ஆபரேஷன் சிந்தூர்!

சென்னையில் நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்தூர்’ – பாரத இராணுவ வீரர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் என் (காம்கேர் கே. புவனேஸ்வரி) உரையின் சாராம்சம்:

அனைவருக்கும் வணக்கம். நான் காம்கேர் கே. புவனேஸ்வரி, 1992-ம் ஆண்டில் காம்கேர் சாஃப்ட்வேர் என்ற ஐடி நிறுவனத்தைத் தொடங்கி, 34 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகிறேன்.

நம் இந்திய இராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ யுத்த நடவடிக்கையை எடுத்து அதன்  மூலமாக நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய நமது பாரத நாட்டின் இராணுவ படைவீரர்களைப் பாராட்டும் வகையில், சென்னையில் உள்ள படைப்பாளர்கள் ஒருங்கிணைந்து சென்னையில் நடத்தும் இந்த விழாவில் (ஜூன் 15, 2025 | ஞாயிறு) என் கருத்தை பதிவு செய்வதில் மிக்க மகிழ்ச்சி.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதி ‘மினி சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படுகிறது.  கடந்த ஆண்டு சாதனை அளவாக 23 மில்லியன் சுற்றுலா பயணிகள் இந்த பள்ளத்தாக்கு பகுதிக்கு வருகை தந்துள்ள நிலையில், பொருளாதாரத்தின் முக்கிய பகுதியான சுற்றுலாவில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் திட்டமிடப்பட்டது.

ஏப்ரல் 22, 2025 செவ்வாய் கிழமை மகிழ்ச்சியாக காஷ்மீரின் அழகை ரசித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள்  மீது, திட்டமிட்டபடி பாகிஸ்தானியரும், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான  லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த பயங்கரவாதிகளும் தாக்குதலை நடத்தினார்கள்.

குறிப்பாக ஆண்களை பெயர் மற்றும் மதம் என்ன என்று கேட்டு சுட்டு வீழ்த்தினார்கள். அவர்களின் மனைவிகள் தங்களையும் கொன்றுவிடுமாறு கேட்டுக் கதறி அழுதபோது, அவர்கள் ‘நாங்கள் உங்களை கொல்ல மாட்டோம். இங்கு நடந்ததை உங்கள் பிரதமர் மோடியிடம் சென்று சொல்லுங்கள்’ என்று எகத்தாளமாக சொன்னார்கள்.  இந்த கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களின் மீது இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. அதில் வெற்றியும் கண்டது.

ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) – குறித்து இரண்டு விஷயங்களை குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன்.

முதலில், நான் பெருமைப்படும் விஷயத்தை சொல்லி விடுகிறேன். ‘ஆபரேஷன் சிந்தூர்’ – பாகிஸ்தான் மீதான நம் பாரத நாட்டின் தாக்குதல் நடவடிக்கையில்  ஒரு பாரதப் பெண்ணாக நான் பெருமைப்படுவதற்கு மிக முக்கியக் காரணம் ஒன்றே ஒன்றுதான். ஆம். ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை ராணுவத்தின் கர்னல் சோஃபியா குரேஷி, விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் என இரண்டு பெண் அதிகாரிகள் வழிநடத்தினார்கள், அதில் வெற்றியும் கண்டார்கள் என்பதே நான் பெருமைப்படுவதற்கான காரணம்.

இரண்டாவதாக நான் வருத்தப்படுவதற்கான காரணத்தை சொல்கிறேன்.

‘ஆபரேஷன் சிந்தூர்’  என்ற பெயர் மனதுக்குள் வந்ததுமே, நம் இந்திய அரசாங்கமும், இராணுவமும் இந்தத் தாக்குதல் நடவடிக்கையை எடுக்கக் காரணமாக இருந்த பாகிஸ்தானியரின் வன்மம் நினைவுக்கு வருவதே என் வருத்தத்துக்கும் பெருங்கோபத்துக்கும் காரணம்.

பெண்களின் கண் முன்னே அவர்களின் குடும்பத்தை சிதைத்து தங்கள் வன்மத்தைத் தீர்த்துக் கொண்ட பாகிஸ்தானிய பயங்கரவாதிகளின் கொடூர செயலை என்னவென்பது?

சாதாரணமாகவே இரண்டு பேர் வாய் வார்த்தையாக சண்டை போட்டால் கூட அவர்கள் ஒருவரை ஒருவர் இழிவு படுத்த கையில் எடுக்கும் ஆயுதம் எதிராளியின் வீட்டுப் பெண்களைத்தான். தாயை, மனைவியை, சகோதரிகளை, பெண் நண்பர்களை தகாத வார்த்தைகளால் இழிவுபடுத்தி தங்கள் சண்டைக்கு சம்மந்தமே இல்லாத அவர்கள் குடும்பத்துப் பெண்களின் மானத்தை வீதியில் இழுத்துவிடுவது பெரும்பாலான மனமுதிர்ச்சி இல்லாத ஆண்களின் குணம் (விதிவிலக்குகள் உண்டு).

இதே யுக்தியைத்தான் பாகிஸ்தானும் கையில் எடுத்துள்ளது. நம் நாட்டுப் பெண்களை கொடூரமாக சிதைக்க அவர்களின் கணவர்களை கொன்று வன்மத்தைக் கக்கி உள்ளனர்.

தனி நபர்களின் சண்டைக்கும், நாடுகளுக்கு இடையேயான சண்டைக்கும் பகடைக்காயாக பெண்களை பயன்படுத்துவது வேதனையின் உச்சம். ஒரு பெண்ணாக இதற்கு நான் வேதனைப்படுகிறேன். கண்டிக்கிறேன்.

பெண்களை துடிக்க வைத்த பயங்கரவாதிகளுக்கு நம் பாரத நாட்டு ராணுவத்தின் இரண்டு பெண் அதிகாரிகளை வைத்தே பாடம் கற்பித்த இந்திய அரசுக்கும், இராணுவ வீரர்களுக்கும், தலைமையேற்று வெற்றிநடை போட்ட இரண்டு பெண் இராணுவ சிங்கங்களுக்கும், நம் பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திரமோடி அவர்களுக்கும் நன்றி என சொல்வது சம்பிரதாய வார்த்தையாக மட்டுமே இருக்கும்.

நம் நாட்டை இன்னும் நன்றாக நேசிப்பதும், இதன் மேன்மைகளை உலக நாடுகளுக்கு வார்த்தைகளால் எடுத்துச் சொல்லாமல் நம் செயல்பாடுகளாலும், நம் பேரறிவாற்றலினால், கடுமையான உழைப்பினால் மென்மேலும் நாமும் வளர்ந்து, நாட்டையும் மேம்படுத்தி வளப்படுத்திப் பெருமை சேர்ப்பதுதான் ‘நன்றி’ என்ற ஒற்றை வார்த்தையை விட பெரும் சிறப்பாக அமையும்.

நம் பாரத நாட்டை நேசிப்போம், இந்தியராக நாம் பெருமை கொள்வோம்!

ஜெய்ஹிந்த்!

காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜூன் 15, 2025 | ஞாயிறு

(Visited 1,993 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon