நான் இப்படித்தான்!

 

நான் இப்படித்தான்!

இப்போதெல்லாம் ஒருவருடன் ஒருவர் முரண்பட அற்ப காரணங்களே போதுமானதாக உள்ளது.

பொதுவாக நான் குடும்பத்துடன் சொந்த காரணங்களுக்காக வெளியூர் செல்லும்போது அலுவலக ரீதியாக யாரையும் சந்திக்க நேரம் இருக்காது. காரணம், கூட்டை விட்டுக் கிளம்பும் நேரத்தில் இருந்து திரும்ப கூடு வந்து சேரும் நேரம் வரை துல்லியமாக ப்ளான் போட்டுத்தான் கிளம்புவோம். எனவே இடையில் யாரையேனும் சந்திக்க வேண்டும் என்றால் அதையும் ப்ளானில் சேர்த்தால் மட்டுமே முடியும்.

அத்துடன் வீட்டில் பெரியோர்களின் உடல் நலம், மன நலம் எல்லாவற்றையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும், கூடவே மனதுக்குள் சுமந்து வரும் எங்கள் நிறுவனத்தை மானசீகமாகவும், போனிலும், வாட்ஸ் அப்பிலும், சில நேரங்களில் வீடியோ காலிலும் பேசி கவனித்துக்கொள்ள வேண்டும்.

இப்படி எல்லாவற்றையும் பேலன்ஸ் செய்ய வேண்டி இருப்பதால் எல்லோரையும் சந்திப்பது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று.

அதனால்தான் நான் பொதுவெளியில் புகைப்படங்கள், வீடியோக்கள், தகவல்கள் என்று அவ்வப்பொழுது சுடச் சுட எல்லாம் பகிர மாட்டேன்.

நிகழ்ச்சி முடிந்து சிலபல தினங்கள் கழித்தே பகிர்வேன், அதுவும் பயனுள்ள தகவல்களாக இருந்தால் மட்டுமே. அதனால் புகைப்படத்தை வைத்து நான் எந்த ஊரில் இருக்கிறேன் என்றெல்லாம் யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

இப்படி நான் ஸ்ட்ரிக்ட்டாக இல்லை என்றால், அந்த ஊருக்கு வந்துவிட்டு என்னை சந்திக்கவில்லை, அவரை மட்டும் சந்தித்துள்ளீர்கள் என்ற பஞ்சாயத்தெல்லாம் ஓடும். என்னிடம் நேரடியாக கேட்க மாட்டார்கள். அவர்களுக்குள் பேசி என் பதிவுகளுக்கு லைக் செய்வதை நிறுத்துவதன் மூலம் தங்கள் அதிருப்த்தியைக் காண்பிப்பார்கள். அப்படியே விலகியும் விடுவார்கள்.

எனக்கு எல்லோருமே முக்கியமான நபர்கள்தான். பணம், அந்தஸ்த்து, புகழ் இவற்றின் அடிப்படையில் யாரையும் மதிப்பிடுவதில்லை. ஆதாயம் தேடும் நோக்கத்தில் பழகுவதும் இல்லை. யாரிடமும் எதையும் கேட்பதும் இல்லை, யாரேனும் என்னிடம் எதையேனும் கேட்டால், அவர்களை காக்க வைக்காமல், முடியாததை நேரடியாக முடியாது என சொல்லி விடுவது என் வழக்கம். செய்ய முடிந்ததை மனம் மாறுவதற்குள் செய்து விடுவதும் உண்டு.

யாரிடமும் எதையும் கேட்பதில்லை என்றால் எல்லா வசதியும் உங்களுக்கு இருக்கும்போது உங்களுக்குக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என பின்னூட்டமிட வேண்டாம் அல்லது மனதுக்குள் நினைக்க வேண்டாம். வசதிகள் வேறு, சமுதாய அந்தஸ்த்துக்குள் நிலைத்திருக்க பிறரிடம் எதிர்பார்க்க நேருகின்ற சின்ன சின்ன உதவிகளைக் கூட கேட்காமல் ஒதுங்கி என்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்துகொண்டு முன்னேறி வருகிறேன்.

சமுதாயத்தின் அத்தனை நெருக்கடிகளையும் மீறித்தான் எனக்குக் கிடைக்கும் நல்லவை அல்லது நடைபெறும் நல்ல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

பொதுவெளியில் இன்ன ஊருக்கு வருகிறேன். நண்பர்கள் சந்திக்கலாம் என்றெல்லாம் நான் அறிவிப்பை கொடுத்துவிட்டுக் கிளம்புவதில்லை. அது என் நிர்வாக சூழலுக்கும், தனிப்பட்ட வாழ்க்கை முறைக்கும் ஒத்து வராத ஒன்று.

எனவே, நான் ஏதேனும் ஊரில் யாரையேனும் சந்தித்தேன் என பதிவிட்டு அது குறித்த பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்திருந்தால், அது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட திட்டமாக இருக்கும்.

புரிந்துணர்வுக்கு நன்றி.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
comPcare Software
மே 31, 2023 | புதன்

(Visited 238 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon