#மலேசியா: மாநாட்டின் நிறைவு நாள்!

மாநாட்டின் நிறைவு நாள்!

11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2023 ஜூலை 21 முதல் 23 வரை மிக சிறப்பாக கோலாகலமாக மலேசியாவில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் அமர்க்களமாக நடைபெற்றது.

இந்த மாநாட்டிற்கு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (International Association of Tamil Research) செயலாளர் நந்தன் மாசிலாமணி அவர்களின் பங்களிப்பு அளப்பறியது. இவர்தான் உலகத் தமிழ் ஆராய்ச்சி மையத்தின் இந்தியக் கிளையின் செயலாளர். இவரது உழைப்பும், அர்ப்பணிப்பும், ஆர்வமும்தான் இந்த மாநாட்டை மிக நல்ல முறையில் கொண்டு சென்றது.

இந்த மாநாட்டுக்காக குழு அமைத்து விவாதங்கள் நடைபெற ஆரம்பித்த நாளில் இருந்தே (2021) இந்தக் குழுவுடன் இணைந்து செயல்படும்  வாய்ப்பு கிடைத்தது.

இந்தக் குழுவுக்குத் தேவையான வீடியோக்கள் தயார் செய்து தருவதிலும், அவர்களின் பணிகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கித் தரும் ப்ராஜெக்ட்டிலும் இணைந்து செயலாற்றி வந்திருக்கிறேன்.

கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக என்னுடன் நல்ல நட்புடனும் அதே சமயம் வியாபார ரீதியாக எங்கள் காம்கேருடன் நல்லப் புரிந்துணர்வுடனும் இணைந்து செயல்படும் திரு நந்தன் மாசிலாமணி அவர்கள் 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இந்தியப் பிரிவின் செயலாளர் என்பதால் இது சாத்தியமாயிற்று.

இந்த மாநாட்டில் கலை, இலக்கியம், அறிவியல், வரலாறு, தொழில்நுட்பம் என பலதரப்பட்டப் பிரிவுகளில் சிறப்பு விருந்தினர்கள் உலகமெங்கிலும் பல்வேறு நாடுகளில் இருந்து வந்து கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

தவிர பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்து பேராசிரியர்கள் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரைகள் (Paper Presentation) வாசித்தார்கள்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை மலேசியப் பிரதமர் மாண்புமிகு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மலேசிய நாட்டுத் துணைப் பிரதமர், மலாயாப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், ஓம்ஸ் அறவாரியத் தலைவர் தியாகராஜன் மற்றும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இந்தியக் கிளையின் தலைவர், செயலாளர் மற்றும் சில அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

நான் உட்பட பல்துறை சார்ந்த வல்லுநர்கள் உரை நிகழ்த்துவதற்கு தனி ஹாலும், பேராசிரியர்கள் ஆய்வுக் கட்டுரைகள் வாசிப்பதற்கு வகுப்பறைகளும், அரசியல் தலைவர்கள் பேசுவதற்கு தனி இடமும் என பார்வையாளர்களுக்குக் குழப்பம் ஏற்படா வண்ணம் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

காலை முதல் இரவு வரை உணவு, காபி, தேநீர், சிற்றுண்டி என ஏதோ நம் குடும்பத்து திருமண வைபவத்தில் கலந்துகொண்டதைப் போன்ற மன நிறைவு. தங்குவதற்கு ஐந்து நட்சத்திர ஓட்டல், அங்கிருந்து மாநாடு நடைபெற்ற மலாயாப் பல்கலைக்கழகத்துக்குச் சென்றுவர சிறப்பு பேருந்துகள் என தடபுடல் ஏற்பாடுகள் மனதை உற்சாகப்படுத்தின.

இத்தனைக்குமான பொருட் செலவை உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இந்தியக் கிளை ஏற்றுக்கொண்டது.

மலேசிய நாட்டில் நம் இந்தியர்களுக்கு மிக சிறப்பான முறையில் வரவேற்பும், உபசரிப்பும், கெளரவமும் வழங்கப்பட்டது.

நான் இயங்கிவரும் தொழில்நுட்ப வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் எந்த ஒரு செயலுக்கும் Front End, Back End என இரண்டு பிரிவுகள் உண்டு. Front End என்பது இயங்குதளம். Back End என்பது இயங்குதளத்தை தாங்கிப் பிடிக்கும் உழைப்பும், அர்ப்பணிப்பும்.

உதாரணத்துக்கு, நாம் பயன்படுத்தும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்றவை Front End என்றால், அவை முறையாக இயங்குவதற்கு பின்னால் இருந்து இயங்கும் கம்ப்யூட்டர் தொழில்நுட்ப லாஜிக்குகளும் புரோகிராம்களும் வெப்சர்வர்களும்தான் Back End.

மற்றுமோர் எளிய உதாரணம். நம் வீட்டில் நடைபெறும் ஒரு திருமண வைபவம் Front End என்றால் அந்தத் திருமணம் நடைபெற உழைத்த பெற்றோரின் உழைப்பும், உற்றார் உறவினர்கள் நண்பர்களின் ஒத்துழைப்பும் Back End.

Back End சிறப்பாக செயல்படவில்லை என்றால் Front End- அலங்கோலம்தான்.

இங்கே, கோலாகலமாக நடைபெற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு Front End என்றால், இந்த மாநாடு சிறப்பாக நடைபெற காரணகர்த்தாவான உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இந்தியக் கிளையின் செயலாளர் திருமிகு நந்தன் மாசிலாமணி அவர்களும், அவரது குழுவினரும் Back End.

அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software
ஜூலை  2023  

(Visited 5,666 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon