ஹலோ With காம்கேர் -117: மகிழ்வித்து மகிழவும், மகிழ்ந்து மகிழ்விக்கவும் லாஜிக் தெரியுமா?

ஹலோ with காம்கேர் – 117
April 26, 2020

கேள்வி: மகிழ்வித்து மகிழவும், மகிழ்ந்து மகிழ்விக்கவும் லாஜிக் தெரியுமா?

எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி. 60+ வயதிருக்கும். தன் ஐம்பது வயதுக்கு மேல் தன்னிடம் உள்ள எழுத்துத்திறமையைக் கண்டறிந்து கதை, கவிதை, என பத்திரிகைகளுக்கு எழுதி வந்தார்.

அவர் பிள்ளைகளுக்குத் திருமணம் ஆகி சென்றுவிட அவர் சென்னையில் தனித்து இருக்கிறார். கணவர் 2 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். சென்ற ஆண்டு வரை அவருடன் அவரின் வயதான அம்மாவும் வசித்து வந்தார். அம்மா படுத்தப்படுக்கை என்பதால் அவரை கவனித்துக்கொள்வதிலேயே நிறைய நேரம் செலவாகிவிடுவதால் நிறைய எழுத முடிவதில்லை என்று சொல்வார்.

சென்ற வருடம் அவர் அம்மா இறந்து விட்டார். ஆனால் அதன் பிறகு அவர் எழுதுவது குறைந்தது. ஒருகட்டத்தில் நின்றே போனது. அதற்கு அவர் சொன்ன காரணம் வியப்பாக இருந்தது.

‘என் அம்மா படுத்தப்படுக்கையில் இருந்தாலும் நிறைய புத்தகங்கள் வாசிப்பார். அன்றாட செய்தித்தாள்களை படித்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தும் நாட்டு நடப்புகளை என்னுடன் பகிர்ந்துகொண்டு விவாதிப்பார். எழுதுவதற்கு என் அம்மாதான் மறைமுகமாக மனதளவில் ஊக்கப்படுத்தி வந்திருக்கிறார் என்பது அவர் உயிருடன் இருந்தபோது தெரியவில்லை, இறந்தபிறகுதான் தெரிந்தது. எதிலும் வெறுமை. ஊக்கமின்மை. பகிர்ந்துகொள்ள ஆள் இல்லாததால் எழுதுவதற்கு வார்த்தைகள்கூட வருவதில்லை. இப்போது நிறைய நேரம் இருக்கிறது. ஆனால் எழுத மனதில் ஊக்கம் இல்லை’ என்று சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டார்.

இதில் ஓர் உளவியல் உள்ளது. கடைசியில் சொல்கிறேன். இப்போது ஒரு கதையை படியுங்கள்.

ஒரு திருடன் சர்கஸ் பார்க்கப் போனான். வட்டமான நெருப்பு வளையத்துக்குள் சர்கஸ் வீரன் ஒருவன் பாய்கின்ற காட்சி. நிகழ்ச்சி முடிந்ததும் திருடன் அந்த சர்கஸ் வீரனிடம் சென்று இந்த பணிக்கு உனக்கு எவ்வளவு சம்பளம் தருகிறார்கள் என கேட்டான். அதற்கு அந்த வீரன் ‘ஆயிரம் ரூபாய் தருகிறார்கள்’ என்றபோது ‘என்னுடன் வா, உனக்கு ஐயாயிரம் தருகிறேன்’ எனக் கூறி அழைத்துச் சென்றான்.

அடுத்தநாள் அந்தத் திருடன் ஒரு வீட்டில் திருடச் செல்லும்போது சர்கஸ் வீரனையும் அழைத்துச் சென்றான். அந்த வீட்டின் சுவரின் மேல்பக்கம் ஒரு துளை இருந்தது. அதை ஒரு ஆள் நுழையும் அளவுக்கு பெரிதுபடுத்திக்கொடுத்த பிறகு சர்கஸ் வீரனிடம், ‘இந்தத் துளை வழியாக வீட்டுக்குள் நுழைந்து நகைகளை திருடி எடுத்து வா’ என்று சொன்னான்.

அதற்கு சர்கஸ் வீரன் கொஞ்சமும் தாமதிக்காமல் ‘அப்படிச் செய்ய வேண்டுமானால் பத்தாயிரம் பேரைக் கொண்டு வா’ என சொல்ல திருடனுக்கு பேரதிர்ச்சி. ‘ஏன்’ என கேட்கிறான்.

சர்கஸ் வீரன், ‘நான் சர்கஸில் நெருப்பு வளையத்துக்குள் நானாக நுழைந்து செல்வதில்லை. சர்கஸ் பார்க்க வருகிற பத்தாயிரம் மக்கள் கை தட்டுவதினாலும் விசில் அடித்து உற்சாகப்படுத்துவதினாலும் எனக்குள் பொங்குகின்ற உற்சாகத்தினால்தான் நெருப்பு வளையத்துக்குள் அத்தனை லாவகமாக நுழைகிறேன். நெருப்பு வளையத்துக்குள் நுழைவதைப்போல இந்த சுவரின் பெரிய ஓட்டைக்குள் நுழைந்து உள்ளே சென்று வர வேண்டுமானால் எனக்கு பத்தாயிரம் பேர் கை தட்ட வேண்டும்’ என்று சொல்ல திருடன் தலைசுற்றி மயக்கமடைந்தான். இந்தக் கதையை புலவர் கீரன் அவர்கள் ஒரு சொற்பொழிவில் சொல்லியுள்ளார்.

இந்த இரண்டு நிகழ்வுக்கும் பொதுவாக ஓர் உளவியல் இருப்பதை கவனியுங்கள்.

நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம்மிடம் காட்டுகின்ற அன்பிலும், ஆதரவிலும், ஊக்கத்திலும் உண்டாகும் உற்சாகமே நம் ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. உற்சாகமாக இருக்கும்போதுதான் மனமும் சுறுசுறுப்புடன் செயல்படும். துறுதுறுவென எதையாவது செய்ய வைத்து நம்மை உயிர்ப்புடன் இயங்க வைக்கும். உற்சாகம் குறையும்போது நம்மீது ஒட்டிக்கொண்டிருக்கும் சிறு தூசியைக்கூட நம்மால் தன்னிச்சையாக தட்டிவிட்டுக்கொள்ள முடியாது.

நம்முடைய வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் நாம் மட்டுமே காரணமில்லை. நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மை சுற்றி உள்ளவர்களை பெருமகிழ்ச்சியோடு வைத்திருப்போம்.

மகிழ்வித்து மகிழ்வோம், மகிழ்ந்து மகிழ்விப்போம் வாங்க!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 37 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon