தினமணி- மகளிர் மணி: 14 நாட்களில் 14 புத்தகங்கள் (March 31, 2021)

31.03.2021 தேதியிட்ட தினமணி – மகளிர்மணியில் படிக்க!

சென்னையில் இயங்கும் ‘காம்கேர்’ தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்,  தொழில்நுட்ப வல்லுநர், படைப்பூக்கம் மிக்க இயக்குநர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர் என பன்முகம் கொண்டவர் காம்கேர் கே.புவனேஸ்வரி.

கணிப்பொறியியலில் முதுநிலை பட்டமும், மேலாண்மையியல் பட்டமும் பெற்ற இவர்,  காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை கடந்த 28 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இவரது ‘காம்கேர் டிவி’ என்ற யூ-டியூப் சேனல் பிரபலமாகி வருகிறது.

இவர் நூற்றுக்கு மேற்பட்ட தொழில்நுட்பம் மற்றும் வாழ்வியல் புத்தகங்களை எழுதி இருக்கிறார். தமிழகம்,  இந்தியா மட்டுமில்லாமல் பல வெளிநாடுகளிலுள்ள நூலகங்களில் இவரது  புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்திலுள்ள பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே உரை நிகழ்த்தி அவர்களின் உந்துசக்தியாகவும் விளங்குகிறார்.

இவர், அண்மையில் நிறைவடைந்த சென்னை புத்தகக் கண்காட்சியின்போது, தினசரி தான் எழுதிய ஒரு நூலை மின்னூல் (இ-புத்தகம்) வடிவில் இணையத்திலேயே (வெர்ச்சுவல்) வெளியிட்டு, எதிர்கால நூல் வெளியீட்டுத் துறைக்கு வழிகாட்டி இருக்கிறார். அதுகுறித்து அவருடன் உரையாடியதிலிருந்து…

மேடை நிகழ்ச்சிக்கும் வெர்ச்சுவல் நிகழ்ச்சிக்கும் என்ன வித்தியாசம்?

பொதுவாக நிகழ்ச்சி என்றால் மேடை இருக்கும்; பேச்சாளர்கள் இருப்பார்கள்; பார்வையாளர்கள் இருப்பார்கள்; நிகழ்ச்சி நடைபெறும் நாளில், அந்தக் குறிப்பிட்ட  நேரத்தில் எத்தனை பார்வையாளர்கள் வருகிறார்களோ அவர்கள் மட்டுமே அந்த நிகழ்ச்சியைப் பார்வையிட முடியும். அதன் டிஜிட்டல் வெர்ஷனை யூ-டியூப் சேனல்களிலும், சமூக வலைதளங்களிலும் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

நேரடியாகக் கலந்துகொள்வது, அனைவருக்கும் சாத்தியமில்லாத ஒன்று. ஆனால் நான் அறிமுகப்படுத்திய  ‘தினம் ஒரு புத்தக வெளியீடு!’ என்ற வெர்ச்சுல் நிகழ்ச்சியில், காம்கேர் டி.வி.யும், சமூக வலைதளங்களுமே நிகழ்ச்சியின் மேடை. ஆன்லைனில் தொடர்பிலுள்ள அனைவருமே பார்வையாளர்கள். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.

இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்ன?  

இந்த வருடம் நடைபெற்ற சென்னை புத்தகக் காட்சியை முன்னிட்டு, தினம் ஒரு புத்தக வெளியீடு என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினேன்.  இதன் நோக்கம் 2021 புத்தகக் காட்சி நடைபெற்ற 14 நாட்களும் (பிப்ரவரி 24 முதல் மார்ச் 9 வரை) தினமும் ஒரு நூலை அமேசானில் வெளியிடுவது என்பதுதான்.

நான் எழுதி, எங்கள் காம்கேர் நிறுவனம் வெளியிட்ட 14 நூல்கள் இந்த 14 நாட்களில் தொடர்ச்சியாக மின்னூலாக வெளியிடப்பட்டன. 14 நாட்களில் 14 நூல்கள் வெளியீடு என்பதே எங்கள் நோக்கம்.

இந்த நிகழ்ச்சி நடைபெற்றது எப்போது?

ஏற்கெனவே சொன்னதுபோல இது வெர்ச்சுவல் நிகழ்ச்சி. ஒருநாள் மட்டும் நடைபெறவில்லை. 14 நூல்களை வெளியிடத் திட்டமிட்டதால்,  இந்தப் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியை 14 நாட்களும் நடத்துவதாக ஏற்பாடு செய்தோம். பிப்ரவரி 24 அன்று முதல் நாள் நிகழ்ச்சி. மார்ச் 9 உடன் 14 நாட்கள் இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது; 14 மின்னூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம் என்ன?

இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கவும், அறிமுகப்படுத்தவும் சில சிறப்பு விருந்தினர்களை அழைத்திருந்தேன். அவர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஏதேனும் ஒரு நேரத்தில் வருகை தந்து, நூல் குறித்த தங்கள் கருத்துக்களை எழுத்து வடிவிலோ, விடியோவாகவோ அல்லது இரண்டு விதங்களிலுமோ பதிவு செய்தார்கள். அவற்றை என் முகநூல் பக்கத்தில் உடனுக்குடன் பகிர்ந்தேன். மேலும் எங்கள்  காம்கேர் டி.வி. யூ-டியூப் சேனலிலும் அவை ஒளிபரப்பாயின.

இதுவரை எத்தனை நூல்களை எழுதி இருக்கிறீர்கள்?

இதுவரை 139 நூல்களை எழுதி, வெளியீட்டிருக்கிறேன். ‘தினம் ஒரு புத்தக வெளியீடு’ திட்டத்தின் கீழ், புத்தகக் கண்காட்சி நடைபெற்ற 14 நாட்களில் 14 மின்னூல்களை வெளியிட்டிருக்கிறேன்.

‘வாழ்க்கையின் அப்பிடைசர்,  வாழ்க்கையின் ஓடிபி,  வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்,  குழந்தைகள் உலகில் பெற்றோருக்கான பாஸ்வேர்ட், எந்தப் பாதையில் உங்கள் பயணம், பெண், மாறிவரும் மனோபாவமும் மாற்றத்துக்கான பாஸ்வேர்டும், பாரதப் பெருமிதங்கள், பிக் டேட்டா- தகவல் சூழ் உலகில் பிக் பிரதர், கனவு மெய்ப்பட, இலக்கில் கரையுங்கள், மனிதனாய் வாழ்வதற்கான ஃபார்முலா, கொரோனா லாக்டவுனில் முதல் மூன்று மாதங்கள், வல்லமை தாராயோ?’ ஆகிய 14 நூல்களும், இ-புத்தகங்கள். இவற்றை அமேசானில் வெளியிட்டுள்ளேன்.

இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எப்படித் தோன்றியது?

நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்ளும் ஒரு உத்திதான் இது. நமக்குப் பிடித்தமான ஒரு வேலையை அதிகப்படியாகச் செய்யும்போது நம் உற்சாகம் கூடி நமக்குள் நேர்மறைச் சிந்தனைகள் அதிகரிக்கும். அந்த வகையில், என் அடிப்படைத் திறமையான எழுத்து என்பது அனிமேஷன், ஆவணப் படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பல்வேறு பரிமாணங்களை எடுத்திருந்தாலும், புத்தகங்களை வெளியிட்டு நான் அறிந்ததை ஆவணப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி கிடைக்கிறது.

இதனை எப்படிச் செய்தால் இன்றைய நவீனத் தொழில்நுட்ப உலகில் பரவலாக்க முடியும் என்று யோசித்து,  தினம் ஒரு புத்தக வெளியீட்டை ஆன்லைனில் நிகழ்த்தி, வெர்ச்சுவல் நிகழ்ச்சியாக்கி உள்ளேன்.

உங்களால் எவ்வாறு தினமும் ஒரு புத்தகம் வெளியிட முடிகிறது?    

எனது பத்து வயதில் “கோகுலம்’ குழந்தைகள் மாத இதழில் எனது முதல் கதை வெளியானது. அப்போதே, “இதுதான் உன் திறமை’ என்று எனக்கு திசை காட்டப்பட்டது. அதை உறுதியாகப் பற்றிக் கொண்டேன். அதனால்தான், சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக, நாள் தவறாமல் ஏதேனும் எழுதி வருகிறேன்.

நான் காம்கேர் நிறுவனத்தைத் தொடங்கிய பிறகு, என் தொழில்நுட்ப அனுபவங்களை அந்தந்தக் காலகட்டங்களிலேயே புத்தகமாக வெளியிட்டு வந்தேன். மாதம் ஒரு புத்தகம் வெளியிட்ட காலமெல்லாம் இருந்திருக்கிறது.

அதிகாலையில், பிரம்ம முகூர்த்தத்தில் எழுதுவது எனது பழக்கம். தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் இந்நாளில், தினசரி எனது முகநூல், இணையதளம், வலைப்பூ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தினந்தோறும் எனது படைப்புகளை வெளியிட்டு வருகிறேன். தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி குறைந்த விலையில் மின்னூலாக எனது புத்தகங்களை வெளியிட முடிகிறது.

இந்த மின்னூல்களை எங்கு வாங்குவது? எப்படி வாசிப்பது, எப்படி சேகரிப்பது?

நாங்கள் வெளியிடும் மின்னூல்கள் அமேசான் இணையதளத்தில் கிடைக்கும். ஆன்லைனில் கட்டணம் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். மொபைல் போனில் கிண்டில் ஆப் என்ற செயலியை தரவிறக்கம் செய்துகொண்டு மின்னூல்களை வாசிக்கலாம். இடத்தை அடைத்துக்கொள்ளாமல் எத்தனை மின்னூல்களை வேண்டுமானாலும் வாங்கி சேகரிக்க முடியும்; ஆஃப் லைனிலும் படிக்க முடியும்;  இணையத் தொடர்பு தேவையில்லை.

உங்கள் மொபைல் போன், ஐபேட், டேப்லெட், லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்  என எதில் வேண்டுமானாலும் மின்னூல்களைப் படிக்க முடியும். கிண்டில் ஆப் செயலி மட்டுமே தேவை. மேலும் கிண்டில் சாதனத்திலும் இதனைப் படிக்கலாம். அதிகம் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கிண்டில் சாதனத்தைப் பயன்படுத்தினால், கண்களுக்கு நல்லது.

எங்கே வாங்குவது?

காம்கேர் கே.புவனேஸ்வரி எழுதி வெளியிட்டுள்ள நூல்கள், அமேசான் இணையதளத்தில் மின்னூல்களாகக் கிடைக்கின்றன.

31.03.2021 தேதியிட்ட தினமணி – மகளிர்மணியில் படிக்க!

(Visited 54 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon