Ai பரிதாபங்கள்!
எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கியபோது (1992) நம் நாட்டில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் முழுமையாக அடி எடுத்து வைக்கவே அச்சப்பட்டு அந்தப் பக்கம் ஒரு காலும், இந்தப் பக்கம் ஒருகாலும் வைத்து தயங்கிக் கொண்டிருந்தது. காரணம் வேலைவாய்ப்புத் திண்டாட்டம். அமெரிக்கா போன்ற மேலைநாடுகள் தங்கள் பணிகளை இந்தியாவுக்கு அவுட்சோர்ஸ் செய்ய ஆரம்பித்த பிறகே இந்தியாவில் கம்ப்யூட்டரை நம் மக்கள் ஆதரிக்க ஆரம்பித்தனர்.
அயல்நாட்டு ப்ராஜெக்ட்டுகள் எதையும் அவுட்சோர்ஸ் செய்யாமல் நம் நாட்டுக்காகவே சாஃப்ட்வேர் தயாரிப்புகள் செய்து, எழுத்து, பேச்சு, தொலைக்காட்சி, வீடியோ, சாஃப்ட்வேர் என பலவிதங்களில் தொழில்நுட்பத்தை தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் கொண்டு சென்றதில் எங்கள் காம்கேருக்கும் எனக்கும் பெரும்பங்குண்டு.
இந்தியாவில் ஐடி நிறுவனம் தொடங்கிய முதல் பெண் சாஃப்ட்வேர் பொறியாளர் என்ற அங்கீகாரமும் கிடைத்தது.
கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தைத் தொடர்ந்து இன்டர்நெட் மெல்ல அடியெடுத்து ஆரம்பித்த காலகட்டங்களில் (2000) சில நிறுவனங்கள் சர்வரை மட்டும் மேலைநாடுகளில் இருந்து அவுட்சோர்ஸ் செய்து இங்கு இந்தியாவில் வாடகைக்கு விட்டு சம்பாதித்துக் கொண்டிருந்தனர். பொதுவாக அவர்களுக்கு தொழில்நுட்பம் குறித்தும் தெரிந்திருக்க வேண்டும். இல்லை என்றால் வெறும் சர்வரை வாடகைக்கு விட்டு சம்பாதிப்பது அப்போதுதான் தொழில்நுட்பத்துக்குத் தொடக்க நிலையில் இருந்த நம் நாட்டினருக்கு அதை கையாள்வது கடினம். ஆனால் நிலமை எப்படி இருந்தது தெரியுமா? தொழில்நுட்பம் எதுவுமே அறிந்து வைத்திராமல் பணத்தை முதலீடு செய்து சர்வரை நிர்வகிக்க ஆரம்பித்தனர்.
நாங்கள் நிறுவனம் தொடங்கி ஒவ்வொன்றையும் ஆராய்ச்சி அடிப்படையில் கண்டுபிடித்து செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதால் லாபத்தை விட ஆராய்ச்சிப் பணிகளுக்கான செலவீனம் அதிகம். அதனால் இதுபோன்ற சர்வர் நிர்வகிப்பவர்களிடம் இடம் வாங்கி அவற்றில் வெப்சைட்டுகளை வடிவமைக்க ஆரம்பித்தோம். தனி நபர்கள் கூட வெப்சைட் வைத்துக் கொள்ளும் அளவுக்கு தொழில்நுட்பத்தை இலகுவாக்கிக் கொடுத்தோம். படித்து முடித்த இளைஞர்கள் ஒவ்வொருவரும் தனி வெப்பக்கம் தொடங்கி அதில் தங்கள் பயோடேட்டவை தயாரித்து மற்றவர்களிடம் இருந்து தங்களை வேறுபடுத்திக் காட்ட ஆரம்பித்தனர். இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டது எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம்.
ஆனால் அதற்குப் பின்னால் உள்ள உழைப்பு. சொல்லி மாளாது. சர்வர் வைத்திருப்பவர்களுக்கு சாதாரண HTML பக்கங்களைக் கூட முறையாக பராமரிக்கத் தெரியாது. நாங்கள் அப்போதே EJB, SERVLET போன்ற மொழிகளில் சாஃட்வேர்கள் தயாரிக்க ஆரம்பித்து விட்டோம். நாங்கள் தயாரித்த வெப்பக்க சாஃப்ட்வேரில் வெப்பக்கங்களை அவர்கள் சர்வரில் அப்லோட் செய்வது கடினமாக இருந்தது.
அவர்கள் அலுவலகத்துக்கே சென்று சர்வரை முறையாக இயங்க வைத்து அவற்றை அவர்களுக்கும் சொல்லிக் கொடுத்து தொழில்நுட்பத்தை பரவலாக்க நான் எடுத்த முன்னெடுப்புகளை இன்று நினைத்துப் பார்த்தாலும் அத்தனை வியப்பாக உள்ளது. அன்று எந்த வியப்பும் இல்லை, அயற்சியும் இல்லை, சோம்பலும் இல்லை. உழைப்பு, உழைப்பு, உழைப்பு மட்டுமே. 1992-2000 வரை டிவிஎஸ் சாம்ப் தான். அதில்தான் சென்னை முழுவதும் சொல்லனா தன்னம்பிக்கையுடன் பறந்தேன். இப்போதும் என் தன்னம்பிக்கையில் குறைவில்லை.
அப்போதெல்லாம் வராத அயற்சி, தொழில்நுட்பம் வளர்ந்து உச்சாணி கொம்பிற்கு சென்ற பிறகு இப்போது வருகிறதென்றால் அதற்குக் காரணம் Ai.
ஆம். எங்கள் வெப்சைட்டுகளுக்கு சர்வர் தனியாக வைத்திருந்தாலும், எங்கள் கிளையிண்டுகளுக்கு அவர்கள் GoDaddy போன்ற பொதுவான சர்வர்களையே பயன்படுத்துகிறார்கள். அவர்கள் வெப்ப்ராஜெக்ட்டுகளில் ஏதேனும் பிரச்சனை என்றால் நாங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும்.
எங்கள் பொறியாளர்களாலும் முடியாவிட்டால், நான் தலையிட்டு தீர்த்து வைப்பேன். அப்போது சர்வர் நிறுவனங்களிடம் சாட்டில் பேச வேண்டி இருக்கும். நாம் ஒன்று சொன்னால் அவர்கள் ஒன்று புரிந்து கொள்வது ஒருபுறம் என்றால், நாம் சொல்லும் பிரச்சனைக்கு அவர்கள் தீர்வு சொல்லும் லட்சணம் என்ன தெரியுமா?
நாம் கேட்கும் கேள்வியை சாட்ஜிபிடி போன்ற ஏஐகளிடம் கேட்டு அவை என்ன சொல்கிறதோ அதை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து பதில் சொல்கிறார்கள்.
ஒரு வருடம் முன்புவரை சர்வர் நிறுவனங்களின் கஸ்டமர் சர்வீஸ் நன்றாகவே இருந்தது. பொறியாளர்கள் தங்கள் புத்திகூர்மையால் பதில் அளித்து பிரச்சனைகளுக்கு தீர்வு சொன்னார்கள்.
ஆனால், இப்போது எதிராளி யார் என்றே தெரியாமல் (அவர்களின் தொழில்நுட்ப அறிவை பற்றி துளியும் அக்கறை இன்றி) சாட்ஜிபிடி கொடுக்கும் பதிலை அப்படியே காப்பி பேஸ்ட் செய்தால் கோபமும் அயற்சியும் வராதா பின்னே
இப்படித்தான் சமீபத்தில் ஒரு வெப்ப்ராஜெக்ட்டில் டேட்டாபேஸ் கனக்ஷன் சரியில்லாமல் அது இயங்கவில்லை. அதாவது பிரவுசரில் ஓபன் ஆகவில்லை. இது மிக சிறிய விஷயம்.
இதற்கு அவர்கள் சர்வரில் கான்ஃபிகரேஷன் ஃபைலில் ஒரு சிறு மாற்றம் செய்தால்போதும் இயங்க ஆரம்பித்துவிடும். இதை சர்வரில் மட்டுமே செய்ய முடியும்.
அதனால் அவர்களை தொடர்பு கொண்டபோது சாட்ஜிபிடி கொடுத்த ஆலோசனைகளை எனக்கு அனுப்பினார்கள் கஸ்டமர் சர்வீஸில் (Ai ஏஜண்ட் அல்ல, மனித பொறியாளரே). வெப்சைட் டெம்ப்ளேட்டையே மாற்ற வேண்டும். யாரோ ஹேக் செய்துவிட்டார்கள். அதற்கு புரொடக்ஷன் சாஃப்ட்வேர் இன்ஸ்டால் செய்ய வேண்டும், அப்படி இப்படி என.
எனக்கு கடுமையாக கோபம் வந்து சற்று அழுத்தமான வரிகளுடன் சர்வரில் கான்ஃபிகரேஷன் ஃபைலில் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை கோடிங் (புரோகிராம்) மூலம் எழுதி அனுப்பினேன்.
பின்னர் அதை அவர்கள் அப்படியே செய்து அப்டேட் செய்தார்கள். வெப்ப்ராஜெக்ட்டும் வேலை செய்ய ஆரம்பித்தது.
அவர்கள் செய்வதும் சொல்வதும் தவறு என்பதை சுட்டிக் காட்டவும், தொழில்நுட்பத்தை புரிய வைக்கவும் எனக்கு அரைநாள் தேவைப்பட்டது. குறிப்பாக அவர்களின் ஈகோவை சரிசெய்ய போராட வேண்டி இருந்தது. Ai டம் கேட்டு அப்படியே காப்பி பேஸ்ட் செய்து பதில் அளிக்காதீர்கள். Ai சொல்வதை நீங்கள் புரிந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு சர்வீஸ் கொடுங்கள் என்பதை புரிய வைப்பதற்கும் எனக்கு தாவு தீர்ந்துவிட்டது.
சர்வரின் கஸ்டமர் சர்வீஸில் இருப்பவர்களுக்கு 21-25 வயதுக்குள்தான் இருக்கும். வாடிக்கையாளர்களின் பிரச்சனைகளை அவர்கள் காதால் கேட்டு புரிந்துகொண்டு அவர்களே யோசித்து தீர்வு சொல்லும் காலம் எல்லாம் போய் இன்று Ai உதவியுடன் வாடிக்கையாளர்களை உண்டு இல்லை என செய்துவிடுகிறார்கள்.
கம்ப்யூட்டர் தொழில்நுட்பமும், இன்டர்நெட் நுட்பமும் வளராத அன்று எப்படி தொழில்நுட்பத்தை பரப்ப முயற்சி எடுத்தேனோ, அதைவிட பலமடங்கு Ai -ல் புகுந்து விளையாட ஆரம்பித்திருக்கும் தொழில்நுட்பத்தை பரவலாக்க பெருமுயற்சி எடுக்க வேண்டி உள்ளது.
மனிதர்கள் (தொழில்நுட்பமும் தான்) மாறிக்கொண்டே இருக்கிறார்கள். அவ்வளவுதான். மற்றபடி அவர்களை தொழில்நுட்பத்துக்குப் பக்குவமாக்கும் என் முயற்சியில் நான் ஆரம்பித்த இடத்திற்கே வந்துவிட்டதை போல் உணர்கிறேன்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
Compcare Software
ஜூன் 7, 2025 | சனிக்கிழமை