இடது கையால் எழுதும் மனிதரின் படத்தை வரையச் சொன்ன மோடிஜியின் Ai உரை!

இடது கையால் எழுதும் மனிதரின் படத்தை வரையச் சொன்ன மோடிஜியின் Ai உரை!
எழுதியவர்: காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர், காம்கேர் சாஃப்ட்வேர்
தொடர்புக்கு: வாட்ஸ் அப் – 9444949921

இந்தக் கட்டுரையை முழுமையாகவோ அல்லது இதிலோர் பகுதியையோ தங்கள் பத்திரிகையிலோ அல்லது வேறெதேனும் ஊடகத்திலோ பயன்படுத்த நினைப்பவர்கள் என்னை தொடர்பு கொண்டு உரிமை பெற்று பயன்படுத்திக் கொள்ளவும். தேவைப்பட்டால் நானே விரிவாக பேட்டியும் அளிக்கிறேன். (தொடர்புக்கு வாட்ஸ் அப்: 9444949921)

ஆங்கிலத்தில் வாசிக்க இங்கு கிளிக் செல்லவும்!

இடது கையால் எழுதும் ஒரு நபரின் புகைப்படத்தை Ai வரைய முடியுமா? என்று பிரான்ஸ் உச்சி மாநாட்டில் [பிப் 2025] பிரதமர் மோடி அவர்கள் எழுப்பிய கேள்வி தான் லேட்டஸ்ட் டிரண்ட்ங். திரும்பத் திரும்ப கேட்ட போதும் வலது கையால் எழுதும் நபரையே வரைந்த Ai செயலிகள்!

இதற்கான அடிப்படை காரணத்தை புரிந்துகொண்டால் Ai ஏன் அப்படி செய்கிறது என்பது புரிந்துவிடும்.

அதற்கு முன், நான் செய்த ஆராய்ச்சியின் அடிப்படையில் இடது கையால் எழுதும் பெண்ணின் புகைப்படத்தை Ai மூலம் உருவாக்கிய கதையை சொல்லி விடுகிறேன்.  நான் கொடுத்த ப்ராம்ப்ட்டின் அடிப்படையில் Ai உருவாக்கிய இடது கையால் எழுதும் பெண்ணின் புகைப்படம் இதோ உங்கள் பார்வைக்கு!

இந்தப் பதிவில் இணைத்துள்ள புகைப்படங்களில் ஆணும், பெண்ணுமாய் நிஜ மனித உருவத்திலும் கார்ட்டூன் வடிவத்திலும் ஏரளமான புகைப்படங்கள் வலது கையால் எழுதும் போஸில்தான் வெளிப்பட்டுள்ளதை கவனிக்கவும். இவை அத்தனையும் Ai க்கு ப்ராம்ட்டிங் கொடுத்து நான் உருவாக்கியவை.

ஏன் Ai உருவாக்கும் படங்கள் எல்லாம் வலது கையால் எழுதுவதைப் போலவே வெளிப்பட்டுள்ளன?

காரணம் இதுதான். அதாவது Ai அப்ளிகேஷன்களுக்குள் எழுதுவது என்றாலே வலது கையால் எழுதுவது என்றுதான் பதியப்பட்டிருக்கும். இடது கை பழக்கம் உள்ளவர்களும் இருப்பார்கள். அவர்கள் இடது கையால்தான் எழுதுவார்கள் என்ற தகவலே Ai க்குள் பதிவாகி இருக்காது. அதனால்தான் எத்தனை முறை திரும்பத் திரும்ப இடது கையால் எழுதும் நபரை காட்டச் சொன்னால் அது வலது கையால் எழுதும் நபர்களையே காட்டியது.

இதற்கிடையில் நான் கொஞ்சம் பொறுமை இழந்து  இரண்டு கைகளிலும் பேனாவை வைத்திருக்கும் நபர்களை உருவாக்கச் சொல்லி ப்ராம்ப்ட்டிங் கொடுத்தேன். அதன் விளைவாக, இரண்டு கைகளிலும் கொத்து கொத்தாக பேனாக்களை வைத்திருக்கும் படத்தை Ai வரைந்து கொடுத்தது.

எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் அல்லவா? இப்படியாக வெவ்வேறு உத்திகளை கையாண்டு கிட்டத்தட்ட 100 முறைக்கும் மேலாக ப்ராம்ப்ட்டிங் உருவாக்கிக் கொடுத்து Ai டம் இடது கையால் எழுதும் நபரை வரையச் சொன்னேன். இதன் மூலம் Ai – க்குள் இடது கையாலும் மக்கள் எழுதுவார்கள் என்ற தகவல் உள்ளீடாக பதிய ஆரம்பித்தது.

கடைசியில், வெற்றி. Ai இடது கையால் எழுதும் பெண்ணின் புகைப்படத்தைக் கொடுத்தது.

தோல்வி அல்ல… Ai க்கு நாம் அளிக்கும் பயிற்சி!

100 முறை முயற்சித்தேன் என சொன்னேன் அல்லவா? அது அத்தனையும் தோல்வி என பொருளல்ல. Ai – க்கு இடது கை பழக்கம் உள்ளவர்களும் இருப்பார்கள் என்பதை புரிய வைப்பதற்கான பயிற்சி அது. இப்படித்தான் Ai க்கு நாம் பயிற்சி அளிக்கிறோம். உலகில் உள்ள மக்கள் அதனிடம் எப்படி அணுகுகிறார்களோ அதற்கேற்பவே அதனுள் தகவல்கள் செல்கின்றன. அதற்கேற்பவே பயிற்சி பெறுகின்றன. இன்னும் விரிவாக தெரிந்து கொள்ளலாமா?

Ai – ஐ பழக்குவதும், Ai-யிடம் பழகுவதும் எப்படி?

Ai –யிடம் தேவையானதை சொல்லி அல்லது கேட்டுப் பெறுவதற்கு ப்ராம்ட் (Prompt) என்று பெயர். நாம் கொடுக்கும் ப்ராம்ட்டை அது சிரமேற்கொண்டு செயல்படுத்தும். அதற்கு நாம் கேட்கும் கேள்வி முழுமையாக புரியவில்லை என்றால், அதற்குப் புரியும் அளவிற்கு பதில் கொடுக்கும். நமக்குத் தேவையான பதில் கிடைக்கும் வரை அதனிடம் மீண்டும் மீண்டும் கேட்டுப் பெறலாம்.

Ai என்பது  வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மெசஞ்சர் என அனைத்துத் தளங்களிலும் செயல்படுகிறது. நமக்குத் தேவையானதை அதனிடம் கேட்டுப் பெறுவதற்கு Ai-யிடம் பழகுவோம் என்று பொருள் கொள்வதைப் போல், Ai-யிடம் நம் இயல்பை சொல்லி புரிய வைத்து நம் இயல்பின் அடிப்படையில் ஒரு விஷயத்தைப் பெறுவதற்கு Ai – ஐ பழக்குவோம் என்று பொருள்.

அது என்ன நம் இயல்பு? அதை எப்படி Ai – க்கு புரிய வைப்பது?

மெட்டாவாகட்டும், சாட் ஜிபிடி, ஜெமினி Ai, கோ பைலட் இப்படி எந்த அப்ளிகேஷனாக இருந்தாலும் சரி,  நாம் எதை அதிகமாக அதனுள் இன்புட்டாக உள்ளீடு செய்கிறோமோ அதன் அடைப்படையில் தான் அது தன் தகவல்தளத்தை மேம்படுத்திக் கொண்டு செயல்பட ஆரம்பிக்கும். தினந்தோறும் நாம் அதனுடன் பழக ஆரம்பித்து விட்டால், நம் இயல்பை அது புரிந்துகொண்டு நமக்கு ஏற்றவாறு அவுட்புட்டை கொடுக்க ஆரம்பித்துவிடும். அதனால்தான் மெட்டா / சாட் ஜிபிடி / ஜெமினி ஏஐ / கோ பைலட் போன்றவை ஒவ்வொரு முறையும் ஒரு பதிலை கொடுத்தவுடன் பாசிட்டிவ் தம்ஸ் அப், நெகட்டிவ் தம்ஸ் அப் என இரண்டு ஐகான்களை காட்டும்.

நாம் பாசிட்டிவ் தம்ஸ் அப் ஐகானை கிளிக் செய்தால் நாம் உள்ளீடு செய்த தகவல்களை அது தன் தகவல்தள சுய ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொள்ளும். நெகட்டிவ் தம்ஸ் அப்பை கிளிக் செய்தால் அது தன் தகவல் தளத்தை பிழைகள் நீக்கி இன்னும் சரியானபடி மேம்படுத்திக் கொள்ளும்.

Ai ஏன் ஒரே மாதிரியான படங்களை கொடுக்கிறது?

சில மாதங்களுக்கு முன்னர் காரைக்குடி பல்கலைக்கழகத்தில் Ai குறித்த ஒரு கருத்தரங்கில் பேசுவதற்காக சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன். அப்போது, மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியை ஒருவர் கேட்ட கேள்வியையும் அதற்கு நான் கொடுத்த விளக்கத்தையும் இங்கு பகிர்கிறேன்.

பேராசிரியையின் கேள்வி: ‘Ai அப்ளிகேஷன்களில் நாம் நம் நாட்டு ஓவியங்களை வரைந்து தருவதற்கு எப்படித்தான் விரிவாக ஸ்கிரிப்ட் (Prompting) எழுதி கேட்டாலும் அது சரியாக கொடுப்பதில்லை. உதாரணத்துக்கு, சைவம் சம்மந்தப்பட்ட மனிதர்களுக்கு விபூதி பட்டைப் போட்டும், வைஷ்ணவம் சம்மந்தப்பட்ட மனிதர்களுக்கு நாமமும் போட்டுத் தானே ஓவியங்கள் வெளிப்பட வேண்டும். ஆனால் Ai அப்ளிகேஷன்கள் நெற்றியில் எதுவுமே போடாமல் வரைந்து கொடுக்கிறது அல்லது எல்லாவற்றுக்கும் நாமம் போட்டோ அல்லது பட்டைப் போட்டோ ஓவியங்களை உருவாக்கிக் கொடுக்கிறது. அது ஏன்?’

என் பதில்:  Ai அப்ளிகேஷன்களுக்குள் என்ன மாதிரியான தகவல்கள் உள்ளீடு செய்யப்பட்டிருக்கிறதோ அதன்படிதான் அவை செயல்பட்டு புரிந்துகொண்டு நமக்கான தீர்வை எழுத்தாகவோ, படமாகவோ, ஒலி, ஒளியாகவோ கொடுக்கும். மேலும் அதற்குள் முன்மாதிரிகளும் உள்ளீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். நாம் சொல்லிக் கொடுப்பதை ஏற்றுக்கொண்டும், தன்னுள் இருக்கும் முன் மாதிரிகளுடன் ஒப்பிட்டும், ஏற்கெனவே செய்திருக்கும் பணியின் அவுட்புட்டின் மூலம் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையிலும்தான் Ai அப்ளிகேஷன்கள் நமக்கான தீர்வை கொடுக்கும்.

நாம் எதிர்பார்த்த விஷயத்தை Ai கொடுக்க வேண்டும் என்றால் அதனிடம் நமக்கு கேள்வி கேட்கத் தெரிய வேண்டும். அதற்கு Prompting என்று பெயர். அடுத்து அதனுள் நாம் கேட்கும் விஷயத்துக்கான இன்புட்டுகள் ஏற்கெனவே உள்ளீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதாவது ஒரு டாக்டரிடம் மருத்துவம் சம்மந்தமான விஷயங்களை கேட்கலாம், ஏனெனில் அவர் மூளைக்குள் மருத்துவம் குறித்தத் தகவல்களும் அனுபவங்களுமே பெருமளவில் பதிவாகி இருக்கும். அவரிடம் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை குறித்து கேள்விகள் கேட்டால் அவரால் துல்லியமாக பதில் அளிக்க முடியாது. காரணம் அவர் மூளைக்குள் அந்தத் துறை சம்மந்தப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை அல்லவா?

ஒருவர் ஒருவிஷயத்தைப் பற்றி ஆழமாக பேசுகிறார் அல்லது எழுதுகிறார்  என்றால் அவர் மூளைக்குள் அந்த விஷயம் குறித்த ஆழ்ந்த அறிவு தகவல்களாக சேகரிக்கப்பட்டிருக்க வேண்டும், கற்றறிந்திருக்க வேண்டும், அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இது தான் லாஜிக்.

இதே லாஜிக்தான் Ai அப்ளிகேஷன்களிலும். Ai-க்கு தகவல்களை உள்ளீடு செய்து நாம் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். அப்போதுதான் அதனால் அலசி ஆராய்ந்து நாம் கேட்பதற்கு ஏற்ப தானாக ஒரு பதிலை உருவாக்கிக் கொடுக்க முடியும்.

அந்த அப்ளிகேஷன்களில் எந்த அளவுக்கு தகவல்கள் உள்ளீடு செய்யப்படுகிறதோ அந்த அளவுக்கு அது திறமையான பதிலை கொடுக்கும். மேலும் அந்த அப்ளிகேஷன்களை நிறைய பேர் பயன்படுத்தப் பயன்படுத்தத்தான் அவை அனுபவம் பெறும். அப்போதுதான் அவை துல்லியமான பதிலைக் கொடுக்கப் பயிற்சி பெறும். காரணம் Ai தனக்குள் இருக்கும் தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு செயல்படுவதில்லை. ஏற்கெனவே அதனிடம் கேள்விகள் கேட்டவர்களுக்கு தான் அளித்த பதிலை முன் உதாரணமாக வைத்துக் கொண்டும் செயல்படும். உதாரணத்துக்கு ஒருவர் கிருஷ்ணர் படத்தை வரையச் சொல்லி கேட்டால், ஏற்கெனவே இதுபோல் மற்றொருவருக்கு தான் உருவாக்கிக் கொடுத்த கிருஷ்ணர் படத்தை ஒப்பிட்டு நீல வண்ணம், புல்லாங்குழல், மயிலிறகு போன்றவற்றை மாதிரியாகக் கொண்டு அதன்படி புதிதாக கிருஷ்ணர் படத்தை உருவாக்கிக் கொடுக்கும். அதனால்தான் சொல்கிறேன், Ai –ஐ நிறைய பேர் பயன்படுத்த ஆரம்பிக்கும் போதுதான் அவை அனுபவம் பெறும்.

மேலும் நம் நாட்டில் Ai அப்ளிகேஷன்களுக்குள் நம் நாட்டு இலக்கியம், கலை, மொழி குறித்த தகவல்களை உள்ளீடு செய்யப்பட வேண்டும். அவற்றை நம் மக்கள் பயன்படுத்தப் பயன்படுத்தத்தான் எப்படியெல்லாம் கேள்விகள் வரும், எப்படி எல்லாம் அதற்கு பதில் கொடுக்க வேண்டும் என அவை பயிற்சி பெறும். அதற்குள் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் உள்ளீடுகள், நாம் கொடுக்கும் பயிற்சி முறைகள் இவற்றுடன் தனக்குக் கிடைத்த முந்தைய அனுபவங்களையும் சேர்த்து தானாகவும் கற்று சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்ட Ai அப்ளிகேஷன்களை உருவாக்கி விட்டு அப்படியே போட்டு வைத்திருந்தாலும் அவை பயனற்று போகும். திறம்பட செயலாற்றாது.

Ai அப்ளிகேஷன்களுக்கு நிறைய கற்றுக்கொடுக்க வேண்டும், அவற்றை நிறைய பயன்படுத்த வேண்டும், நிறைய சிந்திக்க வைக்க வேண்டும். அப்போதுதான் அவை ஸ்மார்ட்டாக வேலை செய்யும் திறன் பெறும். நம் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் Ai அப்ளிகேஷன்களை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்த ஆரம்பிக்கும்போதுதான் அதனுள் நம் நாட்டு விஷயங்கள் தகவல்களாக உள் செல்லும். நன்றாக புரிந்து கொள்ளுங்கள், நாமே நமக்காக Ai சாஃப்ட்வேர்களை உருவாக்க வேண்டும் என சொல்லவில்லை (உருவாக்கினாலும் மகிழ்ச்சியே. நாங்கள் அதைத்தான் செய்கிறோம்),  அமெரிக்க நாட்டு Ai சாஃப்ட்வேர்களாகட்டும், சீனாவின் Ai சாஃப்ட்வேர்களாகட்டும் அதைப் பயன்படுத்தி நம் நாட்டு விஷயங்களுக்கான Ai அப்ளிகேஷன்கள் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் அந்த சாஃப்ட்வேர்களில் இருந்து நமக்கான பதில் சிறப்பாக கிடைக்கும் என சொல்கிறேன்.

Ai என்பது பொதுவானது. அதை யார் அதிகம் பயன்படுத்துகிறார்களோ அவர்களிடம் அது ஒட்டுக் கொள்ளும். அவ்வளவுதான்.  அதற்கு நாடு, இன, ஜாதி, மத பேதங்கள் எல்லாம் தெரியாது. நாமாக வேண்டும் என்றே தவறான தகவல்களை கொடுத்துப் பழக்கப்படுத்தினால் மட்டுமே அவற்றை கற்றுக்கொள்ளும்.

இந்த பிரபஞ்சத்தில் வியாபித்திருக்கும் மனிதர்கள், பழக்க வழக்கங்கள், குணாதிசயங்கள், கலை, இலக்கியம், மொழி என ஒவ்வொன்றையும் பற்றியும் தகவல்கள் Ai க்குள் புகுத்தப்பட்டு அதை பழக்கப்படுத்தினால்தான் Ai சரியான பதிலைக் கொடுக்கும். மனிதர்கள் மட்டுமல்ல மற்ற உயிரினங்கள் குறித்தும் அதனிடம் இருந்து சரியான பதில் வர வேண்டும் என்றால் அவை குறித்த தகவல்களும் அதனுள் புகுத்தப்பட்டிருக்க வேண்டும். நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள சிறு துகள்கள் முதல் அத்தனையும் பிரதி எடுப்பதைப் போல எடுக்கப்பட்டு தகவல்களாக Ai அப்ளிகேஷன்களுக்குள் புகுத்தப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் அது நமக்கு நிகராக சிந்தித்து செயல்படும். அதுவரை அதனிடம் இருந்து கிடைக்கும் பதிலும் கொஞ்சம் முன்னே பின்னே தான் இருக்கும். நாம்தான் எடிட் செய்து பயன்படுத்த வேண்டி இருக்கும்.

வீட்டில் பெற்றோர் எந்த மொழியில் பேசுகிறார்களோ அந்த மொழியில் அந்த வீட்டில் பிறக்கும் குழந்தைகள் எப்படி பேசக் கற்றுக் கொள்கிறது?

அதே நுட்பம் தான் Ai எனும் செயற்கை நுண்ணறிவிலும்!

ஆங்கிலத்தில் வாசிக்க இங்கு கிளிக் செல்லவும்!
எழுதியவர்: காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர், காம்கேர் சாஃப்ட்வேர்

(Visited 1,118 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon