ஜம்முனு வாழ காம்கேரின் OTP-178: பெண்!

பதிவு எண்: 909 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 178
ஜூன் 27, 2021

பெண்!

இரண்டு தினங்களுக்கு முன்னர் கேரளாவில் ஒரு இளம் பெண் வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  வசதியான குடும்பத்தச் சேர்ந்தவர். ஆயுர்வேதம் படித்தவர். இவரை திருமணம் செய்து கொண்டவர் மோட்டார் வாகன துறையில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர். மனைவியை அடித்துக் கொடுமை செய்து தற்கொலை வரை கொண்டு சென்றுள்ளார்.

கொலையா, தற்கொலையா என்ற விவாதத்துக்கு நான் வரவில்லை. எதுவாக இருந்தாலும் பெண்கள் பொறுத்துக்கொண்டு வாழ்வதும், பெண்களைப் பொறுத்துக்கொள்ளச் சொல்லும் பெண்ணின் குடும்பமும் சாபம்.

இந்த செய்தியைப் படித்தபோது சென்ற ஆண்டு நான் பார்த்த Thapaad என்ற இந்தித் திரைப்படம் நினைவுக்கு வந்தது.

அந்தத் திரைப்படம் குறித்து நான் பதிவு எழுதியபோது ‘ஒரே ஒரு அடிக்காக விவாகரத்து வரை செல்வதா? இன்றைய பெண்கள் பெண்ணியம் அது இதுவென்று முற்போக்காக இருப்பதாகக் காட்டிக்கொண்டு, கொஞ்சமும் பொறுமை இல்லாமல் வாழ்க்கையை சீரழித்துக்கொள்கிறார்கள்… குடிசையில் வாழ்கின்ற பெண்களைப் பாருங்கள்… குடித்துவிட்டு வரும் கணவனின் அடி உதைகளைத் தாங்கிக்கொண்டே குடும்பத்தைக் காப்பாற்றவில்லையா அந்தப் பெண்கள்…’ என்ற நோக்கில் ஒருவர் பின்னூட்டமிட உடனடியாக அந்த பின்னூட்டத்தை நீக்கிவிட்டு அவருக்குத் தகவல் கொடுத்தேன்.

மீண்டும் அவர் அதே கோணத்தில் தனித்தகவலில் விவாதிக்கத் தொடங்க ப்ளாக் செய்தேன்.

பெண்களின் உணர்வுகளை மதிக்கத் தெரியாதவர்களை என் நட்பு வட்டத்தில் வைத்துக்கொள்ளக் கூட மனம் வரவில்லை. இணைந்து குடும்பம் நடத்துவதற்காக திருமணம் செய்து கொண்டு கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி அடி உதை என தன்னைச் சின்னாபின்னப்படுத்துபவனைப் பொறுத்துக்கொண்டு எப்படித்தான் வாழ்கிறார்களோ என நான் நினைத்துக்கொள்வேன்.

வரதட்சணைக் கேட்பதே பிச்சை எடுப்பதற்கு சமம். அதுவும் வாழ்க்கை நடத்த வரதட்சணைக் கேட்பது தன்னைத் தானே விலைக்கு விற்பதற்கு சமம். எந்த பொருளாவது தன்னைத் தானே விற்பனை செய்துகொள்ளுமா? ஆனால்  ‘ஆண்’ மட்டுமே தன்னைத் தானே விற்பனை செய்துகொள்கிறான். அதுவும் இந்த விலை கொடுத்து வாங்க வேண்டும் என்ற அராஜகம் வேறு.

விதிவிலக்காய் இருக்கும் ஆண்கள் மன்னிக்கவும். இது உங்களுக்கான கருத்துக்கள் அல்ல. ஆனால் இதில் உள்ள வலிகளை புரிந்துகொள்ளுங்கள்.

‘அடி’ என்பது மற்றவர்களைப் பொருத்தவரை சின்ன விஷயம்தான் ஆனால் அதற்குத்தான் எத்தனை வலிகள் என்பதை Thappad எனும் இந்தி திரைப்படத்தில் மிக ஆழமாக உணர்த்தியுள்ளார்கள்.

குடும்பமே உலகம் என வாழும் ‘அமு’ என்ற பெண்!

ஒரு ஹய்ஸ் ஒஃப்ய். வீட்டையும் கணவனையும் மட்டுமே தன் உலகமாகக்கொண்டு சந்தோஷமாக வாழும் அமு என்ற பெண்ணின் வாழ்க்கைதான் கதையின் மையம். இவளைச் சுற்றி இயங்கிக்கொண்டிருக்கும் பல பெண்களின் உணர்வுகள்தான் இந்த திரைப்படம்.

இவளின் அப்பா அம்மா, கணவன் விக்ரமின் அப்பா, அம்மா என சந்தோஷமாகவே வாழ்க்கை சென்றுகொண்டிருக்கிறது.

வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்!

இவள் வீட்டில் பணிசெய்யும் பெண்  மகிழ்ச்சியாக குதூகலத்துடன் வேலைகளை செய்கிறாள். அவளும் தன் கணவன் மற்றும் மாமியாருடன் வாழ்ந்து வருகிறாள்.

வக்கீலாக பணியாற்றும் ஒரு பெண்!

தனது திறமையால் ஜொலிக்கும் ஒரு வக்கீல். தன் பணியினால் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் அவளை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. அவளும் தன் கணவன் மற்றும் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட மாமனாருடன் வாழ்ந்து வருகிறாள்.

கணவனை இழந்த ஒரு பெண்!

கணவனை இழந்த ஒரு பெண் பள்ளியில் படிக்கும் பதின்ம வயது மகளுடன் வாழ்ந்து வருகிறாள். அவளும் மகிழ்ச்சியாகவே இருக்கிறாள்.

இப்படி எல்லோரும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்துவருகிறார்கள். பிறகு என்ன பிரச்சனை இருந்துவிடப் போகிறது. இதுபோதாதா வாழ்க்கைக்கு என மேலோட்டமாக சிந்திப்பவர்கள் வெகு இயல்பாய் சொல்லி விட்டுப் போய் விடுவார்கள்.

ஆனால் பெண்களுக்கு இது மட்டும் போதாது என்பதை பார்ப்பவர்கள் அனைவரது முகத்திலும் அறைந்துச் சொல்லி இருக்கிறது இந்தத் திரைப்படம்.

ஒரு பார்ட்டி. பதவி உயர்வு, வெளிநாட்டு வாழ்க்கை அனைத்தும் அலுவலக பாலிடிக்ஸினால் சிதைந்துபோக அந்த பார்ட்டியில் மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்யும் தன் கணவன் விக்ரமை தடுத்து சமாதானப்படுத்தி அமு அழைத்துச் செல்ல முற்படும்போது அவன் அவளை ஓங்கி அறைந்துவிடுகிறான். அதன் பிறகு வீட்டுக்கு வந்தும் மன்னிப்பும் கேட்கவில்லை. கணவன் மனைவிக்குள் இதெல்லாம் சகஜம் என அனைவரும் மௌனமாகக் கடக்க உடைந்துபோகும் அமு எடுக்கும் விவாகரத்து முடிவும் அதற்குப் பிறகான நிகழ்வுகளும்தான் கதையின் களம்.

தன் தனித்திறமையால் ஜெயித்துக்கொண்டிருக்கும் வக்கீல் பெண்ணின் கணவன் அவளுக்குத் தன்னாலும் தன் தந்தையாலும்தான் வாய்ப்புகள் வருகிறதென்று சொல்லி சொல்லி மட்டம் தட்டுகிறான்.

வீட்டு வேலை செய்யும் பெண் வேலை செய்யும் இடத்தில் பூரண மகிழ்ச்சியுடன் ஈடுபாட்டுடன் பணி செய்கிறாள். ஆனால் வீட்டில் தினமும் கணவனிடம் அடிவாங்குகிறாள்.

கணவனை இழந்து வாழும் பெண்ணை அவள் மகள் திருமணம் செய்துகொள்ளுமாறு சொல்ல அவள் பார்க்கலாம் பார்க்கலாம் என சொல்லி வருகிறாள்.

இதில் வரும் பெண்கள் அனைவருமே வெளியில் பார்ப்பதற்கு சந்தோஷமாக இருப்பதைப் போல தெரிந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் நிரந்த வலிகளை அவர்களால் மட்டுமே உணர முடியும் என்பதை திரைப்படத்தைப் பார்ப்பவர்கள் அனைவருக்குமே உணர வைத்துள்ளார் இயக்குனர்.

கதை நாயகி அமு விவாகரத்துப் பெறுகிறாள். வக்கீல் கணவனைப் பிரிந்து வருகிறாள். வீட்டு வேலை செய்யும் பெண் தினமும் அடிக்கும் தன் கணவனுக்கு ஒரு அறை கொடுத்து மிரட்டுகிறாள். கணவனை இழந்து வாழும் பெண் மறுமணம் எல்லாம் வேண்டாம், இந்த வாழ்க்கையே மகிழ்ச்சியாக உள்ளது என மகளிடம் சொல்கிறாள். இப்படி அவரவர் வாழ்க்கையை அவரவர்கள் போக்கில் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பிக்கிறார்கள்.

இதில் ஆண்களையும் குறை சொல்லவில்லை. பெண்களையும் புரட்சிகரமான பெண்ணியவாதிப் பெண்களாகக் காட்டவில்லை. இளம் தலைமுறையினர், முந்தைய தலைமுறையினர் என அனைவரையுமே நல்லவர்களாகக் காட்டியுள்ளார்கள்.

நடக்கும் உணர்வு ரீதியான எல்லா தவறுகளுக்கும், தங்கள் ஆண் பிள்ளைகளுக்கு பெண்களின் உணர்வுகளைச் சொல்லித்தராமல் காலம் காலமாக ‘நீ அம்பளை சிங்கம்டா’ என சொல்லிச் சொல்லி பெற்றோர்கள் வளர்த்துவிட்டதையே காரணம் என்பதை படம்பிடித்துக் காட்டியுள்ளது இந்த திரைப்படம்.

ஆண்கள் செய்யும் தவறுகளை தவறு என்றே சொல்லிக்கொடுக்காமல், அதற்கு வருந்த வேண்டும் என்கிற அடிப்படை மனிதாபிமானத்தைக்கூட உணர்த்தாமல், அதற்காக மன்னிப்புக் கேட்கும் மனோபாவத்தைக் கூட ஊட்டாமல் பெண்கள்தான் அனுசரணையாக ஒத்துழைப்பு கொடுத்து வாழ வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் தங்கள் ஆண் பிள்ளைகளை தவறாக வளர்க்கும் பெற்றோர்களுக்குப் பாடம் எடுத்துள்ளார்கள்.

தங்கள் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் என்பதே பெண்களின் ஆகப் பெரிய சந்தோஷம் என்பதை சொல்லிச் செல்லும் அற்புதமான திரைப்படம்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 920 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon