#USA: விமான பேச்சு! (ஜூன் 21, 2025)

விமான பேச்சு!

அகமதாபாத் விமான விபத்து ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து மீளவே முடியாத மனநிலையில் அதற்கு அடுத்த வாரம் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்ப வேண்டிய ஏற்பாடு. ஏற்கெனவே முடிவு செய்ததுதான்.

சமூக வலைதளத்தைத் திறந்தாலே அந்த கோர விமான விபத்து செய்திகள் தான். விபத்து செய்தியையும் இறந்தவர்கள் பற்றிய செய்தியையும் வெவ்வேறு கோணத்தில் போட்டு போட்டு ஃப்ளாஷ் செய்து மனதை ரணம் செய்து கொண்டிருந்தன சமூகவலைதளங்கள்.

ரயில் பயணத்துக்கு இணையான எண்ணிக்கையில் விமானப் பயணமும் செய்திருக்கிறேன் என்றாலும், விபத்து ஏற்படுத்திய தாக்கம் மனதை முழுவதும் ஆக்கிரமித்திருந்தது. மிக சங்கடமாக இருந்தது.

சாதாரணமாகவே மேகக் கூட்டங்கள் வழியாக விமானம் கிழித்துக் கொண்டு முன்னேறும்போதும், ஜன்னல் வழியாக கண்களுக்கு தெளிவாகப் புலப்படாமல் தெரியும் பெருங்கடலையும் பார்க்கும் போதெல்லாம் விமானம் விழுந்துவிட்டால் எலும்பு கூட மிஞ்சாது என்ற எண்ணம் தோன்றாமல் இருக்காது. விமானப் பயணம் என்றல்ல, பஸ் பயணங்களின் போதும் இதே கதைதான்.

என் கற்பனை வளம் தன் திறனை ஆங்கிங்கெனாதபடி இடம் பொருள் ஏவல் இல்லாமல் எல்லா இடங்களிலும் தன் சிறகை விரித்து சுழன்று கொண்டே இருக்கும். என் சுபாவமும் இயல்பும் அப்படி.

இப்படியான மனநிலையில் ஜோதிட சானல் ஒன்றில் வித்தியாசமான தலைப்பில் வீடியோ ஒன்று கண்களில் தென்பட சங்கடத்தை விட சிரிப்புதான் வந்தது.

மிகச் சரியாக நான் பயணிக்க இருக்கும் அதே தேதியை குறிப்பிட்டு (21-06-2025) ‘நாள் குறித்தாயிற்று. சம்பவம் ஒன்று நடக்க இருக்கிறது. இந்த நாளைக் கடந்துவிட்டால் தலை தப்பிக்கும்’ என்றெல்லாம் தலைப்பிட்டு செய்தி வந்தால் ‘அட’ என சிரிப்பும் அதிர்ச்சியும் கலந்த கலவையாய் அந்த வீடியோவை வீட்டில் உள்ளோரிடம் காண்பித்து பேசி மகிழ்ந்தேன்.

இதற்காகவெல்லாம் எதையும் குறைத்துக் கொள்ளவில்லை. விமானத்தில் எதையும் சாப்பிட மாட்டேன் என்பதால் வீட்டில் இருந்தே சப்பாத்தியும், இட்லியும் தயாரானது. சிகாகோவில் உள்ள A2B -ல் சுடச்சுட டிபனும், மசாலா டீயும் குடித்துவிட்டு ஏர்போர்ட் சென்றோம்.

சிகாகோவில் இருந்து துபாய், துபாயில் இருந்து சென்னை. துபாயில் இருந்து சென்னை வரும்போது எனக்குப் பின்னால் ஒரு நடுத்தர வயது பெண் அருகில் அமர்ந்திருந்த இளைஞனிடம் பேசிக் கொண்டே வந்தார். பேசுவது தவறில்லை. 5 வரிசைக்கு காதில் விழும் அளவுக்கு தொடர்ச்சியாக சப்தமாகப் பேசுவதுதான் பிரச்சனை. யாரும் கண்டுகொள்ளவில்லை. காதில் ஹெட்செட் போட்டுக் கொண்டு திரைப்படம் பார்த்துக் கொண்டு வந்தாலும் அந்த பெண்ணின் குரல் காதைக் கிழித்தது.

ஹெட்செட்டை எடுத்துவிட்டு, திரும்பி அவரை பார்த்தாலும் அவர் நிறுத்துவதாக தெரியவில்லை. ‘துபாயில் இருந்து சென்னைக்கு அடிக்கடி வருவேன், அம்மா இறந்த பிறகு சென்னை வரவே பிடிக்கவில்லை என்று அவர் சொன்னது மட்டும் மனதில் ஆழப் பதிந்தது’.

அவருடன் பேசிக் கொண்டு வந்த அந்த இளைஞனும் சக பயணிதான். உறவினரோ, நண்பரோ இல்லை. ’அப்புறம் எப்போ குழந்தைக்கு ப்ளான் செய்திருக்கீங்க…’ என்று மிக பர்சனலான கேள்வியை வெகு சாதாரணமாக கேட்டு அவரிடம் பதில் பெற்று அறிவுரை கொடுத்து என்னவோ எனக்கு அவருடைய பேச்சு நாராசமாகத்தான் இருந்தது.

விமானத்தில் தூங்கவும் விடாமல், திரைப்படமும் பார்க்க விடாமல் சப்தமாக பேசிக் கொண்டே வந்தார். அதுவும் முன் பின் தெரியாத ஒருவரிடம் இத்தனை வியாக்கியானம் செய்து பேசுவது எனக்கு ஆச்சர்யமாகவும் இருந்தது. அந்த இளைஞனின் குரல் வெகு அமைதியாக இருந்தது. நான் திரும்பிப் பார்த்தால் பேச்சின் சப்தத்தை குறைப்பார் என்று பார்த்தால் ‘ம்ஹூம். நடக்கவில்லை’. இம்சையுடன் பயணத்தை தொடர்ந்தேன்.

ஆனால் இடையில் விமானம் குலுங்கியது. சில நொடிகள் சப்தம் ஒன்று கேட்டது. ஆனாலும் பெரிய அளவில் விமான விபத்து பற்றிய செய்தி குறித்தோ, என் ராசிக்கு நாள் குறித்த வீடியோ குறித்தோ ஒரு சிறுதுளி நினைவும் வரவே இல்லை.

வீடியோவில் கொடுத்திருந்த ’சம்பவம் ஒன்று நடக்கப் போகிறது…’ என்ற அந்த தலைப்பு என் சீட்டுக்குப் பின் சீட்டில் உள்ள பெண் சப்தமாகப் பேசிக் கொண்டே வந்ததைத்தான் குறிப்பிட்டதோ என தமாஷாக நினைத்துக் கொண்டேன். நல்ல வேளை அந்தப் பெண் சிகாகோவில் இருந்து துபாய் வரவில்லை. அப்படி வந்திருந்தால் 13 மணி நேரம் அல்லவா காது கிழிந்திருக்கும்.

சென்னை மண் நல்ல மழையுடன் எங்களை வரவேற்றது.

காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
Compcare Software
ஜூன் 21, 2025

(Visited 5,682 times, 4 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon