நூலகத்திலிருந்து புத்தகத்தை எடுத்து வாசித்த அன்பரது நூல் அனுபவம்! ‘இப்படிக்கு அன்புடன் மனசு!’ – விவேகானந்தரின் வாழ்க்கை சம்பவங்களுடன் என் வாழ்வில் எதேச்சையாக நடந்த சில நிகழ்வுகளை குறிப்பிட்டு எழுதிய நூல். இதனை உளவியல் நூலாகவே உணர்ந்து குறிபிட்ட அன்பருக்கு நன்றி!
நேற்று இமெயிலிலும், வாட்ஸ் அப்பிலும் வந்திருந்த கடிதத்தை அனுமதியுடன் பகிர்கிறேன்.
—-
வணக்கம் மேடம்,
நீண்ட வருடங்களுக்கு பிறகு தங்களை கடிதம் வாயிலாக தொடர்பு கொள்வதில் பெருமை அடைகிறேன் . இப்படிக்கு அன்புடன் மனசு என்கிற நூல் கோவை மாவட்ட மைய நூலகத்தில் எடுத்து வந்து படிக்க நேர்ந்தது. அதிலும் உங்கள் புத்தகம் படிப்பது என்றால் வைகுண்ட ஏகாதசி அன்று திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாளை பிரம்ம முகூர்த்தத்தில் தரிசனம் கண்டால் மனம் எப்படி சந்தோஷ படுமோ அந்த மாதிரி சந்தோஷம் தங்களின் புத்தகத்தில் கிடைத்தது.
மேற்படி புத்தகத்தில் சில குறிப்புகள் அடிக்கோடிட்டு என்னுடைய டயரியில் எழுதினால் அதுவே இரண்டு பக்கம் வந்து விட்டது. உங்கள் வழியாக பெண்களின் மனசு இப்படி இந்த அலை வரிசையில் தான் செல்கிறது என்பதை என்னுடைய 62 வயதில் உங்கள் புத்தக மூலம் தெரிந்து கொண்டேன். அதற்கு ஒரு சபாஷ் உங்களுக்கு போட்டு விடலாம் .
ஒரு பெண்ணைத் தலைமையாகக் கொண்டு பணி புரிய பெண்களே விரும்புவதில்லை . வேறு வழியில்லாமல் வேலையில் சேர்ந்து விடுகிறார்கள் . ஆனால் அவர்களின் ego அவர்களை பெண் தலைமையின் கீழ் பொருந்தி வேலை செய்ய விடுவதில்லை . இவளும் நம்மைப் போல பெண் தானே . இவள் என்ன சொல்வது ? நாம் என்ன கேட்பது ? என்று எத்தனையோ உணர்வு கோளாறுகள் , உளவியல் பிரச்சனைகள் மாற்றுக் கருத்துக்கள் என கூறிய விதம் 100 % சரியே !
உலகம் முழுவதும் பெண்களை – அவர்களை ஆள்வதற்கு இப்போதும் சில ஆண்கள் தேவைப் படுகிறார்கள் . பெண்களை நடத்திச் செல்ல ஒரு பெண் முன் வந்தால் உடனடியாக அவரை எல்லோரும் குறை கூறுவார்கள் . முற்றிலும் தங்கள் கூற்று சரியே !
எந்த ஒரு பிரச்சனைக்கும் ஏதேனும் ஒரு தீர்வு இருக்கும். – நல்லதொரு கொட்டேஷன் வார்த்தை
நமக்கே நமக்காக அரை மணி நேரம் ஒதுக்க முடியவில்லை அல்லது தெரிய வில்லை என்றால் தவறு யார் மீது ? யோசிக்க வேண்டிய விஷயம் – இதுக்கு ஒரு தனி சபாஷ்.
கூகுள் தோழன் அப்போது இல்லை . உங்களின் 10 ஆம் வகுப்பு மார்க் அனுபவம் மிக பெரிய சவாலான ஒன்று
பொதுவாகவே என்னை பர்சனலாகக் கவருவதற்காக செய்யப்படுகின்ற இது போன்ற செயல்களை நான் ஊக்க படுத்துவதில்லை . உண்மையில் இது ஒரு நல்ல உளவியல் மருந்து . சூப்பர்
எதிர்பார்ப்புகள் என்றுமே ஏமாற்றம் தான் கொடுக்கும் . தாமரை இலை தண்ணீராய் வாழும் கலை என் கை வசமானது .
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் . இந்த புத்தகம் நல்லதொரு பெண் மனசின் ஆழமான உளவியல் நூல் என்று கூறி விடலாம் .
இன்னும் தங்களின் நூல்கள் மேலும் மேலும் வெளிவந்து வாசகர்களை மகிழ்விக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் .
நன்றியுடன் இங்ஙனம்
தங்கள் அன்புள்ள சோ சண்முகசுந்தரம்
Pattanam, Coimbatore -16 04-30 AM
மே 25, 2025