுத்ததை அந்த வயதிலேயே என் வயதை ஒத்தவர்களுக்காக எழுதிய நான், இன்று தினந்தோறும் நான் கற்றுக்கொள்ளும் தொழில்நுட்பத்தை, வாழ்வியலை இந்த சமுதாயத்துக்கு பதிவாக்கி வருகிறேன்.

அந்தக் கதை வெளியான பிருந்தாவனக் கதையரங்கம் பகுதியையும், சிறுவர்களுக்குக் கொடுக்கப்பட்ட எழுத்தாளர் எண்ணையும் (4633), கதைக்கு நான் வைத்த தலைப்பை மாற்றாமல் அப்படியே பிரசுரம் செய்த எடிட்டர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களையும், பொருத்தமான ஓவியம் வரைந்த ஓவியர் ஆழி அவர்களையும் மறக்க முடியுமா?

என் திறமை ‘எழுத்து’ என் கடமை  ‘எழுதுவது’ என்பதை உணர்ந்து அதையே திடமாகப் பிடித்து, இன்றுவரை விடாமல் தொடர்ந்து எழுதி வருவதும், படிப்பு, தொழில், வேலை இவற்றுக்கு ஏற்ப டிஸைனிங், கிராஃபிக்ஸ், அனிமேஷன், ஆவணப்படங்கள் என எழுத்தின் அடுத்தடுத்தக் கட்ட வளர்ச்சியிலும் என் படைப்பாற்றலை வெளிப்படுத்தி தொடர்ச்சியாக பயணிக்க தன்னம்பிக்கையையும், நம்பிக்கையையும் விதைத்தது கோகுலமே. சுருங்கச் சொன்னால் பிள்ளையார் சுழி போட்டுக்கொடுத்தது கோகுலம் பத்திரிகை அங்கீகரித்த என் படைப்பே!

‘பிள்ளையார் சுழி’ போட்டுக்கொடுத்த ‘செய்யும் தொழிலே தெய்வம்’

அந்து கடிகாரத்தைப் பார்த்தான். இரவு நேரம். மணி ஏழு அடித்தது. ‘இன்று வரட்டும் அம்மா, ஒரு கை பார்த்து விடலாம்’ மனதுக்குள் கருவினான் அந்து.

எட்டு மணி ஆனது. வாசல் கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது. கையில் இருந்த புத்தகத்தை கீழே வைத்து விட்டு கதவைத் திறந்தான். அம்மா தான் வந்திருந்தாள். அந்து முகத்தை ‘உர்’ என்று வைத்துக் கொண்டு அறை மூலையில் போய் உட்கார்ந்தான்.

‘அந்து…அந்து கண்ணா…வாப்பா சாப்பிடலாம்…என்ன கோபம் என் சின்ன கண்ணனுக்கு?’

‘போம்மா…நீ இனிமேல் வேலைக்குப் போகக் கூடாது’

அந்துவிற்கு எப்படி புரிய வைப்பது என்று புரியாமல் தவித்தாள் அந்துவின் அம்மா.

‘அந்து! ஏம்பா தினம் தினம் இப்படிச் சொல்லி என்னை வருத்தப்பட வைக்கிறாய்?

‘அம்மா! தினமும் என் கூட படிக்கும் சுரேஷ் பள்ளியில் இருந்து வந்ததும், அவனோட அம்மா தயாரா பலகாரமும், காப்பியும் தருகிறாளாம். அன்பா அவனோடப் பேசுவாளாம். அவனுக்கு அப்பா கூட இருக்கார். எனக்கு அப்பாவும் இல்லை. நீ இந்த நர்ஸ் வேலைக்குப் போறது எனக்கு சுத்தமா பிடிக்கலை’ பொரிந்து தள்ளிவிட்டான் அந்து.

‘அந்து, இங்கே பார், உனக்கு அப்பா இல்லை. இந்நிலையில் நான் தானே வேலைக்குப் போய் சம்பாதிக்கணும்? இதையெல்லாம் யோசித்துப் பாருடா கண்ணா’ பிஞ்சு உள்ளத்துக்கு புரிய வைக்க முயன்றாள் அந்துவின் அம்மா.

‘சரி, நீ வேலைக்குப் போ. வேண்டாம்னு சொல்லலை. ஆனால் இந்த நர்ஸ் வேலைக்குப் போகாதே. அந்த டெட்டால் நாற்றமும், மருந்து ஸ்மெல்லும், சே…சே!’ அருவருப்புடன் பேசினான் அந்து.

அந்துவின் அம்மா ஒரு முடிவோடு, ‘சரி’ என்று சொல்லி விட்டு அந்துவுடன் உட்கார்ந்து சாப்பிட ஆயத்தமானாள். இரவு படுக்கும் முன் அந்துவிற்கு மறுநாள் விடுமுறை தானா என்று உறுதிப்படுத்திக் கொண்டாள்.

மறுநாள் அந்துவின் அம்மா, அந்துவை தன்னோடு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள். பம்பரமாகச் சுழன்றாள். அந்து பாவமாக அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

‘ஆ…அம்மா வலிக்கிறதே என்று உடம்பு முழுவதும் புண்ணாகி இருந்த ஒரு வயதான நோயாளி முனகினார். அந்துவின் அம்மா அன்பும், ஆதரவும் கலந்த இனிமையான குரலில் அவருக்கு பதிலளித்தபடி பஞ்சினால் சீழைத் துடைத்தாள். மருந்து தடவி விட்டாள். அந்த நோயாளி அவளை நன்றியோடு பார்த்தார்.  ‘நல்லா இரும்மா’ என்று வாய் விட்டு வாழ்த்தினார் அந்த வயதான நோயாளி.

மாலைப் பொழுதானது. அந்துவிற்காக சீக்கிரமாகவே மருத்துவமனையில் இருந்து புறப்பட்டாள் அந்துவின் அம்மா. அந்துவை அழைத்துக் கொண்டு கடற்கரைக்கு வந்தாள். அவனுக்குப் பிடித்த பட்டாணி, சுண்டல் வாங்கிக் கொடுத்தாள். மெதுவாக அவனுடன் பேச ஆரம்பித்தாள்.

‘அந்து! இன்னிக்கு மருத்துவமனையில் என்னைப் பார்த்தியா? நோயாளிகளுக்கு நான் உதவி செய்யும் போது அவர்கள் எனக்கு நன்றி சொல்கிறார்கள். ஒரு சிலர் வாழ்த்துகிறார்கள். நமக்கு செய்கின்ற தொழில் தானப்பா தெய்வம். அதோட இது மாதிரி மற்றவர்களுக்கு உதவி செய்கின்ற வாய்ப்பை கடவுள் நமக்குக் கொடுத்ததிற்கு நாம் தானப்பா கொடுத்து வைத்திருக்க வேண்டும். கடவுளுக்கும், அந்த நோயாளிகளுக்கும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். எத்தனை பேருக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பு. நான் என் வேலையை செய்கின்றேன். அதற்கு சம்பளமும் வாங்குகின்றேன். ஆனால், இதற்காக தினந்தோறும் நோயாளிகள் மூலமாக எனக்குக் கிடைக்கின்ற வாழ்த்துக்களும், நன்றியும் இப்பணிக்கு இலவசமாகக் கிடைக்கும் வெகுமதிகள். எல்லா பணிகளிலும் இந்த வாய்ப்பு கிடைக்காது. அதோடு மட்டுமில்லாமல் எல்லோருமே நோயாளிகளின் உடம்பைப் பார்த்து அருவருத்து ஒதுங்கினால், யார் தான் நோயாளிகளை கவனிப்பது?’ சொல்லி விட்டு சிறிது நேரம் அந்துவையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் அவன் அம்மா.

அந்துவிற்கு ஏதோ புரிவதைப் போல இருந்தது. ஆனால் முழுமையாகப் புரியவில்லை.

‘அந்து! உனக்கு இன்னும் புரிய வைக்கணும்னா நான் ஒண்ணு சொல்றேன்.கேளுப்பா. இப்ப எனக்கே உடம்புக்கு வருது. கீழே விழுந்து அடி பட்டு விட்டதா நினைச்சுக்கோ. அப்போ காயத்தில் இருந்து வரும் இரத்தத்தைப் பார்த்து டாக்டர் அருவருத்து ஒதுங்கிட்டா யார் கவனிப்பா? எனக்கு எப்படி இருக்கும்? அப்போ உன் மனசு எப்படி வருந்தும்? சொல்லி விட்டு மீண்டும் அந்துவின் முகத்தை ஆராய்ந்தாள் அவன் அம்மா.

அந்துவின் முகம் தெளிந்திருந்தது. அவன் அம்மாவுக்கு திருப்தியாக இருந்தது.

இப்போதெல்லாம் அந்து, அம்மா வரும்போது சிரித்த முகத்துடன் வரவேற்கிறான். செய்யும் தொழிலே தெய்வம் என்பதை புரிந்து கொண்டான் அந்து.

36 ஆண்டுகளுக்குப் பிறகும் கருத்து மாறா கரு

சிறுவர்களுக்கான கதையாக இருந்தாலும், நாம் அனைவருமே உணர வேண்டிய உன்னத கருத்து பொதிந்த கதை இது.

இந்தக் கதையின் சிறப்பு என்னவென்றால் இந்தக் கதை வெளியாகி 36 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் இந்தக் கதையின் கதையின் கரு சொல்லும் வாழ்க்கை தத்துவம் மாறவில்லை. அன்று சொன்னது இன்றும் உள்ளது.

இந்தக் கதைக் கருவின் தத்துவத்தை இன்றளவும் நான் என் வாழ்க்கையில் பின்பற்றி வருகிறேன்.

சிறுவர் பத்திரிகைகள் எதிர்காலம்

இன்று எல்லாமே சுருக்கென சுருங்கச் சொன்னால் மட்டுமே குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் ரீச் ஆகிறது. பக்கம் பக்கமாய் எழுதப்படும் கட்டுரைகளைவிட நருக்கென நான்கு வரியில் சொல்லும் வாட்ஸ் அப் கருத்துக்களும், ஃபேஸ்புக், டிவிட்டர் செய்திகளும் அதிகம் ரீச் ஆகின்றன.

அந்த வகையில் ‘பஞ்சு மிட்டாய்’ போன்ற வண்ணமயமான கையடக்க பத்திரிகைகள் மட்டுமே குழந்தைகளை கவருகின்றன. அதுவும் குழந்தைகளின் கிறுக்கல்களால் ஆன படங்கள், எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தின் மேன்மையை வெளிப்படுத்தும் களமாக பயன்படுத்திக் கொள்ளாமல் இயல்பான நடையில் குழந்தைகளோடு குழந்தைகளாய் உட்கார்ந்து பேசுவதைப் போல கதைகளும் செய்திகளும் அமைந்துள்ளது இவ்வகை பத்திரிகைகளின் சிறப்பு.

கோகுலம் – சிறுவர் பத்திரிகைகளுக்கு எல்லாம் முன்னோடி. இதே காலகட்டத்தில் ரத்னபாலா, அம்புலிமாமா, பாலமித்ரா போன்ற பத்திரிகைகளும் வந்துகொண்டிருந்தன.

கோகுலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துகொண்டிருந்தன. ஆனாலும் பள்ளி மாணவ மாணவிகளை அதிக அளவில் சென்றடையாமல் போனதற்கு அவை இன்றைய குழந்தைகளின் மன நிலையோடு ஒட்டிய  கான்செப்ட்டுகளை கையாளவில்லையோ என்றே எனக்கு எண்ணத் தோன்றுகிறது.

Old is Gold தான். ஆனாலும் இன்றைய டிரெண்டோடு இயல்பாய் நகர்தல் முக்கியம். இல்லையென்றால் பொருந்தாமல் ஒதுங்க வேண்டியிருக்கும் அல்லது ஒதுக்கப்பட்டுவிடுவோம் என்ற மிகப் பெரிய அறிவுறுத்தலை கோகுலம் நமக்கெல்லாம் சொல்லிச் சென்றுள்ளது.

கோகுலம் – வெறும்  கதை, கட்டுரை, படங்கள் மற்றும் போட்டிகள் என பத்திரிகைகள் வாயிலாக மட்டுமே குழந்தைகளோடு தொடர்பில் பெரும்பாலும் இருந்து வந்துள்ளது என்றே எனக்குத் தோன்றுகிறது.

நேரடியாக குழந்தைகளோடு குழந்தைகளாய் கோகுலம் அவர்கள் கைகளில் தவழும் வகையில் நிகழ்ச்சிகள், கதையரங்கம், உரையாடல்கள் நிகழ்வுகள் மற்றும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என உற்சாகமாய் சிறுவர்களுக்கு நேரடியான செயல்பாடுகளை மேற்கொண்டிருந்தால் இன்னும் பல காலம் கோகுலம், இப்போதுள்ள மற்றும் இனிவரும் சிறார் பத்திரிகைகளுக்கு என்றுமே முன்னோடியாக இருந்திருக்கும்.

கல்கி குழுமத்தில் மிகப் பெரிய பேனரில் வெளிவந்துகொண்டிருந்த கோகுலம் நிறுத்தப்படுவதால் இளைஞர்களால் நடத்திவரும் சிறுவர் பத்திரிகைகளுக்கு பின்னடைவு உண்டாகுமோ என்ற பயம் உண்டாகிறது.

ஆனால் இன்றைய இளைஞர்கள் குழந்தைகளை நன்கு புரிந்துகொள்கிறார்கள். பொதுவாக ‘அம்மா தோசை மாதிரி, அப்பா தோசைக் கல் மாதிரி’,  ‘அம்மாவின் அன்பு வெளியில் தெரியும், அப்பாவின் பாசம் வெளியே தெரியாது; என்றெல்லாம் சொல்லி சொல்லி குழந்தைகளை அப்பாக்களிடம் இருந்து தள்ளி வைத்துக்கொண்டிருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டன. அப்பா அம்மா மட்டுமில்லாமல் பள்ளி ஆசிரியர்களும் இன்றைய குழந்தைளுக்கு தங்கள் அன்பை வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளும் சூழல் வந்துள்ளது. அப்படி இருக்கும் பெற்றோர்களும், ஆசிரியர்களுமே அவர்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்கள்.

அந்த நுணுக்கத்தைப் புரிந்துகொண்ட இளைஞர்கள் தாங்கள் நடத்தும் சிறார் பத்திரிகைகளை காகிதம் மூலம் மட்டுமே குழந்தைகளை அணுகாமல் கதை சொல்லல் நிகழ்ச்சி, உரையாடல்கள், நம் இந்திய கலாச்சாரம் பாதிக்காத அளவுக்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்  என உற்சாகமாய் குழந்தைகளை அணுகுகிறார்கள்.

இதனால் கோகுலம் பத்திரிகை நிறுத்தப்படுவதால் அவர்கள் மனதளவில் தளர்ச்சியடைய வேண்டாம். அவர்கள் பத்திரிகையை கையாண்ட விதமே வேறு. இன்றைய இளைஞர்கள் பத்திரிகைகளை கையாளும் விதமே வேறு.

பத்திரிகை மூலம் காகிதங்கள் வாயிலாகவும், நேரடி நிகழ்ச்சிகள் மூலமாகவும், இணையம் வழியாகவும், வாட்ஸ் அப் கதைகள் மூலமாகவும் குழந்தைகள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கிறார்கள்.

இனி வரும் காலத்திலும், சிறார் பத்திரிகைகளுக்கு குழந்தைகளின் ஆதரவு பெருகுமே தவிர குறையவே குறையாது என்பது தொழில்நுட்பத்துறையில் சாஃப்ட்வேர் தயாரிப்பு மட்டுமில்லாமல்  அனிமேஷன், ஆவணப்படங்கள் மூலம் குழந்தைகளுக்காகவும் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிக்கொண்டிருக்கும் என் மனதில் தோன்றும் ஆழமான கருத்து.

உற்சாகமாக உத்வேகத்துடன் செயல்படுங்கள்… வெற்றி நிச்சயம்… வாழ்த்துகள்!

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
செப்டம்பர் 24, 2018

இந்தக் கட்டுரை எழுதும் போது எனக்குள் தோன்றிய நினைவலைகள்

நல்ல Co-incident.

36 வருடங்களுக்கு முன் நான் எழுதிய  ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற கதையை பிரசுரம் செய்து, அதுவே என் முதல் கதை என்ற அந்தஸ்தையும் பெற்றுத் தந்தது கோகுலம் பத்திரிகை.

அன்று நினைத்திருப்பேனா… அதே கோகுலம் பத்திரிகை நிறுத்தப்படும்போது அந்த நினைவலைகளுக்கு ஒரு கட்டுரை எழுதுவேன் என்று…

எப்படி 1982 -ல் கோகுலத்தில் வெளியான அந்தக் கதை எனக்கு முதல் கதையோ, அதுபோல 2018-ல் கோகுலம் நினைவலை குறித்து எழுதப்படும் முதல் கட்டுரையும் இதுவாகத்தான் இருக்கும்…

பஞ்சு மிட்டார் டாட் காமில்  வெளியான கட்டுரை… https://www.panchumittai.com/2018/09/24/gokulam_1/

 

(Visited 234 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon