உலகிலேயே முதல் முதலில் Ai-ல் தயாரிக்கப்பட்ட சுயசரிதை ‘விகே (எ) விக்டரி கிங்’ குறித்து ஓவியர் ஜீவா அவர்களின் கருத்து!
இன்று நம்மிடையே பரபரப்பான பேசுபொருளாக இருப்பது Ai என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவுதான். மென்பொருள் நிபுணர்கள், பயனாளிகள், நூல் வெளியீட்டாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், திரைப்படத்துறையினர், ஓவியர்கள் மற்றும் பல பணிகளில் இருப்பவர்கள் அத்தனை பேரின் வாழ்க்கையிலும் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துகொண்டிருக்கிறது செயற்கை நுண்ணறிவு.
இதனுடன் போட்டி போடாமல் அதனைக் கற்று அதை வெல்வதுதான் விவேகம். காம்கேர் கே. புவனேஸ்வரி அவர்கள் கடந்த பல வருடங்களாகவே இந்தத் துறையில் ஆர்வம் கொண்டு பல பரிசோதனைகளை மேற்கொண்டு வந்திருப்பதை பார்த்திருக்கிறேன்.
இப்போது அவருடைய தந்தையின் திருமணம் குறித்த நிகழ்வை ஒரு வீடியோ ஆவணமாக முற்றிலும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கியதை காணும் வாய்ப்பு கிடைத்தது. அது அவரது தந்தையின் ‘விகே (எ) விக்டரி கிங்’ என்ற சுயசரிதையின் ஒரு பகுதி.
அவர்கள் ஒரே தொலைபேசித்துறையில் வெவ்வேறு ஊர்களில் பணிபுரிந்து திருமணம் புரிந்ததை அவர்கள் குடும்பம், சூழல், உற்றார் உறவினர் ஒவ்வொருவரையும் நமக்கு அசையும் சித்திரங்களாக அறிமுகப்படுத்தி விவரித்துக்கொண்டே போகிறார்.
இதற்கு முன் உண்மையான மனிதர்களை இப்படி திருமண வீடியோ கதையாக நான் பார்த்தது இல்லை. இது ஒரு புதிய அனுபவம். அறுபதுகளின் உடையலங்காரம், தோற்றம், தோல் நிற வேறுபாடுகள் அனைத்தையும் பளிச் என்ற ‘ஒளிப்பதிவில்’ நமக்கு தந்திருக்கிறார்.பெரும்பாலும் உண்மை மனிதர்களின் முழு ஜாடையுடன் செய்திருக்கிறார் என்று பார்க்கும்போது புரிந்தது.
இதற்கு பின்னால் உள்ள பொருட்செலவும் உழைப்பும் நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும். செயற்கை நுண்ணறிவில் இன்னும் ஏற்படப்போகும் மாற்றங்கள் இனி வரப்போகும் படைப்புகளுக்கு மேலும் மெருகேற்றும் என்று எதிரபார்க்கிறேன்.
– ஓவியர் ஜீவா








