ஹலோ With காம்கேர் -69:   தற்கொலை எண்ணம் வராமல் இருக்க உங்கள் அறிவுரை என்ன?

ஹலோ with காம்கேர் – 69
March 9, 2020

கேள்வி:  தற்கொலை எண்ணம் வராமல் இருக்க உங்கள் அறிவுரை என்ன?

தற்கொலை எண்ணம் வராமல் இருப்பதற்கெல்லாம் அறிவுரை சொல்ல முடியாது. நம் எண்ணங்களை கட்டுக்குள் வைக்கப் பழகலாம். பயிற்சி எடுக்கலாம்.

நம் எண்ணங்களை நாம்தான் வடிவமைக்கிறோம். எல்லாம் நல்லபடியாக சென்றுகொண்டிருக்கும்வரை நம் எண்ணம் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். சூழல் எல்லை மீறும்போது நம் எண்ணங்களும் நம் கட்டுப்பாட்டை இழக்கும்.

ஆக சூழலை எல்லை மீறாமல் வைத்திருப்பதில்தான் சூட்சுமம் உள்ளது.

ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும். எந்த சூழலிலும் அதை மறக்காமல் இருக்க வேண்டும். அதாவது, நாம் தற்கொலை செய்துகொள்வதால் நம்மைச் சுற்றி இயங்குகின்ற இந்த உலகில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை. நம் ரத்த சொந்தங்களுக்கு வேண்டுமானால் சில நாட்கள் அதன் தாக்கம் இருக்கும்.

காலையில் அப்பா இறந்த செய்தியை ஃபேஸ்புக் ஸ்டேட்டஸில் போட்டுவிட்டு மாலையில் தன் நண்பரின் ஃபேஸ்புக் புரொஃபைல் புகைப்படத்துக்கு லைக் போட்டு, லவ்லி என பின்னூட்டம் போட்டு காலத்தை கடந்து சென்றுகொண்டிருக்கும் பலரை நான் பார்த்திருக்கிறேன். இவ்வளவுதான் உலகம்.

அதுபோல நம் கஷ்டங்களை பிறர் அதே மனோபாவத்துடன் புரிந்துகொள்ள வேண்டும் என்பதையெல்லாம்கூட எதிர்பார்க்க முடியாது.

சென்ற மகளிர் தினமன்று எனக்கு விருது அளிப்பதற்காக ஒரு சேவை நிறுவனம் தொடர்புகொண்டது. அவர்களின் ஆன்மிக இலக்கிய சேவை பற்றி அறிமுகம் செய்துகொண்டார்கள்.

என்னைப்போல் 10 பெண்களுக்கு விருது கொடுப்பதாகவும் என்னைப் பற்றிய தகவல்களை அனுப்பி வைக்கச் சொன்னார்கள். அனுப்பியிருந்தேன். சில தினங்களில் ஒரு பிரமாண்டமான பிரவுச்சர் தயாரித்து அதில் சாதனைப் பெண்களின் புகைப்படங்களுடன் அவர்கள் பற்றிய தகவல்களையும் பிரசுரம் செய்து அனுப்பி இருந்தார்கள். பத்து பக்கங்களுக்கும் குறையாத அழைப்பிதழ். ஊர் முழுக்க அதை விளம்பரப்படுத்தி இருந்தார்கள்.

அதில் பெண்களின் புகைப்படங்களுக்கு கீழே அவரவர் துறை சார்ந்த சாதனைகளை சொல்லாமல் அவர்களின் பர்சனல் வாழ்க்கை குறிப்புகளை வெளியிட்டிருந்தார்கள். அவர்களை நான் தொடர்புகொண்டு இப்படி பெண்களின் பர்சனல் வாழ்க்கை விவரங்களை அச்சடித்து கொடுத்தால் இதுவே அவர்களுக்கு தொந்திரவாக அமையுமல்லவா என பொறுமையாக எடுத்துச் சொன்னேன்.

ஆனால் அவர்கள் அதை சரியான கோணத்தில் எடுத்துக்கொள்ளாமல் ஏதோ பெண்களுக்கு விருது அளிப்பதையே தங்கள் சாதனையாகவும் தங்களின் பரோபகாரம் போலவும் கர்வத்துடன் பேசியதால் நான் அந்த விருதை புறக்கணித்தேன்.

இதை என் நட்பு வட்டத்தில் உள்ள ஒருசிலருடன் பேசியபோது பகிர்ந்துகொண்டேன். அவர்களும்  ‘அப்படியா, இப்படியெல்லாம் கூட இருக்கிறார்களே… நீங்கள் சொல்வது சரிதானே… பெண்களுக்கு விருதுகொடுக்கிறேன் என நினைத்து அவர்களுக்கு கஷ்டம் கொடுக்கிறார்களே’  என்றெல்லாம் பேசிவிட்டு இந்த வருட பெண்கள் தினமன்று அவர்கள் அதே அமைப்பில் இருந்து விருது பெற்றுள்ளார்கள்.

இதை எதற்கு சொல்கிறேன் என்றால், இவ்வளவுதான் உலகம். உன் கஷ்டம் உன்னோடு. என்னை அது ஒருதுளியும் பாதிக்கப் போவதில்லை. எனக்கு வரும்போது நான் பார்த்துக்கொள்கிறேன். இந்த மனோபாவம் பெருகிவிட்ட இன்றைய சூழலில் நீங்கள் உங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்வதால் எதுவுமே மாறப்போவதில்லை என்பதை மட்டும் நினைவில் வையுங்கள்.

சில ஸ்டார் ஓட்டல்களில் பாலும் டிகாஷனும் சர்க்கரையும் தனித்தனியாக கொடுப்பார்கள். பாலில் நமக்குத் தேவையான டிகாஷனையும் சர்க்கரையையும் நாமாக கலந்துகொள்ள வேண்டியதுதான். இப்படித்தான் நம் வாழ்க்கை பல நேரங்களில் எல்லா வாய்ப்புகளையும் நம் முன் வைக்கும். நாம்தான் நமக்குத் தேவையானதை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

நமக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்துத்தான் பார்ப்போமே. வெற்றி தோல்வி என பிரித்துப் பார்க்க வாழ்க்கை ஒன்றும் ஓட்டப்பந்தயம் அல்ல.

வாழ்க்கை ஒரு பயணம். நாம் அதில் ஒரு பயணியாக பயணிக்க வேண்டும். அவ்வளவே.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 33 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon